Wednesday, 19 February 2025

காத்திருத்தலின் இருள்..

காலம் என் இதயத்தை

கறுப்பு ரோஜாவாக்கியது

ஒவ்வொரு இதழும்

வாடிய நம்பிக்கைகள்

இருட் கூடாரத்தில்

நான் ஒரு சிறைப்பறவை

என் இறக்கைகள்

உதிர்ந்து போன பின்னும்

பறக்க முயல்கிறேன்

வானம் என்னை நிராகரிக்கிறது

-

அவள் மௌனம் ஒரு கத்தி

என் நெஞ்சை அறுக்கும் கூர்மை

ஆனால் இந்த வலி எனக்கு பழக்கமானது

வேதனை என் இரத்தத்தில் கலந்த விடம்

நான் அதைப் பருகி பருகி வளர்ந்தேன்

இப்போது அது என் உயிர்மூச்சு

-

‘ஒன்றுமில்லை’ என்பாள்

ஆனால் அந்த வார்த்தைகள்

பொய்களின் புதைகுழி

நான் அதில் விழுந்து கொண்டிருக்கிறேன்

எப்போதும் வீழவே செய்கிறேன்

கீழே எங்கும் இருள்தான்

மேலே அவள் முகம் ஒரு மங்கிய நிலவு

-

வரக்கூடுமென காத்திருந்து காத்திருந்தே

என் இளமை கருகி மடிந்தது

ஒவ்வொரு காலையும் ஒரு சவப்பெட்டி

நான் அதில் என் கனவுகளை புதைக்கிறேன்

ஆனால் அவை இறக்க மறுக்கின்றன

என் நினைவுகளில்

அழுகிக் கொண்டிருக்கின்றன

-

இன்னொரு நிழல்

அவள் கண்களில் நடனமாடுகிறது

அந்த நிழலுக்கும் நானே சாட்சி

என் மௌனமே என் சாபம்

ஒவ்வொரு அசைவிலும் நான் சிதைகிறேன்

-

இப்போது நான் ஒரு வெற்றுக் கூடு

காலம் என்னை வெறுமையாக்கியது

என் எலும்புகளில் காற்று ஊளையிடுகிறது

ஆனால் இந்த வெற்றிடத்திலும்

எதையோ இன்னமும் நம்புகிறேன்

காத்திருக்கிறேன்..

No comments:

Post a Comment