இன்று காலை நான் எழுந்தபோது
என் நிலம் வேறொருவனின் கைகளில்
கருகிய விதைகளாய் உதிர்ந்து கொண்டிருந்தது
பழைய நாட்காட்டிகளில் குறித்த நாட்கள் போல
என் நண்பர்கள் ஒவ்வொருவராய் மறைந்து போனார்கள்
-
அவர்களின் கண்களில் நான் கண்ட கனவுகள்
இப்போது துப்பாக்கிக் குழல்களில் உறங்குகின்றன
வெறுமையின் நிழல்கள் வளர்ந்து
பெருங்காடுகளாய் என் நினைவுகளை மூடுகின்றன
-
ஒவ்வொரு மாலையிலும்
புதிய கல்லறைகள் முளைக்கின்றன
பழைய போராட்டங்களின் தழும்புகள்
இன்னும் குணமாகவில்லை
காலம் என்கிற கரையான்
எங்கள் வரலாற்றை மெல்ல மெல்ல அரிக்கிறது
-
ஆனால் இந்த மண்
தன் குருதியை மறக்கவில்லை
ஒவ்வொரு விதையிலும்
பழைய போராட்டங்களின் நினைவுகள்
புதிய வேர்களாய் முளைக்கின்றன
-
எங்கள் வீதிகளில் அறம் இறந்து கிடக்கிறது
இன்னும் மீந்திருக்கும்
அதன் சாட்சிகள் நாங்கள்
காலத்தின் கையில் கரைந்து போகும்
எங்கள் காலடித் தடங்களில்
இன்னொரு தலைமுறை
தன் கதையைத் தேடுகிறது..
No comments:
Post a Comment