Wednesday, 19 February 2025

தேசம் அவர்களைக் காணும்..

இந்த மண்ணில் நாம் பிறந்தோம்

கடலின் ஓசை எங்கள் தாலாட்டு

மலைகளின் வடிவம் எங்கள் கனவுகள்

நாங்கள் விரும்பியது ஒன்றே ஒன்று

எங்கள் பெயரால் ஒரு துண்டு நிலம் 

-

பின்னர் தேசம் என்பது

ஏதிலியின் நினைவுப் புத்தகமாயிற்று

செய்திகளின் கடைசி பக்கத்தில்

ஒரு சிறிய குறிப்பு.

-

நான் இப்போது பதிவு செய்கிறேன்

இறந்தவர்களின் பெயர்களை எண்ணுகிறேன்

அவர்கள் மண்ணோடு மண்ணானதற்கு

இளமையின் சாட்சியாக இருந்தேன்

-

எங்கள் வீரர்கள் சொன்னார்கள்

தேசத்திற்காக நாங்கள் செல்கிறோம்

நாங்கள் சொன்னோம்

தேசம் உங்களோடு திரும்பி வரும்

இரண்டுமே திரும்பவில்லை.

-

எங்கள் பாடல்கள் இப்போது

முற்றத்து சுவர்களில் எழுதப்பட்ட கவிதைகள்

வெளிச்சத்தில் மறைந்து போகும் எழுத்துக்கள்

ஆனால் மழையில் மீண்டும் தெரியும்.

-

ஒரு தாய் தன் மகனைத் தேடுகிறாள்

ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு கோவிலிலும்,

போர்க்களத்திலும், பின்னர் வானத்தில்

அவன் ஒரு விண்மீன் ஆனான் என்கிறார்கள்

ஆனால் விண்மீன் என்பது 

அவளருகில் என்றைக்குமே வரமுடியாத 

தொலைதூரக் கனவு தான் 

-

வரலாறு நம்மைக் கடந்து செல்கிறது

முதலில் கப்பல்களாக, பின்னர் விமானங்களாக

முதலில் ஆயுதங்களால், 

பின்னர் உடன்படிக்கைகளால்

உலகின் வல்லரசுகள் 

எங்கள் எலும்புகளில் நடக்கின்றன

-

உங்கள் காலடி ஓசையை 

இரவுகளிற் கேட்கிறோம்.

-

நான் இன்னும் நம்புகிறேன்

கடலின் அலைகளைப் போல

மண்ணின் வாசனையைப் போல

அடுத்த தலைமுறை 

நமது கனவைச் சுமப்பார்கள்

விடுதலை என்பது 

குருதியில் ஓடும் ஒரு வார்த்தை

அதை அழிக்க முடியாது.

-

நண்பனே..

எங்கள் சவப்பெட்டிகளில் எழுது 

அவர்கள் தேசத்தைக் காணவில்லை

ஆனால் தேசம் அவர்களைக் காணும்..

No comments:

Post a Comment