இந்த மண்ணில் நாம் பிறந்தோம்
கடலின் ஓசை எங்கள் தாலாட்டு
மலைகளின் வடிவம் எங்கள் கனவுகள்
நாங்கள் விரும்பியது ஒன்றே ஒன்று
எங்கள் பெயரால் ஒரு துண்டு நிலம்
-
பின்னர் தேசம் என்பது
ஏதிலியின் நினைவுப் புத்தகமாயிற்று
செய்திகளின் கடைசி பக்கத்தில்
ஒரு சிறிய குறிப்பு.
-
நான் இப்போது பதிவு செய்கிறேன்
இறந்தவர்களின் பெயர்களை எண்ணுகிறேன்
அவர்கள் மண்ணோடு மண்ணானதற்கு
இளமையின் சாட்சியாக இருந்தேன்
-
எங்கள் வீரர்கள் சொன்னார்கள்
தேசத்திற்காக நாங்கள் செல்கிறோம்
நாங்கள் சொன்னோம்
தேசம் உங்களோடு திரும்பி வரும்
இரண்டுமே திரும்பவில்லை.
-
எங்கள் பாடல்கள் இப்போது
முற்றத்து சுவர்களில் எழுதப்பட்ட கவிதைகள்
வெளிச்சத்தில் மறைந்து போகும் எழுத்துக்கள்
ஆனால் மழையில் மீண்டும் தெரியும்.
-
ஒரு தாய் தன் மகனைத் தேடுகிறாள்
ஒவ்வொரு சாலையிலும், ஒவ்வொரு கோவிலிலும்,
போர்க்களத்திலும், பின்னர் வானத்தில்
அவன் ஒரு விண்மீன் ஆனான் என்கிறார்கள்
ஆனால் விண்மீன் என்பது
அவளருகில் என்றைக்குமே வரமுடியாத
தொலைதூரக் கனவு தான்
-
வரலாறு நம்மைக் கடந்து செல்கிறது
முதலில் கப்பல்களாக, பின்னர் விமானங்களாக
முதலில் ஆயுதங்களால்,
பின்னர் உடன்படிக்கைகளால்
உலகின் வல்லரசுகள்
எங்கள் எலும்புகளில் நடக்கின்றன
-
உங்கள் காலடி ஓசையை
இரவுகளிற் கேட்கிறோம்.
-
நான் இன்னும் நம்புகிறேன்
கடலின் அலைகளைப் போல
மண்ணின் வாசனையைப் போல
அடுத்த தலைமுறை
நமது கனவைச் சுமப்பார்கள்
விடுதலை என்பது
குருதியில் ஓடும் ஒரு வார்த்தை
அதை அழிக்க முடியாது.
-
நண்பனே..
எங்கள் சவப்பெட்டிகளில் எழுது
அவர்கள் தேசத்தைக் காணவில்லை
ஆனால் தேசம் அவர்களைக் காணும்..
No comments:
Post a Comment