ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

கடல் விலகிய பின்..

உறவுகள் மழையோடு வருகின்றன,

கதவைத் தட்டாமல், காலணியைக் கழற்றாமல்

என் ரத்தத்தின் வெப்பத்தை 

அவை கற்றுக்கொள்கின்றன,

என் தட்டில் கை வைக்கின்றன,

என் தூக்கத்தின் 

ஒரு பாதியில் படுத்துக்கொள்கின்றன.


பிறகு ஒரு நாள் 

எந்த நாளென்று 

யாருக்கும் முன்கூட்டித் தெரிவதில்லை 

சாளரம் திறந்திருக்கும்,

கட்டில் குளிர்ந்திருக்கும்

தேநீர்க் கோப்பை வைத்த இடத்தில்

ஒரு வட்டம் மட்டும் மிச்சமிருக்கும்.


ஒருபோதும் பிரியமாட்டோமென்று 

நாம் சொன்ன வார்த்தைகளைக்

காற்று எடுத்துக்கொண்டு போய்க்

கடலில் கரைத்துவிட்டது.

அதனால்தான் கடலின்னும் 

உப்பாக இருக்கிறது போல, 


நாம் நடந்த தெரு 

அதே இடத்திற் தான் இருக்கிறது.

அதற்கு நினைவில்லை.

புளியமரம் அதே நிழலை விரிக்கிறது 

இரண்டு பேருக்கான நிழல்,

இன்று அதில் ஒருவர் நிற்கிறார்.

மிச்ச நிழல் யாருக்கு ? 


குருவி

ஒரு சருகும் ஒரு நூலும் ஒரு முடியும் கொண்டு

வீடு நெய்தது.

குஞ்சின் இறகு முதிர்ந்த காலை

அது வானத்தைப் பார்த்தது, 

வானம் பதில் சொல்லவில்லை

குஞ்சு போயிற்று.

குருவி கத்தவில்லை 

கூட்டின் விளிம்பில் அமர்ந்து

காலியான இடத்தை 

ஒரு நாள் முழுக்கக் காவல் காத்தது.


பின் ஒரு மழை, அதன் பின் காற்று 

கூடு புல்லாகி நிலத்துக்குத் திரும்பியது.

அந்தக் குஞ்சு இப்போது

வேறோர் மரத்தில்

ஒரு சருகும் ஒரு நூலும் ஒரு முடியும் சேர்க்கிறது.


இந்தப் பூமி ஒரு கிழவி,

கண்ணோரம் உப்புப் படிந்தவள் 

எத்தனை கோடிப் பிரிவுகளை

இவள் மண்ணுக்குள் விழுங்கியிருக்கிறாள், 

ஒவ்வொரு புல்நுனியிலும்

யாரோ ஒருவரின் 

கடைசிப் பார்வை நடுங்குகிறது.


இதை வாழ்க்கை என்று அழைக்க

என் நாக்கு எழவில்லை.

கடல் விலகிப் போன பின்

கன்னத்தில் தங்கிவிடும்

அந்த உப்பின் பெயரால் 

அதை அழைக்கிறேன்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக