Thursday 10 May 2018

மயான அமைதி..

கடற்கரையின் வல்வளையத்துள்
குடும்பம் கொன்றழிக்கப்பட்ட பின்
எஞ்சிப் போனவனின் அமைதியாய்

பசிப்பது வயிற்றுக்குப் பழகிப்போன
போரின் பின் புறக்கணிக்கப்படும்
போராளியின் அமைதியாய்

காணாமல் போனவரை
காண்பதற்காய்க் காத்திருந்து
ஏக்கம் மட்டுமே எஞ்சி
இறந்து போனோரின் அமைதியாய்

எறிகணையால் சிதறிப்போன கிராமத்தினது
தபால் பெட்டியின் அமைதியாய்

இன அழிப்பு செய்யப்பட்ட
தமிழினத்தின் நிலத்தில்
உருவாக்கப் பட்டிருக்கிறது அமைதி
மயான அமைதி


No comments:

Post a Comment