Thursday 17 May 2018

இந்த நாள் - மே 18

இறுதியில்
கூட்டாகக் குதித்து இழுத்திருக்கலாம்,
தூரத்தில் வானுயர வெடித்தெழுகிறது
தீப்பிளம்பு,
ஆழ ஊறிப்போயிருந்த
ஆத்ம விசுவாசத்தின் கண்களுக்கு
அந்த ஜோதியில் கலந்து
மேலெழும் ஆன்மாக்களைத் தெரிகிறது போல,

ஏதோ ஒன்றை புரிந்து விட்டதுவாய்
எஞ்சியிருந்த நம்பிக்கையும்
தன்னை மீறித் தகர்ந்துடைந்து
தொண்டை கட்டி நா வறள
கண்களால் வடிகிறது

செந் நாக்குகளாய் மேலெந்த உயிரோர்மம்
மெல்ல மெல்லக் கரும்புகையாகி
கண்முன்னே கலைந்து சென்ற நாளிது

நாள் மறுநாளாகி
வாரம், மாதங்களாகி
ஆண்டுகள் உருண்டோடியும்
வசந்தம் வரும்வரை
ஓரிழையில் தொங்கியபடி காத்திருக்கும்
ஏதோ ஓர் பறவையின் கூடாய்
எம் கனவும், வாழ்வும்..


No comments:

Post a Comment