Sunday 12 April 2015

ஒற்றைப்பனையாய் வாழ்க்கை..

ஊரின்கோடி மயானத் தீயே
உள்ளே மனசைக் குடையும்
ஊரே எரிந்து மயானமானால்
உறக்கம் எப்படி முடியும்?

வாழ்வினிற் சோகம் வந்திடை போனால்
வலிகள் தாங்கிட முடியும்
வாழ்வே சோகம் என்பதாய் ஆனால்
வாசல் எப்படி விடியும்?

வறண்ட நிலத்தில் வாழும் உயிர்கள்
வானைப் பார்த்தே ஏங்கும்
வானும் பொய்த்துப் போனால் அவையும்
வாழ்வினை எப்படித் தாங்கும்?

எல்லாம் தீய்ந்தும் எஞ்சி நிற்கிற
ஒற்றைப் பனையாய் வாழ்க்கை
இழந்தாய் எல்லாம், தெரிந்தும் இன்னுமேன்
அணைக்கலை என்னை சாக் கை..?

No comments:

Post a Comment