Tuesday 6 March 2012

ஊடுருவும் பேருறவு..

இரவு எப்போதுமே
உடுக்காய் ஆகி விடுகிறது
அதன் தோலாய்
என்னிதயத் தசை நார்கள்
உன்னினைவு விரல்கள் அதில்
உருள உருள நீ
அருகிருந்த காலங்களின்
வாசனை
மனசை உருவேற்றுகிறது

நல்லூர் மணி ஒலியின்
நாதம் போல்
உன் வாயின் வெண்கல நாசியில்
மேலும் கீழும் நாவு தட்ட
எழும் அதிர்வலையால்
உதடு பிரிந்தவிழ்ந்த
நேசத்தின் சொற்கள்
தூரத்திருந்தாலும்
ஒவ்வொரு மயிர்த்துளை வழியும்
ஓங்கார ஒலிப் பிழம்பாய்
ஊடுருவி உள் நெஞ்சுள்
அதிர்கிறது

என் பாசத்தைப் பலி கொடுக்கும்
உன் மடியாம் பலி பீடம்
ஆசைகள் ததும்பி வர
அவிழ்க்கும் கணச்சூடு
ஆண்டுகளை ஊடறுத்தும்
ஆயிரமாய் மைல் கடந்தும்
ஊசிக் குளிர்தன்னை
உட் குடைந்தும்
ஏகாந்த மன வெளியில்
இருக்கும் என்னுடைய
கழுத்தாங் குத்தியினில்
கண கணென்று படுகிறது

உன் நினைவின் நிழலில்
இழை எடுத்து
தன்னை வனைந்துள்ள இவ்விரவில்
நானும் ஓர் நூலாய்
உள் நுழையப் பார்க்கின்றேன்
நிசத்தோடு கலந்து விடும்
நிமிடங்கள் வருமட்டும்
நிழலோடு கலந்து விட நினைத்து
நானும் ஓர் நூலாய்
உள் நுழையப் பார்க்கின்றேன்

ஓராடை தன்னுக்குள்
உயிரிரெண்டும் ஒன்றாகி
நீராடி நனைந்த நினைவை
நிழலோடு
போராடிப் பெற்று விடப் பார்க்கின்றேன்

நின் நிழலே இரவாக
நீளிரவே உடுக்காக
அந் நிலையில் நான் மூழ்கி
ஆழிருட்டில் ஒளி கண்டு
அதற்குள்ளே நானிறங்கி ஆட
அறை முழுதும்
தும் தும் துதும் தும் தும் துதும்
தும் தும் துதும் தும்...

No comments:

Post a Comment