Tuesday 13 March 2012

வாழும் நாட்களில் நீளும் நாட்கள்..

நரம்புக்குள் இழையாயும்
நாடிக்குள் துடிப்பாயும்
வரம்புடைத்து மேவிப் பாய்ந்தோடி
வழிகின்ற
வெள்ளத்துள் வெள்ளம் போல்
விழுந்தோடிப் புரண்டுருண்ட
பிள்ளை மனம் போன்ற
பெருங்காமத் தீவொன்றில்
கொள்ளை இன்பத்தைக்
குடித்தாடி வெறியுற்ற
கள்ளின் மண எண்ணக்
கன நினைவு கசிந்தின்று
மெள்ள என் நாசிக் குழிகளிலே
மீள்கிறது..

இன்று நத்தை போல்
இயங்காமற் கூட்டுக்குள்
சென்று நகராமற் கிடக்கின்ற
நெடு நாளே..!
அன்றின் இரவுகளில்
அவள் கரத்தைத் தொடுவதற்குள்
சென்று கூவென்று
சேவலினை அனுப்பி விட்டு
கன்றொன்றை விரைவாய்க்
கையினிலே தந்து விட்டு
நின்று நிதானித்து
நிசமான வாழ்க்கையினை
நன்று உறவாட
நான் நினைத்து முடிப்பதற்குள்
சென்று காற்றாகச்
சிதறிப் பறந்து விட்ட
என்றும் என் வாழ்வின்
இனிய நாட் பொழுதுகளே..
கன்றை அதன் தாயைக்
காணாமற் பிரிந்துள்ள
இன்றில் மட்டும் ஏன்
இமயம் போற் கிடக்கின்றீர்..?

ஒரு கூட்டுள் இருந்தங்கே
உறவாடும் நேரத்தில்
உருவத்தைப் போலிருந்த
ஓராண்டுக் காலத்தை
அருவத்தின் சாயை போல்
அரை நொடியில் கடத்தி விட்டு
அரை நொடியை இன்றேன் நீர்
ஆண்டாண்டாய் நீட்டுகிறீர்..?

எனக்கு அவள் சொல்லும்
எதிர்காலக் கீதையினை
நினைத்து ஏதோ நான்
நீட்டிக் கிடந்திடுவேன்
நான் சொல்லும் நாலைந்து
நாளைகளின் வார்த்தைகளில்
என் செய்வோம் எனச் சொல்லி
எப்படியோ இருந்திடுவாள்!
பட்டு அடிபட்டு
பதப்பட்ட மனசுகளோ
தட்டுத் தடுமாறித்
தங்களுக்குள் வார்த்தைகளை
கொட்டி இறைத்தேனும்
குளிர் காயும், தாபமுடன்

பேச்சுக் கேட்காமல்
பெருங் குழப்பம் செய்தபடி
தலை கீழாய் நிற்கின்ற
கருஞ்சுடரும், விறைத்தபடி
முற்கோபக்காரன் போல்
முட்டிவிட எத்தனிக்கும்
பால் மணம் மாறாமல்
படுத்தி சிணுங்குகிற
பரிதியின் கணப்புள்ள பனிவிரலும்
நாட் பிரமா..!
எப்படித்தான் தாங்கும்
இனியுமிந்தப் பிரிவுகளை
செப்படி வித்தையினிப் போதுமடா
சேர்த்து விடு..

No comments:

Post a Comment