Tuesday 13 March 2012

சாகாமல் இருப்பதற்கே..

சாகாமல் இருக்கவே நான்
சத்தியமாய் எழுதுகிறேன்
வேறெதுவும் எண்ணம்
கிடையாது என்னுடைய
விற்பனத்தை விறைப்பாய்க்
காட்டுதற்கோ உள்ளாடும்
கவிஞனாய்ச் சாதல் என்ற
கனவினையோ என்னாலே
கற்பிதம் பண்ண இப்போ
முடிவதில்லை சந்தையிலே
சாப்பிடுதற்கென்று நான்
வாங்குவது மருந்தொன்றே
சதமளவும் வேறு
வாங்கி வர நினைத்ததில்லை

உடலுள்ளே ஸ்கான் காட்டும்
உட் காயப்பகுதிகளின்
இடத்துக்கு ஏற்ற மருந்திட்டும்
இன்று வரை
இன்னும் ஸ்கானுக்குத் தெரியாத
மன நோவின்
அடி காயம் இன்னும் யாருக்கும்
தெரியவில்லை
நாள் முழுக்கத் தூங்கி
நாளை மற அது உந்தன்
ஆழ் மனதை ஆட்டுமென
அவர் தந்த மருந்தாலும்

தூக்கத்தின் உள்ளே
தொடர்கின்ற கனவுகளை
தொண்ணூறு மணி நேரம்
நான் தொலைந்து போனதனை
விறைக்கும் குளிருள்ளும்
வியர்த்தூத்திக் கொட்டுவதை
வீரிட்டு நான் கதறி
விழுந்துருண்டு போவதனை
இடுப்பின் பூட்டிருந்து
எழுந்து வரும் தண்டூடு
எழுந்தலையாய் வருகின்ற
மின்சாரம் பிடரியிலே
அடித்தடித்து ஆட்ட
ஆற்றாமல் நாக்கினை நான்
அழுத்திப் பற்களிடை
கடிப்பதனை, கத்தியினால்
இழுத்தெங்கும் கிழித்து விட்டு
இளைத்துப் போயிருக்கும்
எனையறியாதென்னை, நான்
இயல்பறுந்து தண்டிக்கும்

இந்த மனக்காய வலியின்
அடிகாயம்
எந்த இடத்திற் தான்
இருக்குதென்றும் இதற்கினிமேல்
என்ன மருந்தைத் தான்
கொடுப்பதென்றும் தெரியாமல்
இந்த மருத்துவர்கள் திணறுகிறார்
என் மகனே..!
நீ தான் மருந்தென்று
நெடித்துயர்ந்து வளர்ந்துள்ள
நீள் மூஞ்சி வெள்ளைக்குப் புரியவில்லை
உன்னுடன் நான்

ஓடி விளையாடி உப்பேத்தி எறிஞ்சேந்தி
உள் வந்து பள்ளியிலே
விட்டு விட்டு ஒழிஞ்சிருந்து
உன் பள்ளி விளையாட்டை
உயிர் சுவைத்துப் பார்ப்பதற்கே
உயிரை இழுத்தின்னும்
நானிருக்கேன்,உயிர் நூலும்
அறுந்திப்போ வீழாமல்
இருப்பதற்கு எனக்கிப்போ
தெரிந்த வழி ஏதோ
எழுதுதல் தான், இதை விடவும்
தற்காலிகமாயுயிரைத்
தக்க வைக்க வேறு வழி
எனக்குத் தெரியவில்லை இப்போது

என் மகனே..!
இதற்காக மட்டும் தான்
இப்பொழுது எழுதுகிறேன்
எனக்கு வேறு வழி
தெரியவில்லை உனைச்சேர

எனக்கு வேறு வழி
தெரியவில்லை உனைச்சேர
இதற்காக மட்டும் தான்
இப்பொழுது எழுதுகிறேன்..

No comments:

Post a Comment