Friday, 21 March 2025

தொலைந்த காலத்தின் குழந்தை..

நினைவுகளின் கயிறுகள்

என் கழுத்தைச் சுற்றும்,

அவை தேனீக்களின் கூட்டமாய்

மூளையை மொய்க்கும்

உன் வியர்வையின் வாசனை

நாசியெல்லாம் நிறைந்து

என் நுரையீரலில் படிந்துள்ளது

-

இரவின் மைத்தடங்களில்

உன் பெயர் ஒரு வெட்டுக்காயம்.

நான் அதை மூடிக்கொள்கிறேன்

ஆனால் அது இரத்தப்பெருக்கை நிறுத்துவதில்லை

-

நீ கேட்ட அந்தப் பாடல்

மழை துளிகளில் செதுக்கப்பட்டது

உடைந்த கண்ணாடிகளாய்

என் காலடியில் சிதறுகிறது

கடற்கரையிலிருந்து ஓடிவரும்

அலைகள் போல

நினைவுகள் திடீரென்று

வந்துவிடுகின்றன, மூச்சைப் பிடித்தவனாய்

நான் மூழ்கிவிடுகிறேன்

உன் கரங்கள்

இனி என்னைக் காப்பாற்றாது.

-

சொல்லப்படாத உண்மைகள்

என் உடலின் அறைகளில்

அடைபட்டிருக்கின்றன,

பறவைகளின் எலும்புகள் போல

கூடுகளில் பதுங்கியிருக்கின்றன.

ஆழ்ந்து புதைந்துள்ள பொருள் போல

மண்ணடியில் கிடக்கிறது நமது காலம்,

புதைபொருளியல் நினைவுகள்

நாம் வாழ்ந்த காலத்தின் தொல்லியல்.

-

இப்போது இருளின் வடிகால்களில்

நீ வழிந்தோடுகிறாய்

ஒரே ஒரு மழைத்துளி

ஆயிரம் நினைவுகளைத் தூண்டும்

உன் அடிச்சுவடுகள்

என் மூளையின் சதுப்புநிலத்தில் பதிந்துள்ளன

-

ஆனால் நான்

ஏன் உன்னை நினைக்கிறேன் என்பது

மர்மமாகவே உள்ளது

யார் நினைத்தால்

யார் நினைவுக்கு வருகிறோம்?

நாம் தொலைந்த காலங்களின்

குழந்தைகள் மட்டுமே.

-

உன் நினைவு

ஒரு கூர்மையான கத்தி

என் ஆன்மாவைக் கிழிக்கிறது.

ஏனென்றால் நினைவுகள்

இறந்த பின் புதைக்கப்படுவதில்லை

அவை உயிரோடு புதைக்கப்படுகின்றன..

No comments:

Post a Comment