இந்த கண்ணாடி இங்கே எதற்காக
என் முகத்தின் ரேகைகளை எண்ணிக்கொண்டே
காலம் முழுவதும் அமைதியாய் நிற்கிறது
பசித்த நாட்களின் சலிப்பும்
போராட்டங்களின் வியர்வையும்
அதன் மேற்பரப்பில் படிந்திருக்கிறது.
-
ஒரு தொழிலாளியின் உடைந்த கைகளைப் போல
கண்ணாடியின் விளிம்புகள் கரடுமுரடானவை.
அது காட்டும் உண்மைகள்
வறுமையின் வாசலில் நின்ற
குழந்தையின் கண்கள் போல கசக்கின்றன.
-
நீ உன்னைப் பார்க்கிறாய்
ஆனால் அது நீயல்ல
அது உன் தந்தையின் சிதைந்த கனவுகள்
உன் தாயின் கண்ணீரில் கரைந்த உப்பு
உன் மூதாதையர்களின் சாபங்கள்
எல்லாம் ஒன்றாய் உறைந்து போன படிமம்.
-
கண்ணாடி என்ன சொல்கிறது?
அது பேசவில்லை
ஆனால் அதன் அமைதியில்
பல்லாயிரம் மாவீரர்களின் தியாகம்
போராளிகளின் கனவு
ஆயிரக்கணக்கான விதவைகளின் கண்ணீர்
காணாமல் ஆக்கப்பட்ட
காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கண்கள்
கலந்திருக்கிறது.
-
இரவில் கண்ணாடி முன் நிற்கிறேன்
என் முகத்தில் படிந்திருக்கும்
எத்தனை போராட்டங்கள்
எத்தனை வெற்றிகள், தோல்விகள்
எத்தனை காதல்கள், பிரிவுகள்.
-
கண்ணாடி காட்டுகிறது
நாளை வரப்போகும் புரட்சியை
மக்களின் விடுதலைப் பாடல்களை
சமத்துவத்தின் வானவில்லை
நீதியின் சூரியனை.
-
ஆனால் இன்று
இந்த கண்ணாடியில்
நான் காண்பது
விடுதலைக்காக ஏங்கும் ஓரினத்தின் முகம்
அநீதியால் சிதைந்த சமூகத்தின் முகம்
கையறு நிலையில் குமையும் தோழர்களின் முகம்.
-
கண்ணாடியே
நீ எனக்கு காட்டுவது
வெறும் விம்பம் அல்ல
அது ஒரு வரலாறு, போராட்டம்
எதிர்காலம்..
No comments:
Post a Comment