Monday 2 April 2018

நீ மட்டுமே அல்ல..

வெகுகாலத்தின் பின் அந்தப் பாடலை
குளியலறையில் முணுமுணுத்த போது
கண்ணாடியில் படிந்த நீராவியின் மீது
எவனோ ஓர் ஓவியன்
உருவமொன்றை வரைந்திருந்தான்
ஓ.. அது நீயே தான்

அதே போலவே
விரல்களுக்குள் விரல் கோர்த்து
நெட்டி முறிக்கிறாய்
கள்ளலைகள் பாயும் அந்தக் கண்கள்
இமைக்கரத்தை நீட்டி எனை
இறுக அணைக்கிறது,
அதே தலை சரிப்பு, சிரிப்பு
தாளம்பூ நாகம் போல்
கன்னத்தில் சுருளும் கற்றை முடி

வெம்மைப் பெருமூச்சின்
வெக்கையை நான் உணராமல் இல்லை
மீசைப் பொன்முடிகளில் கோர்த்திருக்கும்
வியர்வை மணிகள் தான் எத்துணை அழகு
அதிலிருந்து அவிழ்ந்த ஓர் முத்து
படபடப்போசை பலமாய் கேட்கும்
மார்பில் விழ எத்தனிக்கிறது

நேரமாச்சு வெளியில் வா
குறுக்கிட்ட குரல் கேட்டு திடுக்குற்று
குழாய் நீரை நிறுத்தினேன்

இரெண்டு வினாடிக்குள் கரைந்து போகிறது
இரெண்டு தசாப்தங்கள்
பாடுவது நின்று போக
கண்ணாடியைப் பார்க்கிறேன்
கரைந்து கொண்டிருப்பது நீ மட்டுமே அல்ல..


No comments:

Post a Comment