Tuesday 5 May 2015

நான்கு விழுப்புண்கள்..

மாவீரனே..
கடலுக்கும் ஆறுக்குமான இடைவெளி
உன் கனவு
மிகுந்த மேடுகளும் அதிகம் பள்ளங்களும்
கட்புலம் மங்கலாயினும்
கடலோசை
காதிற் கேட்ட படியே இருந்தது
இயன்றவரை நீயும் ஏறி இறங்கினாய்
நீ சென்ற வழியெங்குமின்று
திட்டுத் திட்டாய்
தேங்கிக் கிடக்கிறதுன் தீர(ரா)க் கனவு
எட்டமுடியவில்லைக் கடலை, எனினும்
என்றேனும் ஓர்நாள்
இதே வழியில் ஓராறு எட்டலாம்!
அதுவரையில்
நினைப்போர் வாழ்நாளுள்
நீயும் நின் பாதைகளும்

போராளியே..
தலைப்பயணி முன்னில்லாத்
தவிப்பும்
சகபயணி போய்விட்ட
சலிப்பும்
ஏன் பயணம் தொடங்கினாயென
இடிந்து போயிருக்கிறாய்
இப்படித்தான் இந்த உலகு
இலக்கை நீ எட்டினால்
வழிகாட்டியென்றும்
இல்லையேல்
குழிகாட்டியென்றும்
குறிப்பிடும்
இடையில் நீ பட்டதெல்லாம்
என்றைக்கும் எண்ணாது
இப்படித்தான் தோழா உலகு

மக்களே..
பாய்ந்துவரும் வல்லூறு பார்க்காமலிருக்க
குஞ்சுகளை இறக்கையுள் ஒளிக்கும்
கோழியாய்
உட்பாவடையுட் கூட
ஒளித்துவைத்துக் காத்தீர்கள்
நீர்க்கடன் செய்யத்தான்
கடற்கரை போனோமென
எவருந்தான் எண்ணியிருக்கவில்லை
பெற்று நீர் வளர்த்த பெருங்கனவு
தசைத் துண்டங்களாய்
சிதறிப் போய்க்கிடந்தது
கொள்ளிக் கட்டைகளாய்க்
கொட்டுண்டு கிடந்தது
கொள்ளி வைக்க ஆளில்லாக் குறைக்கோ..?
இழந்தும், இழந்தும்
எல்லாமாய் நீர் இருந்தீர்

பூர்வீக தேசமே..
தேசங்களை ஈன்ற தாயின் வயிற்றில்
இந்தா பிறக்கிறேன் என்பதாய்
உப்பித் தெரிந்தாய்
நாமும் பிரசவம் பார்க்க
கொத்தாய் குலையாய்
குடும்பங் குடும்பமாய்
எத்தனை கொடுத்தும்
இன்னுமுன் பிறப்போ
சத்தமே இன்றிக் கிடக்குது
இன்னமும்
ரெத்தங்கண்டு மொண்டு தான் பிறப்பியோ..?
கொடுப்பதெம் பணி
பிறப்பதுன் கடன்

No comments:

Post a Comment