Monday 4 May 2015

சிறகை ஒடுக்கும் பறவை..

வானம் புரியாத
வறள் நிலமாய் வாழ்க்கை
வலுவிழந்தும் வளையாக் கற்றாளைத் திமிராக
மானம்,
மனசோ கற்பாறைதானெனினும்
மலர்ப்பிஞ்சு வேர்விரல்கள்
மார்தடவ பிளக்கிறது

பருவம்மாறத் திரும்புதற்கு
பறந்துவந்த
பறவைக்கும் உடல்
பலமிழந்து போகிறது
உருவமும்,உளக்கட்டும்
உடைந்து நரைக்கிறது
உற்றிருந்த உறவுகளும் ஒன்றுமின்றி விலக
தெரிவுகளும் இல்லை
திரும்பியேனும் செல்வதற்கு
தெருக்களும் இல்லை, தெளிவில்லை
தெரியவில்லை

தெரிகிறது
பறப்பினிமேல் முடியாத
பாரமுணர் பறவையொன்று
கற்பாறைகள் உள்ள
ககனத்தின் மேற்பறந்து
இயன்றவரை மேலே
ஏறி உயர்ந்து விட்டு
அடிக்காமல் சிறகுகளை
அத்தோடு ஒடுக்கிற்று..

No comments:

Post a Comment