Sunday 9 September 2012

மாறாது நீளும் பருவங்கள்..

என் நினைவுகளற்று
பாசி படிந்துபோய்க் கிடக்கும்
உன் மனப்பாறையில்
ஏறி உட்கார முனைந்து
இடுப்பொடிய வீழ்வது தான்
என் வாழ்நாட்களுக்கான
இப்போதைய காலம்

வாழ்ந்த நாட்களின்
வசந்த நினைவுகள் தான்
வாழும் நாட்களின்
இலையுதிர் நிலையினை
எப்படியோ தாங்கி ஏந்திச் செல்கிறது

மொட்டரும்பும்
பருவமினித் திரும்பாதெனினும்
இதழ் திறந்து
பூ மலர்ந்து மணம் அவிழ்ந்த
அன்றைய காலம்
எழுந்தெழுந்து வரும் மூச்சில்
இன்றைக்கும் கமழ்கிறது

நானின்னும் உணரத் தலைப்படாத
பூமிப் பந்தின் வேகச் சுழற்சியில்
என்றைக்கோ
எங்கேனும் இடறுப்பட்டாவது
எமக்கான பருவமென்றொன்று
வந்துவிடுமெனக் காத்திருக்கும்
என் தந்தையர் தேசம் போல
காலத்தின் முதுகில் நானும்
என் முதுகில் காலமுமாய்
மாறி மாறிச் சவாரி செய்கிறோம்

அவளைப் போலவே புதிர் நிறைந்ததாய்
அறிந்து விட முடியாமலும்
அர்த்தம் புரியாமலும்
அகன்று விரிகிற வெளியில்
நானும் தேசமும் காலமுமாய்
நேற்றைய நினைவுகளைப் பருகி
இன்றைய மன வயிற்றை நிறைத்துக் கொண்டு
நாளையைத் தேடி நடக்கிறோம்..

No comments:

Post a Comment