Friday 3 August 2012

வீழ்ந்தாலும் வாழ்வேன்..

கையைக் கூடக் காட்டாமலும்
தலையைக் கூட ஆட்டாமலும்
எதற்கென்றே புரியாமல்
என்னிலிருந்து
நீ போன பின்னாலும் கூட
கருக்கட்டிய மேகங்கள்
வானத்தில் கூடும்
ஊழி உடுக்காகும் இடி
என்னை வெட்டி வீழ்த்திய
உன் இமை வெட்டாய்
மின்னல் வெட்டி மழை பொழியும்
நிலம் நனைந்து ஈரலிக்கும்
ஆனால் அதில் குளிர்ச்சி இருக்காது

இன்றைய நாட்களில்
பனிப்புகையின் நடுவே
உனக்கு மங்கலாகத் தெரிகின்ற
என் உருவம்
நாளுக்கு நாள் கூடுமுன்
தேகச் சூட்டின் தகிப்பில்
ஆவியாகி அகன்று போகலாம்
போகும்,
கால அலை அடித்து
உன் மனக்கடற்கரையில் இருக்கும்
என் நினைவுச் சுவடுகள்
அரிக்கப்பட்டு விடலாம்
விடும்,
ஒன்றாக இருந்துடைந்த
லெமூரியாக கண்டம் போல்
சிதையுண்டு போன
ஓர் புராதன நினைவாய்
நான் உனக்கு ஆகி விடலாம்
ஆகும்

காலுதைத்து
தலை கொண்டு பிளந்து
ஏதோ ஓர் நிலப்பிதிர்வில்
ஊற்றின் ஓர் துளியாக
உயிர்கொண்ட நான்
ஓடி ஓடிச் சிற்றாறாகி
அனுபவக் கிளைஆறுகளையும்
அணைத்தபடி பேராறாய்
இனியும் ஓடிவிட முடியாத
ஓர் மலையுச்சிக்கு வந்துவிட்டேன்
கீழே அதலபாதாளம்
எந்த நொடியும்  இதிலிருந்து
நான் உருண்டு வீழ்ந்து விடக் கூடும்
வீழ்வேன்
ஆனாலும் என் வீழ்ச்சி
விழும் போதும் அழகாகும்
நீர் வீழ்ச்சி போலத்தான்
அழும் படியாய் ஏதும் இருக்காமல்
நிலம் மலர
அழகாகத்தான் வீழும் அறி..

No comments:

Post a Comment