Monday 17 April 2017

போர் தின்ற வாழ்வு..

இப்படியாய் ஆகுமென்று
அறிந்திராத அந்த மாலையில்
திடீரென அறைக்குள் வந்த நீ
காதல் ததும்ப அவனைக்
கட்டி அணைத்தாய்

அணைப்பின் கதகதப்பு ஆறுமுன்னர்
கதவு தட்டும் ஒலி
உள்ளே நுளைந்தவர்கள்
கைத்துப்பாக்கியை அவன்
கழுத்தில் அழுத்திய போது
என்ன செய்யலாமென நீ
எண்ணுவதற்குள்,
தாமதிக்கும் ஆபத்து தவிர்க்க
கடுவனைப் பார்த்துக்கொள் என்றபடி
உன் கையை இறுக்கி அழுத்திவிட்டு
இறங்கிச் சென்றான்

இப்படியாய் போய் மறைந்தோர்
எப்பொழுதும் வந்ததில்லை,
எல்லாம் முடிந்துவிட்டதென
இருந்த நாளொன்றின் நள்ளிரவில்
உயிருள்ள பிணமாயவன் உன் முன்னே!,
அப்போதில் எவரிடமும் இருக்கவில்லை
சொற்களும், நேரமும்,
ஊழைக் காற்றைக் கிழித்தபடி
பறந்ததவனோடு படகு.

பின்னரவன் மீண்டும்
கம்பி வரிந்த இருளறையிலெனவும்
பின்னரும், பின்னரும், மீண்டுமெனவும்
நீ அறிந்தபோது
ஆண்டுகள் சில ஓடிப் போயிருந்தன

முன்னொரு நாள்
நீயும் அவனுமாய் புஸ்பித்த
அந்த அழகிய மலரின் இதழ்கள்
ஓடிக்கொண்டிருந்த ஒவ்வொரு பருவங்களிலும்
ஒவ்வொன்றொவ்வொன்றாய்
உதிரத் தொடங்கியது
இதுவும் ஒரு மாலை நேரம் தான்
விதி சொற்களிற் சுழன்று
பலமாக அடித்த காற்றொன்றில்
காம்பும் கழன்று வீழ
அவனும் களைத்துப் போனான், நீயும் தான்

அத்துணை காதலோடும், கனவுகளோடும்
சந்திப்போமென அவன் உனக்கன்று
சொல்லிச் சென்ற வார்த்தைகளை
மாதங்களும், ஆண்டுகளும், நேரமும்
எப்படிக் குரூரமாய் கொன்று விட்டன?

போர் தின்றவற்றுள் இப்படியாகத்தான்
சந்திப்பதற்கென்றே விடைபெற்றோர்
சந்திக்க முடியாமலும்
சேர்வதற்கென்றே பிரிந்தோர்
சேர முடியாமலும்..


1 comment:

  1. போர் தின்ற வாழ்வு...
    நன்றாகச் சிந்திக்க வைக்கின்றது

    ReplyDelete