Tuesday 4 April 2017

நதி தீரம்..

திரும்பிச் செல்ல விரும்பிய போது
மீள் முடியாத் தூரத்தில் வாழ்வு

இலை துளிர்த்த காலம்
செம்மை படர்ந்த பசுமையாய்
காலைச் சூரிய ஒளிக்குத் தளதளத்து
எத்துணை அழகாய் இருந்தது

குருத்தகண்டு இலையாகி
மண்ணுக்கு நிழல் கொடுத்த
பெரு மரத்தின்
ஆயிரமாயிரம் இலைகளுள் ஒன்றாயும்,
அந்தக் காலமும் ஓர் கனவென
பார்த்திருக்க கண் முன்னே
கலைந்து போனது

உயிருக்கு உடற்பாரம் கனப்பதென
காம்புக்கு இலை தோன்றும்
காலமிது,
ஆயிரம் பருவங்கள் மாறினும்
வீழ்ந்த இலை முளைப்பதில்லை
வேறொன்று தான் முளைக்கும்

இந்தக் காற்றுக்கோ இல்லையெனில்
இறங்கி வரும் மழைத்துளிக்கோ
எந்த நேரத்திலும்
காம்பு தன் பிடியைக் கழற்றலாமென
காத்திருக்கும் காலமிது

கண்ணுக்குத் தெரியாத உயிரெனல்
கடைசியாய் அவிழும்
கைப்பிடியளவு காற்றுத் தான்.

வாழ்க்கை கிடைத்த போதில்
வாழ நினைக்கவில்லை
வாழ நினைத்த போதில்
வாழ்க்கை கிடைக்கவில்லை
எனினும்
எண்ணிக் கவலையுற ஏதுமிலை
இது நியதி

கைகாட்டி விடை சொல்லி ஆயிற்றா
திரும்பாதே
அந்தா தெரிகிறதுன் நதி தீரம்
அவ்வளவே..


1 comment:

  1. அருமையான எண்ணங்கள்
    நன்றே
    சொல்களில் இணைய
    கவிதை மின்னுகிறதே!

    ReplyDelete