Friday 3 August 2012

வற்றிய கடல்..

இதற்குமேலும் உன்னால்
எதுகுமினித் தாங்கேலா
எதற்கு மனமே நீ
இன்னும் இழுத்தடிக்கின்றாய்?

உயிருக்குச் சொல் உடலில்
ஓடியது காணுமென்று
மயிரளவும் மதிப்பில்லா
மண்ணான வாழ்வொடு வீண்
மல் வேண்டாம் போதுமென
மதி உரை நீ, ஆறுதலாய்
சொல்வது போற் சொன்னால்
உயிர் கேட்கும் சொல்லிப் பார்

ஓய்வில்லாப் பயணியாய்
உட் சென்றும் வெளி வந்தும்
தேய்மானம் இல்லாமல்
தீராமல் திரிகின்ற
மூச்சோடு பேசி முடிவைக் கேள்
முயன்றாலும்
வீச்சற்று விழப்போகும்
வீணுடலின் பாதைகளில்
காலத்தைத் தாழ்த்தாமல்
கலையச் சொல், வீழ்ந்தாலும்
எவருமே எடுத்தேந்த
இல்லாத இவ்வுடலில்
அவமாகக் காலத்தை
அழிக்காமல் போகச் சொல்

தினமும் மடிப்படைந்து
தீவிரமாய் எண்ணி எண்ணி
கனவும் கண்ணீரும்
கண்களுக்குள் வடிக்கின்ற
மூளைக்குச் சொல்
முட்டாள்த் தனத்தை எல்லாம்
வேளைக்குக் குறைத்து
வெறுந் துடிப்பை நிறுத்தி விட்டு
புலன்வதைக்கும் பொறிமுறையைப்
போட்டுறைந்து போ என்று,
கலங்கடிக்கும் கட்டளைகள்
காணும் என்று சொல்லி விடு

வற்றிய கடலாக
வறண்டுடைந்த நிலமாக
இற்று வீழ்ந்து விட்ட மரமாக
இயல்பறுந்து
செத்துயிர்த்துச் செத்துயிர்த்துச்
சிதைவானேன்? என் மனமே
இத்தனைக்கு மேல் பிறப்பால்
ஏலாது சீக்கிரமாய்
முற்றுப்புள்ளி வைத்திதனை முடி..

No comments:

Post a Comment