உறங்கும் போது துயரம் வற்றிவிடுகிறது,
இரவென்னும் கருப்பு மருந்து
மென்மையாக என் உதடுகளில் கரைகிறது.
ஆனால் விழித்தெழுகையில்
அடித்துப் போட்டது போல்
அத்தனை வலி
-
கனவு என்ற புதையற் குழியில்
சிதைந்துகொண்டிருக்கிறது என் அடையாளம்
தினமும் இறந்து தினமும் பிறக்கிறேன்
ஒவ்வொரு மறக்கப்பட்ட நினைவும்
என் தோலின் ஒரு பகுதி
-
நினைவுகளின் கண்ணாடி அறையில்
எத்தனை முறை
என்னை நானே கொன்றிருக்கிறேன்
உடைந்த கண்ணாடித் துண்டுகளில் பிரதிபலிக்கும்
எண்ணற்ற அகங்கள், எது நான், எது கனவு?
-
என் உற்ற தோழன் இறந்து போனான்
அவனது நினைவுகளைத் திரட்ட முடியாமல் தவிக்கிறேன்
யாருக்கும் தெரியாத ஒரு மரத்தின் பெயர் போல்
ஒரு நாள் நானும் இறப்பேன்,
-
வாழ்வின் பெருமூச்சாக
ஞாபகங்களின் பூச்சி கூடுகள்
உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.
-
மூளையின் இருண்ட நாடக அரங்கில்
ஒரு கனவு
மேலும் ஒரு கனவைக் கனவு காண்கிறது.
சூன்யத்தின் அப்பால் இருக்கிறேன்
இறந்தவர்களின் குரல்களை
ஒலிப்பதிவு செய்ய காத்திருக்கும்
ஒரு வெற்று ஒலிநாடா
-
நான் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் என்ன?
பசிக்கும் வயிறா
மகனின் அணைப்பின் சூடா?
-
ஒவ்வொரு மறதியும் ஒரு சிறிய சாவு
நான் பதுக்கி வைத்திருக்கும் நினைவுகளே
என் ஆன்மாவின் செலாவணி
ஆனால் எத்தனை நாணயங்கள் எஞ்சியிருக்கின்றன?
-
நான் இறக்கும் வேளை,
என் நினைவுகள் பறவைகளாக பறந்து செல்லுமா
அல்லது காகிதக் கப்பல்களாக மூழ்கிப் போகுமா?
-
அந்தக் கடைசி நாளில்
மூடிய கண்கள் இமைகளுக்குப் பின்
என்ன காண்கின்றன இறுதியாய்?
கனவா, வாழ்க்கையா அல்லது
வேறொரு பிறப்பின் முதற் தரிசனமா?
-
பொன்னிறக் கதவு ஒன்று திறக்கிறது
நான் நுழைகிறேன்..