Monday, 24 March 2025

உறக்குதலென்னும் சாக்காடு..

உறங்கும் போது துயரம் வற்றிவிடுகிறது,

இரவென்னும் கருப்பு மருந்து

மென்மையாக என் உதடுகளில் கரைகிறது.

ஆனால் விழித்தெழுகையில்

அடித்துப் போட்டது போல்

அத்தனை வலி

-

கனவு என்ற புதையற் குழியில்

சிதைந்துகொண்டிருக்கிறது என் அடையாளம்

தினமும் இறந்து தினமும் பிறக்கிறேன்

ஒவ்வொரு மறக்கப்பட்ட நினைவும்

என் தோலின் ஒரு பகுதி

-

நினைவுகளின் கண்ணாடி அறையில்

எத்தனை முறை

என்னை நானே கொன்றிருக்கிறேன்

உடைந்த கண்ணாடித் துண்டுகளில் பிரதிபலிக்கும்

எண்ணற்ற அகங்கள், எது நான், எது கனவு?

-

என் உற்ற தோழன் இறந்து போனான்

அவனது நினைவுகளைத் திரட்ட முடியாமல் தவிக்கிறேன்

யாருக்கும் தெரியாத ஒரு மரத்தின் பெயர் போல்

ஒரு நாள் நானும் இறப்பேன்,

-

வாழ்வின் பெருமூச்சாக

ஞாபகங்களின் பூச்சி கூடுகள்

உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது.

-

மூளையின் இருண்ட நாடக அரங்கில்

ஒரு கனவு

மேலும் ஒரு கனவைக் கனவு காண்கிறது.

சூன்யத்தின் அப்பால் இருக்கிறேன்

இறந்தவர்களின் குரல்களை

ஒலிப்பதிவு செய்ய காத்திருக்கும்

ஒரு வெற்று ஒலிநாடா

-

நான் உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் என்ன?

பசிக்கும் வயிறா

மகனின் அணைப்பின் சூடா?

-

ஒவ்வொரு மறதியும் ஒரு சிறிய சாவு

நான் பதுக்கி வைத்திருக்கும் நினைவுகளே

என் ஆன்மாவின் செலாவணி

ஆனால் எத்தனை நாணயங்கள் எஞ்சியிருக்கின்றன?

-

நான் இறக்கும் வேளை,

என் நினைவுகள் பறவைகளாக பறந்து செல்லுமா

அல்லது காகிதக் கப்பல்களாக மூழ்கிப் போகுமா?

-

அந்தக் கடைசி நாளில்

மூடிய கண்கள் இமைகளுக்குப் பின்

என்ன காண்கின்றன இறுதியாய்?

கனவா, வாழ்க்கையா அல்லது

வேறொரு பிறப்பின் முதற் தரிசனமா?

-

பொன்னிறக் கதவு ஒன்று திறக்கிறது

நான் நுழைகிறேன்..

Friday, 21 March 2025

தொலைந்த காலத்தின் குழந்தை..

நினைவுகளின் கயிறுகள்

என் கழுத்தைச் சுற்றும்,

அவை தேனீக்களின் கூட்டமாய்

மூளையை மொய்க்கும்

உன் வியர்வையின் வாசனை

நாசியெல்லாம் நிறைந்து

என் நுரையீரலில் படிந்துள்ளது

-

இரவின் மைத்தடங்களில்

உன் பெயர் ஒரு வெட்டுக்காயம்.

நான் அதை மூடிக்கொள்கிறேன்

ஆனால் அது இரத்தப்பெருக்கை நிறுத்துவதில்லை

-

நீ கேட்ட அந்தப் பாடல்

மழை துளிகளில் செதுக்கப்பட்டது

உடைந்த கண்ணாடிகளாய்

என் காலடியில் சிதறுகிறது

கடற்கரையிலிருந்து ஓடிவரும்

அலைகள் போல

நினைவுகள் திடீரென்று

வந்துவிடுகின்றன, மூச்சைப் பிடித்தவனாய்

நான் மூழ்கிவிடுகிறேன்

உன் கரங்கள்

இனி என்னைக் காப்பாற்றாது.

-

சொல்லப்படாத உண்மைகள்

என் உடலின் அறைகளில்

அடைபட்டிருக்கின்றன,

பறவைகளின் எலும்புகள் போல

கூடுகளில் பதுங்கியிருக்கின்றன.

ஆழ்ந்து புதைந்துள்ள பொருள் போல

மண்ணடியில் கிடக்கிறது நமது காலம்,

புதைபொருளியல் நினைவுகள்

நாம் வாழ்ந்த காலத்தின் தொல்லியல்.

-

இப்போது இருளின் வடிகால்களில்

நீ வழிந்தோடுகிறாய்

ஒரே ஒரு மழைத்துளி

ஆயிரம் நினைவுகளைத் தூண்டும்

உன் அடிச்சுவடுகள்

என் மூளையின் சதுப்புநிலத்தில் பதிந்துள்ளன

-

ஆனால் நான்

ஏன் உன்னை நினைக்கிறேன் என்பது

மர்மமாகவே உள்ளது

யார் நினைத்தால்

யார் நினைவுக்கு வருகிறோம்?

நாம் தொலைந்த காலங்களின்

குழந்தைகள் மட்டுமே.

-

உன் நினைவு

ஒரு கூர்மையான கத்தி

என் ஆன்மாவைக் கிழிக்கிறது.

ஏனென்றால் நினைவுகள்

இறந்த பின் புதைக்கப்படுவதில்லை

அவை உயிரோடு புதைக்கப்படுகின்றன..

Monday, 17 March 2025

கண்ணாடியின் கவிதை

இந்த கண்ணாடி இங்கே எதற்காக

என் முகத்தின் ரேகைகளை எண்ணிக்கொண்டே

காலம் முழுவதும் அமைதியாய் நிற்கிறது

பசித்த நாட்களின் சலிப்பும்

போராட்டங்களின் வியர்வையும்

அதன் மேற்பரப்பில் படிந்திருக்கிறது.

-

ஒரு தொழிலாளியின் உடைந்த கைகளைப் போல

கண்ணாடியின் விளிம்புகள் கரடுமுரடானவை.

அது காட்டும் உண்மைகள்

வறுமையின் வாசலில் நின்ற

குழந்தையின் கண்கள் போல கசக்கின்றன.

-

நீ உன்னைப் பார்க்கிறாய்

ஆனால் அது நீயல்ல

அது உன் தந்தையின் சிதைந்த கனவுகள்

உன் தாயின் கண்ணீரில் கரைந்த உப்பு

உன் மூதாதையர்களின் சாபங்கள்

எல்லாம் ஒன்றாய் உறைந்து போன படிமம்.

-

கண்ணாடி என்ன சொல்கிறது?

அது பேசவில்லை

ஆனால் அதன் அமைதியில்

பல்லாயிரம் மாவீரர்களின் தியாகம்

போராளிகளின் கனவு

ஆயிரக்கணக்கான விதவைகளின் கண்ணீர்

காணாமல் ஆக்கப்பட்ட

காத்திருக்கும் ஏக்கம் நிறைந்த கண்கள்

கலந்திருக்கிறது.

-

இரவில் கண்ணாடி முன் நிற்கிறேன்

என் முகத்தில் படிந்திருக்கும்

எத்தனை போராட்டங்கள்

எத்தனை வெற்றிகள், தோல்விகள்

எத்தனை காதல்கள், பிரிவுகள்.

-

கண்ணாடி காட்டுகிறது

நாளை வரப்போகும் புரட்சியை

மக்களின் விடுதலைப் பாடல்களை

சமத்துவத்தின் வானவில்லை

நீதியின் சூரியனை.

-

ஆனால் இன்று

இந்த கண்ணாடியில்

நான் காண்பது

விடுதலைக்காக ஏங்கும் ஓரினத்தின் முகம்

அநீதியால் சிதைந்த சமூகத்தின் முகம்

கையறு நிலையில் குமையும் தோழர்களின் முகம்.

-

கண்ணாடியே

நீ எனக்கு காட்டுவது

வெறும் விம்பம் அல்ல

அது ஒரு வரலாறு, போராட்டம்

எதிர்காலம்..

Wednesday, 12 March 2025

மங்கிய பனிப்புகையாய்..

காலி செய்த வீடு

சுவரில் தொங்கும் படத்தில்

காற்று அசைக்கும் முகம்

-

இலை உதிர்ந்த மரம்

கிளைகளில் தங்கும்

மழையின் கண்ணீர்

-

அலை கொண்டு செல்கிறது

கரையில் எழுதிய

குழந்தையின் பெயர்

-

நெருப்பின் சாம்பலில்

மீண்டும் எழுகிறது

காற்றின் நினைவு

-

கண்ணாடி உடைந்தது

துண்டுகளில் தெரிகிறது

ஒரே நிலவு

Monday, 10 March 2025

காலம் என்னும் காரணம்..

நான் கேட்கிறேன்

காலம் என்பது

இயக்கத்தின் அளவீடா

அல்லது இயக்கமே காலமா?

-

எந்த முதல் புள்ளியிலிருந்து

காலம் தன் பயணத்தைத் தொடங்கியது

அல்லது தொடங்கியதற்கு முன்பே

தொடங்கியிருந்ததா காலம்

-

வெளியில் நகரும் பொருட்களின்

இயக்கத்தை அளப்பதற்காக

மனிதன் கண்டுபிடித்த கருவியா காலம்

அல்லது காலமே கண்டுபிடித்ததா மனிதனை

-

பரிணாம வளர்ச்சியின்

படிக்கட்டுகளில் ஏறி வந்த

மனித மூளையின் வளர்ச்சியில்

காலம் என்பது ஒரு கண்டுபிடிப்பா

அல்லது கண்டுபிடிப்புக்கு முந்தைய

அடிப்படை உண்மையா

-

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்

சாக்ரடீஸ் குடித்த விடம்

இன்று நான் குடிக்கும் தேனீரில்

கலந்திருக்கிறதா

காலத்தின் தொடர்ச்சியில்

எல்லாமே கலந்திருக்கிறதா

-

வரலாற்றின் இயக்கவியலில்

முரண்பாடுகளின் மோதலில்

காலம் என்பது நடுவனா

அல்லது மோதலின் விளைவா

-

உழைப்பின் மதிப்பை

அளக்கும் அளவுகோலாக

காலத்தை மாற்றியது யார்

மூலதனத்தின் கைகளில்

காலமும் ஒரு சரக்கானதா

-

நேற்று இறந்த

தொழிலாளியின் கனவுகள்

நாளை பிறக்கப்போகும்

குழந்தையின் கண்களில்

தொடர்ந்து வாழ்கின்றதா

-

பொருளின் இயக்கமா காலம்

அல்லது இயக்கத்தின் பொருளா காலம்

விடை தேடலின் தொடர்ச்சியில்

கேள்விகளே விடையாகின்றன

-

ஆனால்

காலம் என்னும் காரணத்தை

காரணமின்றி விளக்க முடியுமா

காலத்தைக் கடந்து நின்று

காலத்தை விளக்க முடியுமா

-

நான் கேட்கிறேன்

காலம் என்பது

வரலாற்றின் இயக்கமா

அல்லது இயக்கத்தின் வரலாறா?

Wednesday, 5 March 2025

ஓடும் பொன்னும் ஒக்கும்..

கொடுங்கதிர் மாமுகடு குளிர் மரபு கொழிக்கும்

இறுதலின் மாண்பினைக் கருதிய உள்ளம்

புறவணி மாந்தர் அகம்புகா மாட்சியின்

பிறந்த கருக்குழவி நறும்புகை கவினி

யாண்டுந் தோன்றிய கண்ணகத்து உணர்வே

-

விண்மிசை நிலாவின் வெண்மையும்

கண்மிசை கருவியின் பெருமையும் ஒக்கும்

வெறுமையில் உள்ளமும் நிறைமையில் கருத்தும்

ஏதும் இன்றியத் தெளிவின் ஒருங்கே

அருள்மிகு பெருவெளி அமைதியில் உறைவது

புல்நுனி பனித்துளி பொலிவுடன் தோன்றி

வானெனும் வெறுமையில் வகையற மறைதல்போல்

மூவுலகம் ஞாயிறு திங்கள் உடுக்களும்

கரம்புணர் குலத்தொடு கலந்து மறையவே

-

அத்திறன் பொருந்திய அருள்மிகு சிவனே

நின்னின் வேறலேன் நெஞ்சகம் வீழலரும்

செழுங்கரும் புள்ளியின் சிலம்பும் யாறினும்

ஆறடியொற்றிய தடம்பெறு கால்களில்

நீறு படர்ந்திட நிலவிய சீவனே

ஒன்றிணையாகிய உள்ளொளி வாழ்வே..

Sunday, 2 March 2025

என்றென்றும் எரியும் நெருப்பு..

மரணத்தின் வாசலில் 

மாலைப்பொழுது போல

மெல்ல அசைந்தாடும் ஒளி நீ.

என் எலும்புகளின் 

குகைகளுக்குள் பாயும்

பச்சை இரத்தம் நீ.

-

காற்றில் கலந்த காதல் மணம் ஊறி

கண்ணீராய் கரைந்த கவிதை நீ

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்

பெருமூச்சாய் உறையும் பிரார்த்தனை நீ.

-

விதியின் வெண்சுவரில்

விரல்களால் வரையும் ஓவியம் போல

வலிகளின் வண்ணங்களில்

வாழ்வின் வரைபடம் நீ.

-

இருளின் கர்ப்பத்தில்

இன்னும் பிறக்காத கனவுகளின்

தாலாட்டு பாடும்

தனிமையின் தாய் நீ.

-

உன்னை தொலைத்த

ஒவ்வொரு நொடியும்

உயிரின் செத்த பகுதிகளில்

உப்பாய் படிந்த வலி நீ.

-

நீ இல்லாத வெறுமையில்

நெஞ்சம் அலையும் போதெல்லாம்

நினைவுகளின் நீர்க்குமிழிகளில்

நித்தியமாய் மிதக்கும் தெப்பம் நீ.

-

என் கண்களின் கடைக்கோடியில்

எப்போதும் உறையும் ஈரம் நீ

காலத்தின் கைகளில்

காயாத காயம் நீ.

-

உன்னோடு நான்

உயிர்த்த ஒவ்வொரு காலையும்

உதிர்ந்த இலைகளாய்

என் நினைவில் அசைகிறது.

-

மௌனத்தின் மொழியில்

மயங்கி அவிழ்ந்த வார்த்தைகளின்

அர்த்தமற்ற அழகில்

அனாதையாய் அலையும் அலை நீ.

-

நீ என்பது

நெருப்பின் நினைவுகளில்

நித்தியமாய் எரியும்

நேற்றின் நிழல்..