வதைப்பவன் கைகளில்
இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது
ஒவ்வொரு அடியிலும் அவன்
தனது அகத்தின் சாளரங்களை
நிலக்கரி பூசி அடைக்கிறான்.
-
அவன் ஆன்மா
ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு
வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட
வெளியே விடாத கருங்குழி
அவன் குருதியில் இப்போது
நிழல்கள் உறைகின்றன
அவன் தொடும் இடமெல்லாம்
காலம் தன் நிறத்தை இழக்கிறது.
-
வதைப்பவன் என்பவன்
தனது விதியால் கைவிடப்பட்ட
ஒரு தையற்காரன்
பிறர் வலிகளால் அவன் தைப்பது
தனக்கான சவக்கோடியை மட்டுமே
-
ஆனால், வதைபடுபவன்
அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்
இப்போது ஒரு சுடரின் வாசல்
தசைகளைக் கிழிக்கும்போது
வெளியேறுவது குருதியல்ல
காலங்காலமாகத் தேங்கியிருந்த
ஆழ்மன இசை.
-
நரம்புகள் அறுபடும் கணத்தில்
அவை நரம்புகளாக இருப்பதில்லை
யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன
வலியில் துடிக்கும்போது
அவன் ஆன்மா
தன் கூட்டைத் துறந்து
வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.
அங்கே சொற்கள் இல்லை
அங்கே வதைப்பவன் இல்லை.
-
தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட
ஒரு பறவையின் சிறகசைப்பாய்
வதைபடுபவனின் உள்ளொளி
தன் சிறைநீங்கி விளிக்கிறது.
-
இருள் என்பது வதைப்பவனின் முகவரி
ஒளி என்பது வதைபடுபவன்
கண்டடைந்த ஒரு புதிய திசை..