வதைகளின் நினைவுகள் எனது தோலில்
அவர்களின் கோரமுகத்தை வரைந்துள்ளன
ஒவ்வொரு வடுவும் ஒரு கதை சொல்கிறது
நான் மரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக
கண்டங்களைக் கடந்தேன்
தேசங்களைத் தாண்டினேன்
-
உடைந்த என் உடல்
இந்த பனிப்பாறைகளில் தவழ்கிறது
ஆனால் என் கனவுகள்
என் மண்ணின் வெப்பத்தில் விளைகின்றன
அங்கே பனை மரங்கள்
என் வருகைக்காக காத்திருக்கின்றன
அங்கே என் காதலியின் கண்கள்
வீதிகளை நோக்குகின்றன
-
என் கைகளில் என்ன எஞ்சியுள்ளது
ஒன்றாய் நடந்த தோழர்கள் படங்கள்
மற்றும் நாங்கள் சேர்ந்து பாடிய
விடுதலையின் பாடல்கள் அவ்வளவுதான்
-
நினைவுகளின் சிறகுகளில் கனவுகளின் பாதைவழி
இரவில் நான் என் தாயகத்திற்கு திரும்புகிறேன்
அங்கே பூக்கும் பூவரசு மரங்களின் மணம்
இங்கே பனிக்காற்றின் குளிரை துடைக்கிறது
-
இந்த பனிபொழியும் தேசத்தில்
என் உடல் உறையலாம்
ஆனால் என் வார்த்தைகள்
என்றென்றும் என் மண்ணின் வெப்பத்தில்
உயிர்பெறும்
நான் இறந்தாலும்
அடுத்த தலைமுறைக்கு விடுதலையின் விதைகளாக
என் கவிதைகள் வாழும்
-
நாளை என் நாடு விடுதலை பெறுமா
கிழக்கிலிருந்து கதிரவன் உதிக்குமா
நான் அதைப் பார்க்காமல் போனாலும்
என் வார்த்தைகள் அந்த காலையை வரவேற்கும்
-
என் காதலியின் கைகள் என்னை தேடுகின்றன
எங்கள் இடையிலுள்ள பெருங்கடலிலும்
எல்லைகளிலும், தடுப்புச் சுவர்களிலும்
காதல் என்ற அந்த அற்புதமான பறவை பறக்கிறது
-
உயிரோடோ அல்லது வார்த்தைகளிலோ
என்றோ ஒருநாள்
நான் திரும்பி வருவேன்
அதுவரை
இந்த பனிப்பெருக்கிற்கிடையில்
என் தாயகத்தின் வெப்பத்தை
நான் மனதில் சுமக்கிறேன்..