ஊர்க்குருவி - Thiru Poems
என் இன்றைய இருப்புக்கான நேற்றைய சுவடுகள்..
வியாழன், 8 ஜனவரி, 2026
ஏலோர் எம்பாவாய்..
வியாழன், 25 டிசம்பர், 2025
பாவங்கள் இரெத்தத்தால் கழுவப்படும்..
எங்களின் கண்ணீர்
உப்புச் சுவை கொண்டதல்ல
அது எங்கள் நிலத்தின்
ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும்
முறிக்கப்பட்ட பனையின்
ஏக்கத்துவர்ப்புச் சுவை கொண்டது,
-
நீங்கள் கேட்கிறீர்கள்
எல்லோரும் விடைபெற்ற பின்
இந்தப் புழுதியில்
எதை விதைக்கிறீர்கள் என்று,
நாங்கள் விதைகளை விதைப்பதில்லை
மண்ணில் விழுந்த
எங்களின் பெயர்களை
எரிக்கப்பட்ட தேசக்கனவின்
எஞ்சிய சாம்பலை
தாயின் கருப்பைக்குள்
உறங்கிக் கொண்டிருக்கும்
நாளைய விடியலை
கண்ணீரை நீராகக் கொண்டு
விதைத்துக் கொண்டிருக்கிறோம்
-
நிலம் ஒரு வரைபடம் அல்ல
அது எங்களின் தோல்
ஒரு நாள்
எங்களின் துயரத்தின் உப்பிலிருந்து
ஒரு பேரொளி உதிக்கும்
அன்று,
நிலம் தன் மூச்சை
ஆழமாக இழுத்துவிடும்
எங்கள் அறுவடை என்பது
நெல்மணிகள் அல்ல
அது துண்டிக்கப்பட்ட நாக்குகள் பாடும்
விடுதலையின் பாடல்
உழவனுக்கும் நிலத்திற்குமான
உறவல்ல இது,
உயிருக்கும் அதன்
கடைசித் துளிக்கும் இடையிலான
மகா அறுவடை…
பனிக்கும் பனைக்கும் இடையிலான தூரம்..
எனது நிலம்
எரிக்கப்பட்ட பனை ஓலையின்
கடைசிச் சாம்பலில் எழுதிய
நிறைவேறாத ஓர் உயில்
நான் அந்த நிலத்தின்
ஒரு துளி வியர்வை
அதன் விடுதலையை
என் நரம்புகளின் இசையாக மாற்றினேன்
ஆனால்,
இரும்புக் கைகள் கொண்ட
வல்லாதிக்கத்தின் கருப்புப் பற்கள்
என் வீட்டின் வாசலில் பூத்திருந்த
ஒவ்வொரு பூவையும் கடித்துக் குதறின
தோல்வி
என் முதுகில் விழுப்புண்களாகச்
செதுக்கப் பட்டிருக்கின்றன
அவை காயங்களல்ல
சொந்த மண்ணின் வரைபடத்தை
என் உடலில்
வரைந்திருக்கும் கோடுகள்
இன்று நான்
மேற்கின் சாம்பல் நிறக் குளிரில்
வேரற்ற ஒரு பாறையைப் போலக் கிடக்கிறேன்
இந்த மண்ணின் பனி
என் கண்களில்
வெள்ளை நிறக் குருதி போலப் படிகிறது
கதிரவன்
இங்கே ஓர் அந்நியனைப் போல
சினந்து பார்க்கிறான்,
காற்றோ என் மொழியைப் புரியாமல்
சாளரங்களின் கண்ணாடிகளில் மோதித்
தற்கொலை செய்கிறது
தனிமை என்பது
பல கோடி மனிதர்கள் நடுவே
எம் மொழியைப் பேச இடமில்லாமல்
உறைந்த பனியில் செருப்பின்றி நடப்பது
குடிபெயர்ந்த பறவைகளுக்குக் கூட
ஓர் கூடு உண்டு ஆனால்
நாடு பெயர்ந்தவனுக்கு
வானம் கூட ஒரு சிறைச்சாலை தான்
தமிழர் கடலின்
அலையடித்துப் பழகிய
என் செவிகளுக்குள்
இப்போது பனியின் மௌனம்
ஈயத்தை உருக்கி ஊற்றுகிறது
நாடிழந்து போதல் என்பது
வெறும் வீட்டை இழப்பதல்ல
நம் உடலின் திசுக்களிலிருந்து
நிலத்தின் தாதுக்களைப் பிடுங்கி எறிவது
அல்லது நம்மை நாமே
காலத்தின் வெளியில்
தொலைத்துவிட்டுத் தேடுவது
போராடித் தோற்றவனின் வலியும்
புலம்பெயர்ந்து மடிபவனின் ஏக்கமும்
இந்த உலகத்திற்குப் புரியப்போவதில்லை
நான் இங்கே
ஒரு கல்லாக மாறிக்கொண்டிருக்கிறேன்
ஆனால் அந்தப் பாரம்
என் நிலத்தின் பாரமல்ல
திரும்பிப் போக முடியாத
ஒரு நீண்ட பாதையின் பாரம்…
ஞாயிறு, 21 டிசம்பர், 2025
காற்றான இறகு..
நரை தட்டிய வானத்தின் கீழே
உப்புக் காற்றின் ஈரம் படிந்த
என் சாளரத்தின் வழியே பார்க்கிறேன்
அங்கே
ஒரு சிறிய இறகு
தன் பறவையைத் தொலைத்துவிட்டு
வெறும் காற்றின் கைகளை
நம்பிக்கொண்டு மிதக்கிறது
அது ஒரு சாதாரண நிகழ்வுதான்,
-
ஆனால்
கரையைத் தேடாத ஒரு மாலுமியைப் போல
அது திசைகளைப் பற்றிக்
கவலை கொள்வதாய் தெரியவில்லை
கடலில் தொலைந்த பழைய கப்பல்களின்
சிதைந்த பலகையைப் போல
அது அந்தரத்தில் அலை பாய்கிறது
-
நாம் எல்லோரும்
நினைத்துக் கொண்டிருக்கிறோம்
பறவை என்பதுதான் வாழ்வு
இறகு என்பது வெறும் ‘எச்சம்’ என்று,
இல்லை
உண்மையில் அந்தப் பறவை என்பது
சிறைப்பட்ட ஒரு கூடு மட்டுமே
அந்தப் பறவை
என்றோ இறந்து போயிருக்கலாம்
ஆனால்
பிரிந்த இந்த இறகில் தான்
இன்னும் அந்தப் பறத்தலின் ஆன்மா
உயிர்ப்போடு துடித்துக்கொண்டிருக்கிறது,
-
பயணங்கள் தான்
நம்மை உருவாக்குகின்றன.
சேருமிடம் என்பது ஒரு பொய்
துறைமுகங்கள் என்பவை
சற்றே இளைப்பாறும்
தங்கும் விடுதிகள் மட்டுமே
-
உண்மையான வாழ்வு என்பது
நடுக்கடலில்
திசைகள் அறுந்த அந்த நொடிகள் எழுதும்
வரைபடம் இல்லாத
பெருவெளியிற் தான் இருக்கிறது
-
அந்த இறகு இப்போது
தான் மிதக்கும் வெளியெங்கும்
இப்படி எழுதுகிறது..
‘நான் எங்கும் போகவில்லை
நான் எங்கும் தங்கவும் இல்லை’
காற்றாகவே ஆகி விட்டேன்..
ஞாயிறு, 14 டிசம்பர், 2025
தோற்றுப்போன கடவுள்..
இந்த யுகத்தில் அறம் என்பது
யாரோ ஒருவன் கனவில் கண்ட
மறந்துபோன மொழி,
எந்த அகராதியிலும்
அதற்குப் பொருள் இல்லை
விடுதலை என்ற சொல்
இரத்தத்தில் எழுதப்படும்போது
அதைத் துடைக்க
ஆயிரம் கைகள் வருகின்றன
வெள்ளைக் கைக்குட்டைகளுடன்,
ஒப்பந்தங்களுடன், புன்னகைகளுடன்.
சதி என்பது
அரண்மனையின் சுவரில் தொங்கும்
விலையுயர்ந்த ஓவியம்
அதன் அழகை யாரும் மறுப்பதில்லை
பலம் என்பது ஒரு மொழி
அது பேசும்போது
அறம் வாய் மூடுகிறது,
நீதி காதுகளை மூடிக்கொள்கிறது,
சரித்திரம் கண்களைத் திருப்புகிறது.
இந்த உலகம்
ஒரு சூதாட்டக் களம்
யார் வெல்வார் என்பதை
சீட்டுத் தீர்மானிப்பதில்லை
சீட்டைக் கலப்பவன் தீர்மானிக்கிறான்,
அறம் என்பது
தோற்றுப்போன ஒரு கடவுள்
இன்னும் கோயில்கள் இருக்கின்றன,
ஆனால் உள்ளே
வெறும் இருட்டு மட்டுமே,
நான் என்ன செய்வேன்..?
இவ்வுலகு அறமற்றதாயினும்
அறத்தையே நம்புவேன்
தோற்றுப்போன கடவுளுக்கு
கடைசி வழிபாட்டாளனாய்
நிற்பேன், ஏனெனில்
இந்தத் தோல்வியிலும்
ஓர் அழகுண்டு
அது வெற்றிக்குத் தெரியாத அழகு..
செவ்வாய், 25 நவம்பர், 2025
இறப்பற்றவர்களுக்கு வயதில்லை..
வெள்ளி, 21 நவம்பர், 2025
வேரொடு சாய்ந்தனம்..
செவ்வாய், 18 நவம்பர், 2025
இதற்கெல்லாம் என்ன பதில்..
பல்லாயிரம் இதயங்கள்
ஒரே கனவுக்காகத் துடிப்பதை நிறுத்தின
அவர்களின் கடைசி மூச்சில்
தமிழீழம் என்ற சொல் மிதந்தது.
-
இப்போது அந்த ஆன்மாக்கள்
வானத்தில் அலைகின்றன
பதில் இல்லாத கேள்விகளாக
முடிவில்லாத ஏக்கங்களாக
-
அவர்களின் எலும்புகளில்
இன்னமும் கூட
விடுதலையின் பாடல்கள்
உறங்குகின்றன,
ஆனால் வரலாற்றை
எழுதுவது என்னமோ
வென்றவர்களின் பேனா மட்டுமே
-
இந்தப் பிரபஞ்சத்தில்
நியாயம் ஓர் அனாதைக் குழந்தை,
பலவான்களின் காலடியில்
அழுது கொண்டிருக்கிறது
-
ஆன்மபலம் என்பது
காற்றில் எழுதப்பட்ட கவிதை,
புயல் வரும்போது
அது சிதறி மறைந்து விடுகிறது
-
உண்மையின் வாள்
தந்திரத்தின் கயிற்றால்
கட்டப்பட்டுள்ளது,
நேர்மையின் கேடயம்
சூழ்ச்சியின் அம்புகளால்
துளைக்கப்பட்டுள்ளது
-
நாங்கள் இருக்கிறோம்
எங்கள் இல்லாமையில்,
நாங்கள் வாழ்கிறோம்
எங்கள் மரணத்தில்
-
எங்கள் வீழ்ச்சி என்பது
வரலாற்றின் இசையில்
அடுத்த இசைக்குறிப்புக்கு முன்னர்
ஓர் இடைநிறுத்தம் மட்டுமேயென
எண்ணுதலன்றி
ஆற்றிக்கொள்ள கைவசம்
எம்மிடம் வேறு
மாற்று வழிகள் இல்லை
-
எங்களால் இன்னும்
நம்ப முடியாமல் இருக்கின்ற
கேள்வி ஒன்று தான்
இந்த தியாகங்களுக்கெல்லாம்
என்ன பொருள்?
இந்த இழப்புகளுக்கெல்லாம்
என்ன பதில்?
ஞாயிறு, 16 நவம்பர், 2025
விளக்கின் அமைதி மொழி..
இருளின் கருவறையில் தனித்து நிற்கும் சுடரே,
நீ என் கண்களுக்கு மட்டுமல்ல,
என் உயிரின் சாளரங்களுக்கும் வெளிச்சம்.
-
காலம் என்னும் கடலில் மிதக்கும் தீவுபோல,
உன் ஒளிவட்டம் என்னை அணைத்துக் கொள்கிறது
வெறுமையின் விளிம்பில் நின்று
நீ காட்டும் வழியில் நடக்கிறேன்.
-
கற்பனையின் கரைகளில் உதிரும்
உன் ஒளித்துளிகள்,
என் நினைவுகளின்
நெற்றியில் பொட்டிட்டு அழகுபார்க்கின்றன,
ஒவ்வொரு இரவும் உன்னோடு
புதிய கதை பிறக்கிறது.
-
கருங்காட்டு நெருப்பின் குரலில்,
எரிமலையின் வேதனை சுமந்து பேசுகிறாய்.
"என் சுடர் என் நெஞ்சையே உருக்குகிறது" என
வார்த்தைகள் கனலாய் உதிர்கின்றன.
-
நிலாக்களின் கவிதையில்,
இரவு தன் இமைகளை மூடும் வேளையில்
உன் ஒளி பாடும் ரகசியப் பாடல்கள்
கனவுகளின் பறவைகள் உன் சுடரில் மிதக்கின்றன.
-
காட்டின் அடரிருளில்
மறைந்து போன
தொன்மைக் கதைகளை அகழ்ந்தெடுக்கிறாய்
உன் வெளிச்சத்தில் மிதக்கிறது
தொலைந்துபோன வீரர்களின் ஆயுதங்கள்
புதைந்துபோன பண்டைய நாட்களின்
பச்சைப் புல்வெளிகள்.
-
காற்றின் கரங்கள் உன்னை
அணைக்க முயலும்போதெல்லாம்
நீ அசைந்தாடி மீண்டும் எழுகிறாய்,
உன் துணிவில் தெரிகிறது
என் மூதாதையர் விட்டுச்சென்ற
அழியாத ஓர்மத்தின் சாயல்
-
இப்போது நீ என் கைகளில்
ஒரு குழந்தையின் இதயம்போல் துடிக்கிறாய்,
உன் வெளிச்சத்தில் நான் காண்கிறேன்
இன்னும் பிறக்காத காலத்தின் முகத்தை
இன்னும் சொல்லாத கவிதைகளின் முதல் வரிகளை
இன்னும் தொலைந்துபோகாத நம்பிக்கைகளின்
பச்சைக் கொடிகளை,
-
விளக்கே, நீ வெறும் ஒளியல்ல,
நீ என் தனிமையின் துணை
என் போராட்டங்களின் சாட்சி
என் கனவுகளின் காவலன்
என் வாழ்வின் விடியல்
-
இப்போது உன் சுடரில்
முற்காலமும் பிற்காலமும்
ஒரே நேரத்தில் மிதக்கின்றன
நீ எரியும் ஒவ்வொரு கணமும்
புதிய வரலாறு தன்னை எழுதுகிறது..
புதன், 12 நவம்பர், 2025
விடத்தின் நேர்மை..
கரிய மணிமுத்தாய் தெளிவாய்
கண்பார்க்க என் நாவில் வை
நஞ்சை
பாலின் வெண்மையில்
அதனை மறைக்காதே
ஏனெனில்
அத்தனை நம்பிக்கையுடன்
அதனை நான் அருந்தும் போது
நன்றி பொழியும் என் கண்கள்
உன்னைச் சங்கடப்படுத்தலாம்
-
நான் ஒரு திறந்த காயம்
நம்பிக்கை என்னும்
பெருநோய் பிடித்தவன்
நீ கொடுத்த ஒவ்வொரு
துளியையும் தேனாய் நுகர்வேன்
ஆதலால்
இது விடம் என்று சொல்
இருளை இருளாகவே கொடு
-
நஞ்சு நஞ்சாகவே இருக்கட்டும்
இறங்கும் போதே
உதடுகளில் எரிந்து
தொண்டை பிளக்கட்டும்
நான் கண்களைத் திறந்தபடி குடிப்பேன்
மரணத்தை நேர்மையாகப்
பருகவே விருப்புகிறேன்
உன் பொய்யை விட
உண்மை என்னைக் கொல்வதையே
அதிகம் விரும்புகிறேன்
ஏனெனில் நம்பிக்கை என்பது
என் இரத்தத்தில் ஓடும் ஆறு
அதனை மாசுபடுத்தாதே
-
தூய்மையாகக் கொல்
தூய்மையாகச் செல்..