Saturday, 12 July 2025

முகிலெனக் கலையும்..

அன்பாகப் பேசிக் கொண்டிருந்த

அந்த உதடுகள்

திடீரென்று கல்லாகிவிட்டன

உறைந்த குளிர்காற்றைப் போல

மௌனம் எங்களுக்கிடையே வந்து அமர்ந்தது

-

நான் ஏனென்று கேட்கவில்லை

அவளும் தான்,

தூரமான, வெறுமையான, அழகான

மௌனம் எம்மிடையே

விண்மீனைப் போல ஒளிர்ந்தது

-

பழகிய இத்தனை ஆண்டுகளும்

மழையைப் போல

என் முகத்தில் வீழ்ந்தன,

ஒவ்வொரு துளியிலும்

காத்திருப்பின் கனமும்

நினைவுகளும்,

இப்போது அவை அனைத்தும்

மேகம் போல கலைந்து செல்கின்றன

அன்பு இவ்வளவு குறுகியதா

மறதி இவ்வளவு நீளமானதா..

-

காதல் என்பது பறவையைப் போன்றது

வந்தபோது தெரியவில்லை

போகிறபோது தெரிகிறது

-

அவளுடைய மௌனம் என்னைச் சுற்றி

பரந்த கடலைப் போல விரிந்தது

அலைகள் இல்லாத கடல்,

வானத்தில் மறைந்த விண்மீன் போல

தூரத்தில் இருப்பதாய்த் தோன்றுகிறது

இன்னும் ஒளிவீசுவதாய் தெரிகிறது

ஆனால் அது எங்குமில்லை

-

இரவின் காற்று எங்கள் வீட்டைச் சுற்றி

தனிமையின் பாடல்களைப் பாடுகிறது

நாம் இல்லாத இடங்களில்

இருந்த அடையாளம்

மௌனம் பேசும் இடமெல்லாம்

நாம் பேசிய வார்த்தைகளின்

எதிரொலி,

-

காதல் மேகம் போன்றது

வரும்போது பூமியை நனைக்கிறது

போகும்போது

வானத்தை வெறுமையாக்குகிறது..

-திரு

Saturday, 5 July 2025

கருப்பு..

நான் என் தோலை உரிக்க முடியாது
வரலாற்றை மறக்க முடியாது
பிறப்பை மறுக்க முடியாது

நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் நான் சாம்பலாக மாறவில்லை
விடுதலையின் தீபமாக
எரிந்து கொண்டிருக்கிறேன்

என் உடலில் தாயகத்தின் கனவு துடிக்கிறது
என் நெஞ்சில் ஈழத்தின் மண் வாசம்
என் கண்களில் விடுதலையின் நீலக் கனவு

நான் மூண்டபின் 
வான் நோக்கி எழும்
கந்தகப் புகையின் நிறத்தில்
என் அடையாளம்

நான் சாகும் நேரத்தைத் 
நானே தேர்ந்தெடுத்தேன்
அது எனது பலவீனம் அல்ல
அன்பு, 
எல்லோரும் சுதந்திரமாக
வாழவேண்டுமென எண்ணும்
கனிவு ததும்பும் 
எல்லையற்ற அன்பு 

கருப்பெனும் நெருப்பில்
கனவு நிறைகையில் 
விடுதலைக்கான விதையானேன்
ஒரு நாள்
நிலம் பிளந்து 
முளைக்கலாமென் கனவு
அதுவரையில்
நீரூற்றி நினைதல் 
நின் கடன்..

Thursday, 3 July 2025

பறவையெனும் ஞானம்..

பறவையின் இறகுகள் 

புவியின் கனவுகளைச் சுமக்கின்றன

அது பறக்கும்போது

வான வெளிகள் அதன் உடலாகின்றன

அமரும்போது

மரங்கள் அதன் குரலில் பேசத் தொடங்குகின்றன

மறையும்போது

ஞாபகங்கள் அதன் இறகுகளைப் பூண்டு 

காற்றில் மிதக்கின்றன.

-

ஒரு பறவைக்குள் உறங்குகிறது கடல்

ஒரு பறவையின் கண்களில் 

ஒளிர்கின்றன நட்சத்திரங்கள்

ஒரு பறவையின் இதயத்தில் துடிக்கிறது காலம்.

-

நான் பறவை அல்ல 

நான் அதன் பறத்தலின் சாட்சி

நான் வானம் அல்ல 

நான் நீலத்தின் பேரழுகை

நான் மரம் அல்ல 

நான் காலத்தின் தசைநார்கள்

நான் நினைவு அல்ல 

நான் மறதியின் கருப்பறை

நானென்பது இவையெல்லாம் பிறந்த 

பிரசவ வலியின் எதிரொலி

பிரபஞ்சத்தின் பெருமூச்சில் கரைந்த துளிகள்..

Monday, 23 June 2025

உறங்க முடிகிறதா..

நீதி தேடும் ஆன்மாக்களின்

அழுத்தம் மண்ணைப் பிளக்கிறது

ஒவ்வொரு மண்வெட்டியும்

நினைவின் அடுக்குகளை உரிக்கிறது

இந்தச் சிவந்த மண்ணில்

காலம் உறைந்து நின்றுவிட்டது

குழியிலும்

தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு

அருகிலேயே இருக்கிறார்கள்

-

நொருங்கிய ஒவ்வொரு விலா எலும்பும்

ஒரு கதையைச் சொல்கிறது,

உடைந்த ஒவ்வொரு மண்டை ஓடும்

கடைசி அலறலை நினைவுபடுத்துகிறது

-

வதையின் வலி தாங்க முடியாத

குழந்தைகளின் சிறிய கைகள்

இன்னும் தங்கள்

தாயின் கையை நோக்கி நீண்டிருக்கின்றன

-

செம்மணி என்ற பெயர்

இன்று வேறொரு அர்த்தம் பெறுகிறது

இரத்தத்தால் சிவந்த மண்,

கண்ணீரால் நனைந்த மண்,

நீதியற்ற மரணங்களின் சாட்சியாக

நிற்கும் மண்

-

ஒவ்வொரு அகழ்வும்

உலகின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது

எவ்வளவு காலம் நாம் கண்மூடித்தனமாக

இருந்திருக்கிறோம்?

எவ்வளவு குரல்கள்

நம் காதுகளை எட்டாமல்

இந்த மண்ணில் புதைந்துவிட்டன ?

-

தமிழீழ மண்ணின்

ஒவ்வொரு துகளிலும்

இப்படியான கதைகள் மறைந்திருக்கலாம்

காணாமல் போனவர்களின் கனவுகள்

நிறைவேறாத ஆசைகள்

சொல்லப்படாத காதல் கடிதங்கள்

-

இந்தக் கல்லறை

உலகின் கவனத்தைக் கோருகிறது

செம்மணி வழியாக வரலாறு பேசுகிறது

எப்படிக் கொடூரமான மனிதர்களெல்லாம்

இந்த மண்ணில் வாழ்கிறார்களென்பதை

தங்களின் எலும்புகளின் வழியாக

குழந்தைகள் சொல்கிறார்கள்

-

இந்த எலும்புகளைப் பார்த்த பின்னாவது

நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களா..?

இதுவெல்லாம் நடக்கும் போது

நீங்கள் எங்கே இருந்தீர்களென

என்றோ ஒருநாள்

குழந்தைகள் உங்களை கேட்க மாட்டார்கள்

என்று நம்புகிறீர்களா..?

-

நாம் அனைவரும் பொறுப்பாளிகள்

மௌனம் காத்தவர்களும்,

கண்மூடித்தனமாக இருந்தவர்களும்,

உண்மையை

மறந்தது போல் இருப்பவர்களும்,

-

இந்த மண் நம்மை விட்டுப் போகாது

இந்த எலும்புகள் நம்மை மன்னிக்காது

எதுவும் அறியாத இந்தக் குழந்தைகள்

நம் மனசாட்சியை விட்டு

ஒருபோதும் வெளியேறமாட்டார்கள்

-

என்னால் முடியவில்லை

உங்களால் முடிகிறதா உறங்க.. ?

Thursday, 19 June 2025

அறியாத பாதைகள்..

நொடிகள்

என் கண்களில் துளிர்க்கும் முன்னர்

காணாமல் போகின்றன

காற்றில் கரைந்த உப்புப் போல்

வாழ்வின் சுவை மறைந்து போகிறது.

-

எழுத்துகள்

என் விரல்களில் இறந்து கிடக்கின்றன

புத்தகங்கள்

அமைதியான கல்லறைகள் ஆகிவிட்டன

ஒவ்வொரு பக்கமும் ஒரு கண்ணீர்த்துளி

ஒவ்வொரு வரியும் ஒரு பெருமூச்சு.

-

போரில் தோற்ற இனம் என்கிறீர்கள்

ஆம், நான் என் சொந்தப் போரில்

தோற்றுவிட்டேன்

கனவுகளின் கொடிகள் கிழிந்து பறக்கின்றன

நம்பிக்கையின் கோட்டைகள்

இடிந்து கிடக்கின்றன.

-

விருப்பங்கள் வாடிய பூக்கள் போல்

என் மனதின் தோட்டத்தில்

உதிர்ந்து கிடக்கின்றன

காலம் ஒரு கொடிய தோட்டக்காரன்

அனைத்து வண்ணங்களையும்

சாம்பலாக்குகிறான்.

-

அறியாத பாதைகளில் நான் நடக்கிறேன்

ஒவ்வொரு அடியும் ஒரு கேள்விக்குறி

இருள் என் நிழலின் வடிவமாகி விட்டது

தனிமை என் மூச்சுக்காற்றாக மாறிவிட்டது.

-

ஆனால் இந்த வேதனையிலும்

ஓர் அழகு இருக்கிறது

தோற்ற இனங்கள் மட்டுமே

உண்மையான துக்கத்தின் இசையை அறிகின்றன

மூழ்கியவர்கள் மட்டுமே

மேற்பரப்பின் மதிப்பை புரிந்து கொள்கிறார்கள்.

-

என் இதயத்தில் ஒரு சிறு விளக்கு

இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது

சீக்கிரம் அணைந்துவிடும் என்று நினைக்கிறேன்

ஆனால் இன்னும்

ஒளிர்ந்து கொண்டிருக்கிறது..

Sunday, 1 June 2025

காதலின் அழகியல்..

ஆயிரம் பெண்கள் வீதியில் நடக்கிறார்கள்

மனதிற்கு நெருக்கமானவள் மட்டும் 

அவ்வளவு அழகாய்த் தெரிகிறாள் 

-

காதல் என்பது அழகை உருவாக்கும் சிற்பி,

அது சாதாரண முகத்தில் 

விண்மீன்களை விதைக்கிறது,

கூந்தலில் கடலின் அலைகளை பின்னுகிறது

குரலில் பறவைகளின் கீதங்களை கலக்கிறது

-

அவள் அவ்வளவெல்லாம் அழகி அல்லவென 

உலகம் சொல்லலாம் 

ஆனால் என் காதல் பதில் சொல்கிறது

அழகு என்பது என் பார்வையில் பிறந்து 

காதலில் வளர்வது 

-

மழையில் நனைந்த பூமி அழகானது,

ஏனெனில் அது வானத்தின் முத்தங்களை 

ஏற்றுக்கொண்டது.

-

அதுபோல் என் காதலில் நனைந்த பெண்

அழகின் இராணியாகிறாள்

காதல் கொண்ட கண்கள் பொய் சொல்வதில்லை,

உண்மை தான் தோழி 

அழகிகள் எல்லாம் காதலிக்கப் படுவதில்லை 

ஆனால் 

காதலிக்கப்படுகின்ற ஒவ்வொருத்தியுமே 

அழகிதான்.. 

Tuesday, 27 May 2025

அறியாமையின் நதி..

நீ வருவாயா எனத் தெரியாமல்

காற்றின் கையெழுத்தில்

உன் பெயரைத் தேடுகிறேன்

மாலை வானத்தின் ஒவ்வொரு நிறத்திலும்

உன் கண்களின் நினைவுகளை

வாசிக்கிறேன்

-

எந்த வீதியின் முனையில்

உன் குரல் காத்திருக்கிறது

எந்த பூக்களின் வாசனையில்

உன் தேக மணம் மறைந்திருக்கிறது ?

-

‘காலம் ஒரு கொடூரமான கவிஞன்’

நம் சந்திப்புகளை மறந்து விடுகிறான்

நம் பிரிவுகளை எழுதுகிறான்

-

ஆனால் இந்த அறியாமையே

காதலின் அழகு

நம் இதயங்களின் புவியியல்

-

வெள்ளி நிலவின் கீழ்

நாம் சந்திப்போம் என்று

வாக்குறுதி அளிக்கும்

கடலின் அலைகள் போல

அறியாமையின் இனிய வலியுடன்

நாமும் வருகிறோம் போகிறோம்

-

ஏனெனில் காதல் என்பது

ஒரு கேள்வி மட்டுமே

பதில் கிடைத்துவிட்டால்

அதன் அழகு மறைந்துவிடும்..