Saturday, 23 August 2025

பாவங்கள் இரெத்தத்தால் கழுவப்படும்..

வாக்குச் சீட்டு என்பது

அடிமையின் கனவில் தோன்றும் 

பறக்க முடியாத சிறகு,

சனநாயகம் என்று சொல்லி

புலியின் நகத்தை வெட்டுகிறார்கள், 

பற்களைப் பிடுங்குகிறார்கள்,

இதோ, நீ இப்போது சுதந்திரமானவன் என்கிறார்கள்.

புலி புலியாகவே இருக்க வேண்டும்

காட்டின் நினைவுகளோடு,

இரத்தத்தின் நினைவுகளோடு,

போரின் நினைவுகளோடு.

அவர்கள் சொல்கிறார்கள் 

"வா, பசுவாக மாறு, 

புல்லை மேய், மணியின் சத்தத்திற்கு தலையசை."

ஆனால் விடுதலை பெற்ற தேசங்கள் எதுவுமே  

வாக்குச் சீட்டால் அதனை அடையவில்லை 

அவர்கள் தங்கள் 

நரம்புகளையும், எலும்புகளையும்,

தசைகளையும், உயிரையும் பிழிந்து தான்

அடிக்கல்லை நட்டார்கள்.

தேர்தற் பெட்டி

அது எங்கள் தொட்டில் அல்ல,

கல்லறையும் அல்ல, 

அது வெறும் மாயை கண்ணாடியில்

சுதந்திரம் போற் தெரியும் 

இன விழிப்பை விழுங்கும் கருந்துளை

விடுதலைக்கு எப்போதும்

குறுக்கு வழி கிடையாது, 

சனநாயகம் என்ற மாயப்பட்டுப்பாதை

ஒருபோதும் உன்னை 

அங்கே இட்டுச் செல்லாது.

இனவிடுதலை எனில்

இருப்பது வெறும் இரத்தம் தோய்ந்த பாதை, 

நெருப்பு எரியும் பாதை, 

இரவும் பகலும் இல்லாத பாதை

அவர்கள் கேட்கிறார்கள்

ஏன் வன்முறை? 

நாம் திரும்ப கேட்கிறோம் 

ஏன் அடிமைத்தனம்? 

புலி பசுவாக மாறினால் 

அது இறந்து விட்டது என்று அர்த்தம். 

போர்க்குணம் தான் 

எங்கள் மூச்சு, எங்கள் நாடி, 

எமக்கிருக்கும் கடைசி வழி

ஒவ்வொரு வாக்குச் சீட்டும் 

ஒரு சரணடைதல் ஒப்பந்தம்,

ஒவ்வொரு தேர்தலும் 

ஒரு மறதியின் விழா

நினைவில் கொள்  

விடுதலை என்பது கேட்டு வாங்குவது அல்ல, 

பறித்தெடுப்பது, 

பற்களால், நகங்களால், உயிரால்

புலி புலியாகவே இருக்கட்டும்

காடு திரும்ப வரும் வரை, 

மழை திரும்ப வரும் வரை, 

நாம் திரும்ப வரும் வரை..

Tuesday, 19 August 2025

வெற்றிடத்தின் வாசல்..

மீளவும் முடியாமல்

முழுமையாய் வாழவும் முடியாமல்

இரண்டு கரைகளுக்கிடையே தத்தளிக்கும்

ஒரு துடுப்பற்ற படகு நான்

அலை என்னை எங்கே கொண்டு செல்கிறதோ

அங்கே போகிறேன்

-

இளமை என்ற பூ உதிர்ந்த மரத்தடியில்

மகிழ்ச்சி என்ற பறவை இறந்து கிடக்கிறது

நட்பு என்ற நதி வற்றிப்போன படுக்கையில்

உறவு என்ற மீன்கள் துடிதுடித்து மடிகின்றன

நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,

வெறும் சாட்சியாக.

-

மேகம் போல கலைகிறேன்

முதலில் விளிம்புகள்

பிறகு மையம்

கடைசியில் நினைவு கூட

காற்று என்னை எங்கெங்கோ சிதறடிக்கிறது

ஒரு துளி இங்கே

ஒரு துளி அங்கே

எங்கும் நான் எங்கும் இல்லாத நான்

யார் சேகரிப்பார்கள் என்னை?

எந்த பாத்திரத்தில் பிடிப்பார்கள்?

நான் ஏற்கனவே ஆவியாகிவிட்டேன்

உங்கள் கண்களுக்குத் தெரியாத ஆவி

-

எதற்காக இத்தனை வருடங்கள்?

எதற்காக இத்தனை காத்திருப்பு?

எதற்காக இத்தனை கனவுகள்?

பாதி வாழ்வு கரைந்து போனது

கையில் எஞ்சியது வெற்றுக் காற்று

நான் கட்டிய வீடுகள் எல்லாம்

மணல் வீடுகளாக இருந்தன

அலை வந்தது சரிந்தன

இப்போது வெற்றுக் கடற்கரையில்

காலடித் தடங்கள் கூட இல்லாமல்

நான் நடந்தேனா இல்லையா என்று

எனக்கே தெரியாமல் நிற்கிறேன்

-

யாருமற்ற இந்த வெளியில்

எனக்கு நானே அந்நியன்

என் நிழல் கூட என்னை விட்டு விலகி

வேறொரு உடலைத் தேடிச் சென்றுவிட்டது

மெல்ல மெல்ல

இந்த அமைதி என்னை விழுங்குகிறது

முதலில் வார்த்தைகள் போகின்றன

பிறகு எண்ணங்கள்

கடைசியில் உணர்வுகள்

நான் ஒரு வெற்றுக் கலன்

எதையோ நிரப்பக் காத்திருந்த கலன்

ஆனால் யாரும் வரவில்லை

எதுவும் நிரம்பவில்லை

-

ஒரு பிடி மூச்சு மீதம் இருக்கிறது

அதை எப்படிச் செலவழிப்பது?

ஒவ்வொரு மூச்சும் ஒரு நாணயம்

எதை வாங்குவது இந்த நாணயத்தில்?

சில நேரம் மூச்சை அடக்கிப் பார்க்கிறேன்

இதுதான் முடிவா என்று

ஆனால் உடல் துரோகம் செய்கிறது

மீண்டும் சுவாசிக்க வைக்கிறது

நான் விரும்பாத இந்த வாழ்வை

யார் எனக்குள் திணிக்கிறார்கள்?

இந்த மூச்சு யாருடையது?

இந்தத் துடிப்பு எதற்காக?

-

மரணம் ஒரு அழகான பெண்ணைப் போல

தூரத்தில் நின்று சிரிக்கிறாள்

வா என்கிறாள் வருகிறேன் என்கிறேன்

ஆனால் கால்கள் நகரவில்லை

நான் இன்னும் ஏதோ எதிர்பார்க்கிறேன்

எதை? தெரியவில்லை

யாரோ ஒருவர் வருவார் என்று

எதுவோ ஒன்று நடக்கும் என்று

ஆனால் இந்தச் சூனியத்தில்

எதுவும் நடப்பதில்லை

நானும் காத்திருக்கிறேன்

மரணமும் காத்திருக்கிறாள்

-

இதுதான் என் கதை

அல்ல இது கதையே இல்லை

ஒரு மூச்சுக்காற்றின் பயணம்

எங்கிருந்தோ வந்து எங்கேயோ போகிறது

-

நான் இருந்தேனா இல்லையா

என்பது முக்கியமில்லை

இந்த வெற்றிடத்தில் நான் ஒரு எதிரொலி

யாரோ ஒருவர் எப்போதோ சொன்ன வார்த்தையின்

இறுதியில் நான் கேட்கிறேன்

இந்த வலி யாருடையது?

இந்த வெற்றிடம் எதற்காக?

பதில் இல்லை

பேசாநிலையின் பேராழத்துள் கரைகிறேன்

வெற்றிடத்தின் வாசலில் நின்று

ஒரு நிழல் எதையோ எழுதுகிறது..

Wednesday, 13 August 2025

சிரிப்பின் முகம்..

என் சிரிப்பு ஓர் திரையிட்ட பொய்யுரை,

பூத்துக்கிடக்கும் ரோஜாவின்

முட்களை மறைக்கும்

செயற்கை வெளிச்சம்

-

நீங்கள் கேட்கும் குளிர்ச்சியான

இசையில் கரைந்துவிட்ட

என் கண்ணீர் துளிகளை

நீங்கள் அறியமாட்டீர்கள்

-

இந்த நான்கு சுவருக்குள்

மறைந்திருக்கும் போர்க்களத்தில்

என் சொந்தப் பேய்களுடன்

தினமும் போராடுகிறேன்

-

என் கரங்களில்

பதிந்திருக்கும் காயங்களின் முன்

கல்வாரியின் சிலுவைகள்

வெறும் நாடகக் கம்பங்கள்

-

இந்த நகங்களின் கீழ்

நொருங்குண்ட இதயத்தின் குருதி

இந்தத் தோலின் கீழ்

அழுத்தப்பட்ட அழுகைகள்

-

நான் செதுக்கித் தீர்த்த

என் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள்

ஆனால் செதுக்கப்பட்ட

சதையையும் எலும்பையும்

நீங்கள் பார்க்கவில்லை

-

ஒவ்வொரு காலையும்

உடைந்த கண்ணாடிகளை

சிரிக்கும் முகமாக

ஒட்டிவைத்துக்கொண்டிருக்கிறேன்

-

இந்தச் சிரிப்பு

ஒரு முகமூடி மட்டுமே

அதன் பின்னால் மறைந்திருக்கும்

உண்மையான நான்

ஆழ்கடலில் மூழ்குவதை

கத்திச் சொல்ல முயலும்

ஓர் ஊமை..

Friday, 8 August 2025

வசந்ததிற்கான காத்திருப்பு..

முற்றத்தில் இருந்த பறவைகள்

ஒவ்வொன்றாய்ப் பறந்து செல்வது போல

உடன் நடந்த தோழர்கள்

ஒவ்வொருவராய் மறைகிறார்கள்

அவர்களின் பெயர்கள்

இலையுதிர்காலத்தின் கடைசி இலைகளாய்

உதிர்கின்றன

-

நான் சொல்ல நினைத்த வார்த்தைகள்

என் நாவில் உறைந்த பனிக்கட்டியாய்

உருகாமல் நிற்கின்றன

அவர்களின் கண்களில் கண்ட

தாயகத்தின் வெயில்

இன்னும் என் தோலில் எரிகிறது

-

அவர்களது குரல்கள்

காற்றில் தொலைந்த பாடல்கள் அல்ல

என் செவிகளில் வாழும் ஆறு

மரணத்திற்கும் நினைவிற்கும் இடையே

இன்னமும் ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன

-

அவர்களின் கனவுகள்

விதைகளாய் மண்ணில் விழுந்தன

இன்னமும் முளைக்காமல்

மழைக்காகக் காத்திருக்கின்றன

எப்போது அந்த மழை வரும் ?

-

இந்த மேற்கின் குளிர்ந்த நாட்களில்

நான் ஒரு நிழல்

என் நிழலுக்கும் நிழல் தேடுகிறேன்

எங்கோ தொலைந்த தாயகத்தை நோக்கி

பனியில் நடக்கும் என் அடிச்சுவடுகள்

-

நான் யார்

இறந்தோர் நினைவுகளின் காவலனா

அல்லது வாழ்வோரது மறதியின் சாட்சியா

-

அவர்கள் இறக்கவில்லை

என்னுள் வாழ்கிறார்கள்

ஒவ்வொரு மூச்சிலும்

ஒவ்வொரு துடிப்பிலும்

நான் அவர்களின் தொடர்ச்சி

-

ஆனால் இந்த பனித்தீவில்

என் வேர்களை எங்கே ஊன்றுவது?

காற்றில் வேர் பெயர்ந்த மரம் போல

நான் எதற்கோ காத்திருக்கிறேன்

-

ஒருவேளை மரணம்

ஒரு திரும்புதலாக இருக்கலாம்

அவர்கள் சென்ற பாதையில்

நானும் நடக்கலாம்

அவர்களின் பாடல்களைப் பாடலாம்

-

இந்த குளிரில் கூட

என்னுள் எரியுமொரு நெருப்பு உண்டு

அது அவர்களின் கனவுகளின் சுடர்

அணைய மறுக்கிறது

-

நான் வாழ்வேன்

நினைவுக்கும் மறதிக்கும் இடையே

இருப்புக்கும் இல்லாமைக்கும் இடையே

நான் வாழ்வேன்

அவர்களுக்காகவும் வாழ்வேன்

ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்

-

விடைபெற்றுச் செல்லுமென் தோழர்களே..

உங்கள் மரணம் முடிவல்ல

எங்கோ எப்போதோ ஒரு வசந்தத்தில்

நாம் மீண்டும் சந்திக்கும் வரை

அது ஒரு காத்திருப்பு..

Monday, 14 July 2025

வீரச்சாவு..

ஆனாலும் சாகும் வரை

சண்டையிட்டார்கள்

கடைசித் தோட்டா தீரும் வரை,

-

மரணம் என்பது

பார்த்துப் பார்த்துப் பழகிப்போன

பழைய நண்பன்

எப்போதும் விலகாமல்

பக்கத்தில் நிழலாக வந்திருக்கிறான்

-

அதனாற் தான்

அவர்களின் மரணம் என்பது

அவமானத்தின் மரணமாக இல்லாமல்

வீர மரணமாக இருந்தது

-

கைப்பிடியளவு காற்று

அவிழ்ந்து கரையும் வரை

கைவிடாத கொள்கையை

பக்கத்தில் இருந்து பார்த்த மரணம்

விடைபெறும் அவர் கதையை

வெறும் சாவாக விடாமல்

வீரச்சாவு என்றழைத்தது

-

பாவிகள் நமக்கந்தப்

பாக்கியம் இல்லை

——

சித்தம் கலங்கிக் சிதைந்து

ஆளாளை நோக்கி

அவரவர் அறிவறிந்த

ஒற்று அமைப்புகளின்

பெயர் சொல்லிச் சொல்லி

இற்றுப் போய்ப் புழுத்து

இறப்பதா எமது விதி.. ?

Saturday, 12 July 2025

முகிலெனக் கலையும்..

அன்பாகப் பேசிக் கொண்டிருந்த

அந்த உதடுகள்

திடீரென்று கல்லாகிவிட்டன

உறைந்த குளிர்காற்றைப் போல

மௌனம் எங்களுக்கிடையே வந்து அமர்ந்தது

-

நான் ஏனென்று கேட்கவில்லை

அவளும் தான்,

தூரமான, வெறுமையான, அழகான

மௌனம் எம்மிடையே

விண்மீனைப் போல ஒளிர்ந்தது

-

பழகிய இத்தனை ஆண்டுகளும்

மழையைப் போல

என் முகத்தில் வீழ்ந்தன,

ஒவ்வொரு துளியிலும்

காத்திருப்பின் கனமும்

நினைவுகளும்,

இப்போது அவை அனைத்தும்

மேகம் போல கலைந்து செல்கின்றன

அன்பு இவ்வளவு குறுகியதா

மறதி இவ்வளவு நீளமானதா..

-

காதல் என்பது பறவையைப் போன்றது

வந்தபோது தெரியவில்லை

போகிறபோது தெரிகிறது

-

அவளுடைய மௌனம் என்னைச் சுற்றி

பரந்த கடலைப் போல விரிந்தது

அலைகள் இல்லாத கடல்,

வானத்தில் மறைந்த விண்மீன் போல

தூரத்தில் இருப்பதாய்த் தோன்றுகிறது

இன்னும் ஒளிவீசுவதாய் தெரிகிறது

ஆனால் அது எங்குமில்லை

-

இரவின் காற்று எங்கள் வீட்டைச் சுற்றி

தனிமையின் பாடல்களைப் பாடுகிறது

நாம் இல்லாத இடங்களில்

இருந்த அடையாளம்

மௌனம் பேசும் இடமெல்லாம்

நாம் பேசிய வார்த்தைகளின்

எதிரொலி,

-

காதல் மேகம் போன்றது

வரும்போது பூமியை நனைக்கிறது

போகும்போது

வானத்தை வெறுமையாக்குகிறது..

-திரு

Saturday, 5 July 2025

கருப்பு..

நான் என் தோலை உரிக்க முடியாது
வரலாற்றை மறக்க முடியாது
பிறப்பை மறுக்க முடியாது

நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் நான் சாம்பலாக மாறவில்லை
விடுதலையின் தீபமாக
எரிந்து கொண்டிருக்கிறேன்

என் உடலில் தாயகத்தின் கனவு துடிக்கிறது
என் நெஞ்சில் ஈழத்தின் மண் வாசம்
என் கண்களில் விடுதலையின் நீலக் கனவு

நான் மூண்டபின் 
வான் நோக்கி எழும்
கந்தகப் புகையின் நிறத்தில்
என் அடையாளம்

நான் சாகும் நேரத்தைத் 
நானே தேர்ந்தெடுத்தேன்
அது எனது பலவீனம் அல்ல
அன்பு, 
எல்லோரும் சுதந்திரமாக
வாழவேண்டுமென எண்ணும்
கனிவு ததும்பும் 
எல்லையற்ற அன்பு 

கருப்பெனும் நெருப்பில்
கனவு நிறைகையில் 
விடுதலைக்கான விதையானேன்
ஒரு நாள்
நிலம் பிளந்து 
முளைக்கலாமென் கனவு
அதுவரையில்
நீரூற்றி நினைதல் 
நின் கடன்..