புதன், 28 ஜனவரி, 2026

இருளின் தையற்காரனும் எரியும் நரம்பும்..

வதைப்பவன் கைகளில்

இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது

ஒவ்வொரு அடியிலும் அவன்

தனது அகத்தின் சாளரங்களை

நிலக்கரி பூசி அடைக்கிறான்.

-

அவன் ஆன்மா 

ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு

வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட

வெளியே விடாத கருங்குழி

அவன் குருதியில் இப்போது

நிழல்கள் உறைகின்றன

அவன் தொடும் இடமெல்லாம்

காலம் தன் நிறத்தை இழக்கிறது.

-

வதைப்பவன் என்பவன்

தனது விதியால் கைவிடப்பட்ட

ஒரு தையற்காரன் 

பிறர் வலிகளால் அவன் தைப்பது

தனக்கான சவக்கோடியை மட்டுமே

-

ஆனால், வதைபடுபவன் 

அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்

இப்போது ஒரு சுடரின் வாசல்

தசைகளைக் கிழிக்கும்போது

வெளியேறுவது குருதியல்ல

காலங்காலமாகத் தேங்கியிருந்த

ஆழ்மன இசை.

-

நரம்புகள் அறுபடும் கணத்தில்

அவை நரம்புகளாக இருப்பதில்லை

யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன

வலியில் துடிக்கும்போது 

அவன் ஆன்மா 

தன் கூட்டைத் துறந்து

வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.

அங்கே சொற்கள் இல்லை

அங்கே வதைப்பவன் இல்லை.

-

தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட

ஒரு பறவையின் சிறகசைப்பாய்

வதைபடுபவனின் உள்ளொளி

தன் சிறைநீங்கி விளிக்கிறது.

-

இருள் என்பது வதைப்பவனின் முகவரி

ஒளி என்பது வதைபடுபவன்

கண்டடைந்த ஒரு புதிய திசை..


செவ்வாய், 27 ஜனவரி, 2026

மீதமுள்ள பொருட்கள்..


மேசையின் மேல் ஒரு உடைந்த திசைமானி,

அதன் முள்

எந்தத் திசையையும் காட்டாமல்

தன்னையே சுற்றிக்கொள்கிறது.

-

சுவரில் தொங்கும் வரைபடத்தில்

கடல்கள் காய்ந்து கறை படிந்திருக்கின்றன,

நாடுகள்

பெயர்களற்ற வெறும் கோடுகளாகச் சுருங்கிவிட்டன.

-

இழப்பதைக் கற்றுக்கொள்வது

ஒரு கலைதான் என நாம் அறிவோம்

முதலில் சாவிகளைத் தொலைத்தோம்

பிறகு அந்தப் பெயர்களை,

இப்போது

நாமாகவே உருவாக்கிய

அர்த்தத்தின் கடைசி இழை அறுந்து விழுகிறது.

-

துருவேறிய ஒரு சாவி

எந்தப் பூட்டையும் திறக்கப்போவதில்லை 

ஆயினும் அதனை நாம்

கவனமாக மெருகேற்றுகிறோம்,

-

தூசு படிந்த அலமாரியில்

பயன்படுத்தப்படாத கோப்பைகள்

ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம்

வெறுமையின் துல்லியமான இசை.

-

வெளியே,

பறவை ஒன்று

அடையாளம் தெரியாத ஒரு மரத்தில் அமர்ந்து

தன்னுடைய பழைய பாடலை

மறந்துபோன தொனியில் இசைக்கிறது

அதன் அலகுகளில்

ஈரம் எதுவுமில்லை 

வெறும் உலர்ந்த காற்றை அது

தன் சுவாசமாக மாற்றிக்கொள்கிறது.

-

இந்தக் குடிமையின் சிதைவு

ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை

ஒவ்வொரு கல்லாக நகர்ந்து

இறுதியில்

எதுவும் தாங்காத ஒரு அத்திவாரமாய்

வெற்றுத் தரை மட்டும் எஞ்சியுள்ளது.

-

முற்றத்தில் கிடக்கின்றன

சிதைந்த பொம்மைகளும்

திறக்கப்படாத கடிதங்களும்,

அவற்றின் மேல் பெய்யும் மழை

மண்ணை நனைக்கவில்லை,

மாறாக,

இருக்கின்ற கொஞ்ச ஈரத்தையும்

உறிஞ்சி எடுத்துச் செல்கிறது.

-

நாம் எதையோ தேடுகிறோம்

ஒருவேளை,

தொலைந்துபோதொரு

சிறுதுளிப் பொருளை அல்ல,

பொருள் எதுவுமே இல்லை என்கிற உண்மையை

எளிதாக ஒப்புக்கொள்ளும்

அந்த ஒரு கணத்தை..


வியாழன், 22 ஜனவரி, 2026

உதிரத்தின் திணை விழிப்பு..

எங்கிருந்தோ எழும் பேரோலம்

உன் செவிப்பறையைக் கிழிக்கையில் 

உன் உண்ணாக்கு அதிர்ந்து 

முள்ளந்தண்டு சில்லிடுகிறதா 

ஆயின் 

அயல் நிலத்தில் பெயரற்று வீழ்ந்தவன்

உன் குருதி வழி உறவு


எங்கோ ஓர் எளியவனின்

பசிநரம்பு தெறிக்கையில் 

உன் வயிற்றுச் சுவர்கள்

உள்நோக்கிச் சுருங்கிப் புலம்புகிறதா 

வா.. 

என் கைகளைப் பிடித்துக்கொள்

நீயும் என் உடன் பிறப்பு


விழிப்பு என்பது

தூக்கம் கலைந்த விழிகளின் வரவு அல்ல

அது 

அநீதி எரியும் திசையெல்லாம்

தன் சதையைப் பிய்த்து

நெருப்பாய் வீசும் 

ஒரு ‘திணைத் துளக்கம்’


பனந்தோப்புக் காற்றினூடே

பாயும் தோட்டாக்களின் ஈனச் சிரிப்பு

முள்வேலிக் காடுகளில்

தொங்கி நிற்கும் 

எம் மக்களின் கிழிந்த கனவுகள் 

இவை உன்னைத் தூங்க விடாமல்

உள்நின்று உலுக்குமெனில் 

உன் அரசியல் என்பது 

வெறும் சொல்லல்ல

அது சூல் கொண்ட நிலத்தின்

பேரெழுச்சி


நூறு நதிகள்

வெவ்வேறு திசைகளில் ஓடினாலும்

அநீதியின் உவர் நிலத்தில்

அவை சங்கமிக்கும் பெருங்கடலே 

நம் தோழமை..

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

நிலமெனும் உயிர்மூச்சு..

ஏதிலாளனே..!

நிலைகொள்ளாச் சொற்களுக்கிடையே

கடந்து செல்வோயே 

இதனை எழுதுக 


எம் உடலென்பது 

இம் மண்ணின் நுண்துகள்

எம் உயிர்ப்பென்பது 

இக் கடற்காற்றின் சீற்றம் 


யார் நல்கியது இவ்வுரிமை 

யாரும் ஈந்ததல்ல இது

கருவறைக் குருதியோடு கலந்துயிர்த்து 

தொப்பூள் கொடியால் 

இந்நிலத்துள் வேரூன்றி

பிறப்பொடு வந்த பெரும்பொருள்


வேரூன்றிய பனையின் செம்மாப்பில்

கருகிய மடல் சுமந்த 

தீயெனக் கொதிக்கிறது 

எம் முன்னோர் புதைத்த 

ஈமப் பெருங்கற்கள்

இந்நிலத்தின் உரிமையைப் 

பேசாப் பெருமொழியால்

எக்காலத்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்


அமைதி என்பது 

எம் நாவறுந்த நிலையும் அன்று 

அஃதெம் 

புதைக்கப்பட்ட சாம்பலினின்று

மீளத் துளிர்க்கும் ஆதி விதையின்

ஆழத்து அடக்கம்


எழுதுக..! 

நாங்கள் நிலமற்ற நிழல்கள் அல்லர்

சிதைக்கப்பட்ட நிலத்தின் 

மாறாச் சான்றுகள் 

எம் குருதி தோய்ந்த இந்நிலவரைபடம் 

கடலலைகள் தீண்டத் தீண்ட

கூர்மைபெறும் பெரும்வாள்


எங்கள் விடுதலை என்பது

வேறெங்கும் உளதன்று 

அதுவே எம்மூச்சின் முதலசைவு 

எம் வாழ்வின் 

முடிவிலாத் தொடர்ச்சி.. 



வியாழன், 8 ஜனவரி, 2026

ஏலோர் எம்பாவாய்..


காரிருள் போழ்ந்து கதிரவன் வந்துதித்தான்
போர்முரசம் கொட்டப் புவியெல்லாம் கேட்குது காண்
பார்முழுதும் ஆண்ட பழங்குடிநாம், இன்றோ
வேரிழந்த கொம்பாய் வெம்பியே நிற்கின்றோம்
ஊரறிய வாழ்ந்த உயர்வை நாம் மீட்டெடுக்க
பேரறிவும் வீறாப்பும் பேணித் துயிலெழாய்
வார்செறி கூந்தல் வாரி முடித்து நீ
ஏருடைய தேசம் எய்திடாய்  
எம்பாவாய்…

ஆழி சூழ் வையகத்தில் ஆளுரிமை அற்றோமாய்
கூலிக்கும் கீழாய்க் குன்றிப்போய் நிற்கின்றோம் 
வாழி எம் வையகம் வாராய் எம் விடுதலை 
ஊழித் தீ போலேநீ உற்று எழுந்து வா 
தாழ்விலா எம்இனத்தின் தாகம் தணித்திட
யாழின் இசைபோல இன்பம் பொழிந்திட
கோழைமை நீக்கி எமைக் காக்க வல்லதோர்
சூழல் அமைத்திடத் தோன்றாய் நீ  
எம்பாவாய்…

மானம் பெரிதென்று வாழ்ந்த மறக்குடியீர்
தானம் இழந்ததோர் தாயில்லாக் கன்றுபோல்
ஈனப் பிறவியாய் இங்கிருக்கப் போமோ நாம் ? 
வானம் பிளக்கவே வன்முரசம் கொட்டாதோ
தேனத் தமிழ்ப்பண் திசையெங்கும் கேட்காதோ
ஊனம் தவிர்த்தே உயர்ந்திட வாரீரோ
ஞானத் தலைவன் நல்வழி காட்டவே
யானை பல்கொண்டெழும் ஏலோர்  
எம்பாவாய்..

பூங்குழல் மங்கையீர் பொழுது புலர்ந்ததுகாண்
ஈங்கு நம் இல்லம் இடிபட்டுக் கிடக்கையிலே
தேங்கிய கண்ணீரில் திக்கற்று நிற்போமோ
ஓங்கிய குன்றில் ஒருகொடி ஏறாதோ
தாங்கிய தாயெம் தமிழ்நிலம் மீளாதோ
ஏங்கிய நெஞ்சம் இனிது இளைப்பாற
பாங்குடை நன்னாடு படைத்திட வாரீரோ 
தாங்கரும் துயர் தீர்க்கத் தாராய்  
எம்பாவாய்

புள்ளினம் ஆர்த்தன பொழுது புலர்ந்தது காண் 
அள்ளல் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கையிலே
விள்ளத் தெரியா விழுமங்கள் போனதென்ன
கள்ளர் கவர்ந்த எம் காணி நிலம் மீட்க
வெள்ளமெனத் திரண்டு வீறுடன் வாரீரோ
பள்ளம் மேடெலாம் பார்த்துக் களைந்தெறிய
உள்ளம் ஒருங்கே உறுதிகொள் வாரீரோ
எல்லை வகுப்போம்நாம் ஏலோர் 
எம்பாவாய்….


வியாழன், 25 டிசம்பர், 2025

பாவங்கள் இரெத்தத்தால் கழுவப்படும்..

எங்களின் கண்ணீர்

உப்புச் சுவை கொண்டதல்ல

அது எங்கள் நிலத்தின் 

ஆழத்திலிருந்து ஊற்றெடுக்கும்

முறிக்கப்பட்ட பனையின் 

ஏக்கத்துவர்ப்புச் சுவை கொண்டது,

-

நீங்கள் கேட்கிறீர்கள் 

எல்லோரும் விடைபெற்ற பின்

இந்தப் புழுதியில்

எதை விதைக்கிறீர்கள் என்று, 

நாங்கள் விதைகளை விதைப்பதில்லை

மண்ணில் விழுந்த 

எங்களின் பெயர்களை

எரிக்கப்பட்ட தேசக்கனவின் 

எஞ்சிய சாம்பலை 

தாயின் கருப்பைக்குள் 

உறங்கிக் கொண்டிருக்கும் 

நாளைய விடியலை

கண்ணீரை நீராகக் கொண்டு 

விதைத்துக் கொண்டிருக்கிறோம்

-

நிலம் ஒரு வரைபடம் அல்ல

அது எங்களின் தோல்

ஒரு நாள் 

எங்களின் துயரத்தின் உப்பிலிருந்து

ஒரு பேரொளி உதிக்கும்

அன்று, 

நிலம் தன் மூச்சை 

ஆழமாக இழுத்துவிடும்

எங்கள் அறுவடை என்பது 

நெல்மணிகள் அல்ல 

அது துண்டிக்கப்பட்ட நாக்குகள் பாடும்

விடுதலையின் பாடல்

உழவனுக்கும் நிலத்திற்குமான 

உறவல்ல இது, 

உயிருக்கும் அதன் 

கடைசித் துளிக்கும் இடையிலான

மகா அறுவடை…

பனிக்கும் பனைக்கும் இடையிலான தூரம்..

எனது நிலம் 

எரிக்கப்பட்ட பனை ஓலையின்

கடைசிச் சாம்பலில் எழுதிய

நிறைவேறாத ஓர் உயில்


நான் அந்த நிலத்தின் 

ஒரு துளி வியர்வை

அதன் விடுதலையை 

என் நரம்புகளின் இசையாக மாற்றினேன்

ஆனால், 

இரும்புக் கைகள் கொண்ட 

வல்லாதிக்கத்தின் கருப்புப் பற்கள் 

என் வீட்டின் வாசலில் பூத்திருந்த

ஒவ்வொரு பூவையும் கடித்துக் குதறின


தோல்வி 

என் முதுகில் விழுப்புண்களாகச் 

செதுக்கப் பட்டிருக்கின்றன

அவை காயங்களல்ல

சொந்த மண்ணின் வரைபடத்தை

என் உடலில் 

வரைந்திருக்கும் கோடுகள்


இன்று நான் 

மேற்கின் சாம்பல் நிறக் குளிரில்

வேரற்ற ஒரு பாறையைப் போலக் கிடக்கிறேன்

இந்த மண்ணின் பனி 

என் கண்களில்

வெள்ளை நிறக் குருதி போலப் படிகிறது


​கதிரவன் 

இங்கே ஓர் அந்நியனைப் போல

சினந்து பார்க்கிறான்,

காற்றோ என் மொழியைப் புரியாமல்

சாளரங்களின் கண்ணாடிகளில் மோதித் 

தற்கொலை செய்கிறது


தனிமை என்பது 

பல கோடி மனிதர்கள் நடுவே

எம் மொழியைப் பேச இடமில்லாமல்

உறைந்த பனியில் செருப்பின்றி நடப்பது


குடிபெயர்ந்த பறவைகளுக்குக் கூட 

ஓர் கூடு உண்டு ஆனால்

நாடு பெயர்ந்தவனுக்கு

வானம் கூட ஒரு சிறைச்சாலை தான் 


தமிழர் கடலின் 

அலையடித்துப் பழகிய 

என் செவிகளுக்குள்

இப்போது பனியின் மௌனம்

ஈயத்தை உருக்கி ஊற்றுகிறது 


நாடிழந்து போதல் என்பது

வெறும் வீட்டை இழப்பதல்ல

நம் உடலின் திசுக்களிலிருந்து

நிலத்தின் தாதுக்களைப் பிடுங்கி எறிவது

அல்லது நம்மை நாமே 

காலத்தின் வெளியில்

தொலைத்துவிட்டுத் தேடுவது


போராடித் தோற்றவனின் வலியும்

புலம்பெயர்ந்து மடிபவனின் ஏக்கமும்

இந்த உலகத்திற்குப் புரியப்போவதில்லை


நான் இங்கே 

ஒரு கல்லாக மாறிக்கொண்டிருக்கிறேன்

ஆனால் அந்தப் பாரம் 

என் நிலத்தின் பாரமல்ல

திரும்பிப் போக முடியாத 

ஒரு நீண்ட பாதையின் பாரம்…

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

காற்றான இறகு..

நரை தட்டிய வானத்தின் கீழே

உப்புக் காற்றின் ஈரம் படிந்த

என் சாளரத்தின் வழியே பார்க்கிறேன்

அங்கே

ஒரு சிறிய இறகு

தன் பறவையைத் தொலைத்துவிட்டு

வெறும் காற்றின் கைகளை 

நம்பிக்கொண்டு மிதக்கிறது 

அது ஒரு சாதாரண நிகழ்வுதான், 

-

ஆனால்

கரையைத் தேடாத ஒரு மாலுமியைப் போல

அது திசைகளைப் பற்றிக் 

கவலை கொள்வதாய் தெரியவில்லை

கடலில் தொலைந்த பழைய கப்பல்களின்

சிதைந்த பலகையைப் போல

அது அந்தரத்தில் அலை பாய்கிறது

-

நாம் எல்லோரும் 

நினைத்துக் கொண்டிருக்கிறோம்

பறவை என்பதுதான் வாழ்வு

இறகு என்பது வெறும் ‘எச்சம்’ என்று, 

இல்லை

உண்மையில் அந்தப் பறவை என்பது

சிறைப்பட்ட ஒரு கூடு மட்டுமே

அந்தப் பறவை 

என்றோ இறந்து போயிருக்கலாம்

ஆனால்

பிரிந்த இந்த இறகில் தான்

இன்னும் அந்தப் பறத்தலின் ஆன்மா

உயிர்ப்போடு துடித்துக்கொண்டிருக்கிறது,

-

பயணங்கள் தான்

நம்மை உருவாக்குகின்றன.

சேருமிடம் என்பது ஒரு பொய்

துறைமுகங்கள் என்பவை

சற்றே இளைப்பாறும் 

தங்கும் விடுதிகள் மட்டுமே

-

உண்மையான வாழ்வு என்பது

நடுக்கடலில்

திசைகள் அறுந்த அந்த நொடிகள் எழுதும்

வரைபடம் இல்லாத 

பெருவெளியிற் தான் இருக்கிறது 

-

அந்த இறகு இப்போது 

தான் மிதக்கும் வெளியெங்கும் 

இப்படி எழுதுகிறது.. 

‘நான் எங்கும் போகவில்லை

நான் எங்கும் தங்கவும் இல்லை’

காற்றாகவே ஆகி விட்டேன்..


ஞாயிறு, 14 டிசம்பர், 2025

தோற்றுப்போன கடவுள்..

இந்த யுகத்தில் அறம் என்பது

யாரோ ஒருவன் கனவில் கண்ட

மறந்துபோன மொழி, 


எந்த அகராதியிலும் 

அதற்குப் பொருள் இல்லை 

விடுதலை என்ற சொல்

இரத்தத்தில் எழுதப்படும்போது

அதைத் துடைக்க

ஆயிரம் கைகள் வருகின்றன

வெள்ளைக் கைக்குட்டைகளுடன்,

ஒப்பந்தங்களுடன், புன்னகைகளுடன்.


சதி என்பது

அரண்மனையின் சுவரில் தொங்கும்

விலையுயர்ந்த ஓவியம்

அதன் அழகை யாரும் மறுப்பதில்லை


பலம் என்பது ஒரு மொழி 

அது பேசும்போது 

அறம் வாய் மூடுகிறது,

நீதி காதுகளை மூடிக்கொள்கிறது,

சரித்திரம் கண்களைத் திருப்புகிறது.


இந்த உலகம்

ஒரு சூதாட்டக் களம் 

யார் வெல்வார் என்பதை

சீட்டுத் தீர்மானிப்பதில்லை 

சீட்டைக் கலப்பவன் தீர்மானிக்கிறான், 


அறம் என்பது

தோற்றுப்போன ஒரு கடவுள் 

இன்னும் கோயில்கள் இருக்கின்றன,

ஆனால் உள்ளே

வெறும் இருட்டு மட்டுமே, 


நான் என்ன செய்வேன்..? 

இவ்வுலகு அறமற்றதாயினும் 

அறத்தையே நம்புவேன் 

தோற்றுப்போன கடவுளுக்கு

கடைசி வழிபாட்டாளனாய்

நிற்பேன்,  ஏனெனில் 

இந்தத் தோல்வியிலும் 

ஓர் அழகுண்டு 

அது வெற்றிக்குத் தெரியாத அழகு..


செவ்வாய், 25 நவம்பர், 2025

இறப்பற்றவர்களுக்கு வயதில்லை..

உன் பிறந்தநாளில் 
வீரச்சாவு 
அழிவின்மையைப் பரிசளிக்கிறது 

நந்திக் கடல் மணலில்
நடந்த கால்கள் இப்போது இல்லை
ஆனால்  நீ தான் இன்னும் நடக்கிறாய்

விதைத்துச் சென்றாய்
நன்றி கெட்டவர்கள் நாம் 
இன்னும் அறுவடை செய்யவில்லை

பாதிப் பாலம் கட்டிவிட்டாய்
மீதி காற்றில் நிற்கிறது
காற்றில் நடக்கக் கற்றுக்கொள்கிறோம்

மரணத்திற்கும் பிறப்பிற்கும்
இடையே ஒரு கோடு
அதை நீ அழித்துவிட்டாய்

ஒவ்வொரு தாயின் கருவிலும்
நீ மீண்டும் உருவாகிறாய்
பிறக்காத குழந்தைகளின்
முதற் பெயர் நீ

கடைசித் தோட்டா 
உனை நோக்கி வந்தபோதில் 
உடன் நின்றவர்களுக்கும்
மக்களுக்கும்
என்ன சொல்ல  நினைத்திருப்பாய்..? 

அண்ணா..!
இன்று உன் பிறந்தநாள்
கண்முன்னே நீ இல்லை
ஆனாலும் இல்லாமையிலும் 
இன்னும் இருக்கிறாய்

மரணமற்றவர்களுக்கு வயதில்லை
நீ எப்போதுமே 
அந்த இறுதி நொடியில் 
உறைந்து நிற்கிறாய்..