ஞாயிறு, 22 டிசம்பர், 2024

வாழ்வின் தழுவல்..

இருள்சூழ் பொழுதின் இயல்பின் நின்று 

தனிமரம் உயர்ந்து தகைசால் நிற்க 

வறன்கொள் கிளைகள் வானம் நோக்க 

நிலத்து வேர்கள் நெடுநாள் பேணிய 

மறைபொருள் உரைக்க மருவிய காற்றின் 

பழம்பெரும் மூச்சினைப் பரிந்து தேடுமே

-

கனவுகள் உதிர்ந்த களத்து நின்று 

பண்டைநாள் பாடல் பரவி வந்தென 

நிலம்பெய் துளிகள் நெடுநாள் தாங்கிய 

நொந்துநின் றழுத நுண்மை சான்றவை

மரத்துயிர் நெஞ்சில் மறைத்து வைத்த 

மொழிபொறித் தெழுதிய முன்னோர் யாரெனக் 

கேட்கும் வினாவிற்கு கிளர்ந்த விண்மீன்

அறிந்தும் உரையா அமைதி கொண்டன

-

வாழ்வெனும் தழுவல் வளர்ந்து பரந்து 

மரவேர் தழுவிய மண்ணும் உணர்ந்தது 

மருவிய காற்றும் மனத்துள் கொண்டது 

சொல்லா வரலாற்றின் சுவடுகள் தோன்ற 

வேர்கள் விண்ணோடு விளைத்த மொழியினை

செவிகொள் நுண்மையில் தேம்பி நின்ற 

தனிமரம் உணர்ந்த தன்மை தானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக