அதிகாலையில் மெதுமெதுவாய்
சந்திரன் மறைவதைப் போல்
நினைவுகளின் பிடியில் இருந்து
பழகிய முகம் நழுவுகிறது
ஆனாலும்
அந்தக் கண்கள் இன்னமும்
ஒளி உமிழ்ந்து கொண்டிருக்கிறது
விடிவெள்ளியைப் போல
உருவமெனும் ஓவியத்தின் கோடுகள்
தூரத்தே தெரியும்
வற்றிப் போன நதியின்
மங்கும் தடமாய்
ஒவ்வொன்றாகக் கரைந்து
கால அருவியில் வீழ்ந்து மாய்கிறது
ஆயினும்
பாடலின் வார்த்தைகள் மறந்தாலும்
மனதிற் பதிந்த இசையை
முணுமுணுக்கும் தொண்டை போல
அந்தக் கண்கள் மட்டும்
ஒளிர்ந்து வழிகிறது
நூற்றாண்டுகளின் முன்
வரையப்பட்ட
அழகொழுகும் பெண்ணின்
ஓவியத்தில் இருந்த
வண்ணங்கள் மங்கிப் போனாலும்
கண்கள் இன்னமும்
பார்க்கும் கண்களை விடாமல்
தொடர்ந்து பார்ப்பதைப் போல்
யாருமற்ற இரவுக் கடலை
கட்டி அணைக்கும்
குளிர்ந்த நிலவொளியாய்
இன்னும் அந்தக் கண்கள்
நினைவெனும் நிழற்படக்
கோப்பின்மேல் விழுகிறது
காலத்தின் மூடுபனி,
பூவில் இருந்து இயல்பாய்
இதழ் அவிழ்வதைப் போல்
கடந்து செல்கிறது இளமை
வா என அழைக்கும்
இமைக்கரங்களின் சிமிட்டலில்
கரைந்து விழிச் சமுத்திரத்தில்
வீழ்ந்தவர் என்றும் கரையேறுவதில்லை
ஒளியாண்டுகளைக் கடந்து
கண்களை எட்டும்
விண்மீனின் பயணக் காலத்துள்
பண்டைய பிரபஞ்சத்தின்
வாழ்வும் கதையும்
மறைந்திருப்பதைப் போல
கண்மணிகளுக்குள் நிறையக்
கதைகள்
பார்த்தவர் விலகிப் போனாலும்
பார்வை விலகுவதில்லை
No comments:
Post a Comment