வியாழன், 6 ஜூலை, 2023

களிகொள் தேசக் கனவு..

ஒளிவர வழியே இல்லையெனும் 
ஆழ் இருட்டு, ஆயினும் 
நடந்தே தான் ஆகவேண்டும் 

வழிகாட்டிய குயவரி 
பெளவக் கரையில் 
மெளனித்த பிற்பாடு 
அவரவர்க்கு அவரவர் 
அறிந்த முறை

அவர் நம்பும் முறையை 
நம்பாத இவரும்
இவர் நம்பும் முறையை 
நம்பாத அவரும் 
ஆளாகுக்கு எறிய 
கைநிறையக் கெளவை 

அருசமத்தில் இழந்தது 
ஐந்தாறல்ல ஐம்பத்தையாயிரம் 
இத்தனை கொடுத்தும் 
எதுவுமற்றிருக்கும் 
ஒற்றை இனம் உலகில் 
நாம் தான்

கண்முன்னே படைகட்டிக் 
காத்த இனத்திற்கு 
கைக்குண்டெறியவே ஆளில்லை 
எப்படித் தான் ஆயிற்று இப்படி? 

ஞாட்பில் நடுகல்லாய் 
தம் வாழ்வை நட்டுச் சென்ற
ஆன்மாக்களின் அமைதிக்காயினும் 
ஆழிருட்டில் இருந்து 
நாம் மீண்டே  தான் ஆகவேண்டும்

விழுப்புண்ணை வரித்த 
வாழ்வின் எவ்வத்தை 
பரிகசிக்கும் காலமிது 
எப்படித் தடை வரினும் இடியாதே 
நட, நடக்கச் சொல்லு 
மேலும் நட 
ஒரு தருணத்தில் 

விடுதலையின் கலங்கரை விளக்கம் 
கண்ணுக்குத் தென்படும், 
அப்போது  
விலங்குகள் தாமே விலக 
நளி தளி பொழியும்
தெள்விளி கரைந்து 
தெருவெலாம் வழியும்

களிகொள் தேசக் கனவு
கை வசமாகும் 
கனவு மெய்ப்படும்.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக