திங்கள், 13 மே, 2019

கீறுவோம் எமக்கான திசை..

தீ எம் வாசலையும் தீண்டினாலென
தீட்டி வைத்தவை எல்லாம்
தணிக்கவும், தற்காக்கவுந்தானென
எடுத்துக் கொள்ள வேண்டிய
மனதில் இருக்கிறோம்
ஏனெனில்
எவர் எவரை அடக்க நினைத்தாலும்
எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
அவர்களோடு சேர்ந்து
நீரெம்மை நீறாக்கிய நோவு
உடலெல்லாம் இருந்தாலும்
எதுவோ துடிக்கிறது உமக்காய்

அடித்தவன் தான் சரியோ
என்ற ஐயத்துக்கு
உம்மை ஆளாக்கும் வரை
அவர்களும் ஓயப்போவதில்லை

ஓரினம் நாமென்ற
உள்ளம் உமக்குள்ளே
உருவாகினால் மட்டும் தான்
தேறுவோம் நாம்
அன்றில் தீர்வு வேறில்லை

சேருவோம் நாமென்று
சிந்தித்தெழும், நாளை
கீறலாம் எமக்கான
திசை..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக