Friday, 15 November 2019

ஏன் நடந்தோம் என்பதறி..

கொற்றமும் கனவுகளும்
கொளித்துக் கிடந்த எம்
முற்றத்தில் இன்றந்த
மூச்சின் தினவில்லை

ஏறும் படிகளிலே
இருந்தபடி தோழர்கள்
கூறிய கதைகளிற் தான்
குறிப்பெடுத்ததெம் கனவு
எடுத்த குறிப்புக்கள்
எங்கெங்கோ இருந்தாலும்
எடுத்தவர்கள் இல்லை
இருந்த வீட்டுப் படியுமிலை

கதை அறிந்த கதவும்
கந்தகத்தின் மூர்க்கத்தில்
சதை பிய்ந்து கிடக்கிறது
சாளரத்தின் வழியாக
ஊர்ந்தன்று நுளைந்திட்ட
ஒளிநிலவு இன்றைக்கும்
கூரையற்ற வீட்டுக்குள்
குதித்து, முன்பு தன்னை
பார்த்துருகும் விழிகளினை
பார்ப்பதற்கு படர்கிறது

சிதறிப் போய்க்கிடக்கும்
சுவரில் தொங்குகின்ற
கதையின் நாயகர்கள்
கதையும், சிரிப்பொலியும்
ஒவ்வொரு கற்களிலும்
உளுத்திருக்கும் படலையிலும்
இவ்வளவு நாட்போயும்
இன்னும் கேட்கிறது..

பாறிய பூவரசைப்
பார்த்தழுதே எம்வாழ்வை
கூறிவிற்கும்படி ஆக்காமல்
பதிலுக்கு,
நல்ல கதியால்கள் நடு,
படலை கட்டு,
இலகுவில் இடியாத
எமக்கான கல் தேர்ந்து
படி ஆக்கு,
நிலை, கதவு, சுவர்களெலாம்
பூகம்பத்தையே தாங்கும்
சுவல் வலிமை கொள்ளட்டும்..

முக்கியமாய்
இவ்வளவும் ஏன் நடந்தோம் என்பதறி
விடியுமடி..


Friday, 26 July 2019

நேரமுள்ளை நிறுத்து

எங்காவதென்னை
ஏந்திச்செல் காற்றே
தங்கித் தங்கித்
தவமிருந்து காத்தும்
எங்கும் விரிந்த இருள்
இறங்குவதாய்த் தோன்றவில்லை
மங்கிய விழியிலொளி
மலர இனி வாய்ப்புமிலை

ஆண்டாண்டோட
அடர்ந்தடர்ந்து வெறுமையது
தோண்டித் தன் கனமென்
தோள் மீது வைக்கிறது
நீண்ட தூரமெந்தன்
நிலைமீறிச் சுமந்து விட்டேன்
பாரமினித் தாங்குகிலேன் பரமே
சீக்கிரமென்
நேரமுள் தன்னை நிறுத்து..


Sunday, 14 July 2019

மர வளையம்..

வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கும்
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
தியாகத்தாலும், உழைப்பாலும்
கட்டப்பட்டும் ஏனோ வீழ்ந்துகிடக்கும்
எம் கனவு தேசமே கண் முன் வரும்

காட்டாற்று வேகத்தை
கடும் வறட்சியை
பூட்டிக் கிடக்கின்ற கற்தரையை
வெட்டிப் பிளந்து வெளிவந்தும்
சுற்றி நிற்கின்ற
சூழ்ச்சிகளைத் தாண்டி
உயர்ந்து கிளையகட்டி
நிமிர் விருட்சமாகும் வரை
எத்தனை கதைகளினை
காலக் குறிப்புகளை
ஏந்தி வந்திருக்கும் அந்த மரம்

அறுக்கப்பட்ட குறுக்கு வெட்டில்
தெரியும் ஒவ்வோர் வளையமும்
அதன் பாதச் சுவடென்பர்
பார்க்கத் தெரிந்தோர்
ஒவ்வோர் வட்டத்துள்ளும் வாழும்
ஓராயிரம் கதைகளை
எவரேனும் என்றேனும்
எழுதியதுண்டா..?

இடையனாய் இருந்த
கவிஞனொருவனின் காதுகளுக்கு
கன்றைக் கண்டவுடன்
பசு மடிக்கு பாய்ந்தோடி வரும்
பாலாற்றின் இனிய
சங்கீதம் கேட்குமாம்

கற்காலக் குறியீட்டை
கண்காணாக் காலத்தில்
விண்வெளியில் அசையும்
விந்தைகளை எல்லாம்
கற்றுக் கொள்ள எண்ணும்
மனிதன் ஏனின்னும்
தன்னோடு வாழும்
தனக்கின்னும் மூச்சுத் தரும்
மர வளையம் சொல்லும்
வரி எழுத்தைக் கற்கவில்லை ?
படியெடுக்க முயலவில்லை..?

என்றைக்கு எவனால்
இதையறிய முடிகிறதோ
அன்றைகே அவிழும்
ஆதி நீரூற்றின்
அவிழாத புதிர் முடிச்சும்
அதன் பின் எழுந்தவற்றின்
அத்தனையும்..


Friday, 5 July 2019

எப்போது பூத்ததிந்த ஒற்றைப் பூ..

காய்ந்து கிடந்த இருள் வனத்தில்
எப்போது பூத்ததிந்த
ஒற்றைப் பூ?
வான் பார்த்து ஏங்கி இருந்த
வரண்ட நிலத்தில்
எங்கிருந்து விழுந்ததிந்த
மழைத்துளி?
ஆண்டுகளாய் புழுதி பறந்த
ஆற்றுத் தடத்தில்
என்றைக்கு ஓடத்தொடங்கிற்று
இந்தக் குளிராறு?
காம்பு முறிந்து தொங்கிய
காய்ந்த மொட்டு
எப்போதிந்த ஈரக்காற்றுப் பட்டு
இதழ்களை அவிழ்த்தது?
இத்தனை கோடி ஊசித்துவாரங்கள்
எனக்கும் கூட உண்டா உடலில்?
அத்தனையிலும் ஆர் நட்டார்
இத்தனை ஆயிரம் குத்திட்ட பயிர்களை?
தகிப்பதனாற் தான் இதனை
தேகம் என்று சொன்னாரோ?
உப்புக்காற்றை ஊதுகின்ற
அடரிரவின் ஊழையில்
ஆழ்கடலில் வழிதொலைந்தவனுக்கு
எங்கோ தூரத்தில் மின்னி மறையும்
வெள்ளியா இந்த
உயிர் விளக்கு..


Friday, 7 June 2019

இப்படியாய் தமிழன் இருப்பு..

பறவையில்லா மாந்தோப்பு
பச்சையற்ற மேய்ச்சல் நிலம்
தேனியற்ற பூஞ்சோலை
நீர்மையற்ற வாழையடி
தலை கருகும் பனைமரங்கள்
தடமழிந்து போன நதி
புராணக் கதையாகும்
பொன்வண்டு, மின்மினிகள்
தம்பளப் பூச்சியற்ற
தண்பனியின் உதிகாலை
தான் வாழ்ந்த வழியெங்கும்
தடைகள், தெரிவின்றி
முட்டிச் சாகின்ற
முரட்டானைக் கூட்டங்கள்
மற்றும் தமிழரும்..


Friday, 17 May 2019

இந்த நாட்கள் மே 17-18

சில் வண்டில்லாத
அடர் காடாய்
காற்றூதல் கேட்காத
இராக் கடலாய்
தவளைகள் பேசாத
குளக் கரையாய்
சிறகோசை இல்லாத
பழ மரமாய்
தொடுவானம் தெரியாத
விரி வெளியாய்
நீங்களும் விடைபெற்ற
இந் நாட்கள்..


Monday, 13 May 2019

கீறுவோம் எமக்கான திசை..

தீ எம் வாசலையும் தீண்டினாலென
தீட்டி வைத்தவை எல்லாம்
தணிக்கவும், தற்காக்கவுந்தானென
எடுத்துக் கொள்ள வேண்டிய
மனதில் இருக்கிறோம்
ஏனெனில்
எவர் எவரை அடக்க நினைத்தாலும்
எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை
அவர்களோடு சேர்ந்து
நீரெம்மை நீறாக்கிய நோவு
உடலெல்லாம் இருந்தாலும்
எதுவோ துடிக்கிறது உமக்காய்

அடித்தவன் தான் சரியோ
என்ற ஐயத்துக்கு
உம்மை ஆளாக்கும் வரை
அவர்களும் ஓயப்போவதில்லை

ஓரினம் நாமென்ற
உள்ளம் உமக்குள்ளே
உருவாகினால் மட்டும் தான்
தேறுவோம் நாம்
அன்றில் தீர்வு வேறில்லை

சேருவோம் நாமென்று
சிந்தித்தெழும், நாளை
கீறலாம் எமக்கான
திசை..


Wednesday, 8 May 2019

நேருமிது என்று அறிந்தாயோ..

அள்ளி இரு கையில்
அன்பை முழுதாக
கொள்ளு பிடியென்று
கொடுத்தாலும்
உள்ள மனம் பூட்டி
ஒதுங்கி எனைநீங்கி
தள்ளி மெதுவாக
தவிர்ப்பாயோ?

சேர நிலம் வந்து
சேரு எனையென்று
ஈர மொழி பேசி
எனை யுந்தி
ஆறு கடலோடு
ஆவலொடு கூட
ஊறி வரும் போது
உதைவாயோ?

நேருமிது என்று
நெஞ்சின் அடிஉள்ளின்
ஓர அறையோரம்
உரப்பாக
கூறும் அசரீரி
கொட்டும் உடுக்கொன்று
ஏறிச் செவிகேட்டு
எறிந்தாயோ..


மூச்சின் வாசனையை முகர்..

தகிப்பில் அதிரும்
நரம்புகளின் உணர்முடிச்சின் பீடத்தில்
உன்மத்தம் துடித்த ஒருகணத்தின் போது
உனையே மறந்து
காதல் அவிழும் என் கண்களை
காணவென நீ திரும்பிய போது
சூரியனை கடல் விழுங்கிற்று

கத்தியேனும் மனசை
காதில் விழுத்த நீ
எத்தனித்தபோது வான் குலுங்க
என்றுமில்லா இடி
பேரோசை சிற்றோசையைத் தின்றது

ஈரநெருப்பின் இதத்தில்
அங்கம் இணைத்தேனும்
ஆசையைச் சொல்வமென
கைகளை நீட்டிய படி
நீ ஓடிவந்த போது
கால்களின் முன் காய்ந்திருந்த பள்ளத்தால்
காத்திருந்த காட்டாறு
கரைபுரண்டு தன்னோடு
அந்த முயல்வினையும் அடித்துச் சென்றது

மூச்சின் வாசனை அறியாதவளா நீ
முகர்ந்தேனும் எனை உணர முற்பட
காலில் நசிந்த குளைகளின்
காட்டு மணம் காற்றெங்கும்

பருவத்தில் மட்டுமே ஊறும்
மலையருவி நீ
காலவிதி இடையே ஊடறுத்து
வேளையினை நீட்ட
ஊற்றடங்கி, கசிந்த நீர்காய்ந்து
உன்நிலை
தன்நிலை உணரத் தலைப்பட்ட போது
என்நிலை தெரிந்த இதயம் நின்று
மீண்டும் துடித்ததுன் மூளை

இமைக்குமுன்
ஏதோ உணர்ந்தவளாய்
எதிர்த்திசையில் திரும்பி
ஏறத் தொடங்கினாய்
கடந்து செல்லும் முகிலாய்
ரதியின் உரு கலைந்து செல்கிறது

உயிர்ச் சஞ்சாரமற்ற
பொட்டல் வெளியின் தொடுவான் கரையில்
மங்கலாய்த் தெரியும் ஒற்றைப் பனையாய்
மீண்டும் நான்..


வாழ்நாட் கனவு..

எத்தனை உயிர்கள்
எத்துணை தியாகம்
எத்தனை ஆண்டுக் கனவு
அத்தனை உழைப்பின்
ஆயுளும் எப்படி
இத்தனை சீக்கிரம் கலைந்தது..?

வீழும் என்று எண்ணியே இராத
வீரயுகங்கள் கண்களின் முன்னால்
மாழும் என்கிற படிப்பினை தன்னை
மனசும் நம்ப மறுக்குது,

கந்தகப் புகையாய் கலைந்தன்று சென்ற
கட்டி நாம் காத்த நற்கனவு
எந்த நாள் நனவாய் ஆகுமோ அறியேன்,
இருப்பனோ என்பதும் தெரியேன்.

எந்தநாள் ஆயினும் ஆகட்டும்
ஆனால்
ஆகத்தான் வேண்டும் இறைவா..

Thursday, 25 April 2019

இன்னமும் இருக்கிறது..

ஓர விழிகளில்
உள்ளம் கசிகிறது
ஒரு போதும் அதை நீ சொல்லுவதில்லை

ஈரமாகும் மனம்
எனக்கும் இருக்கிறது
என்றும் அதை நானும் காட்டுவதில்லை

கவிதையென்று மெதுவாய்
நீ தொடங்குவாய்
காலநிலை பற்றி நான்
கதை பேசுவேன்

பாடலின்று கேட்டாயா
நான் தொடங்குவேன்
வேலையின்று கடினமென
நீ விழுங்குவாய்

இப்படியாய் துளிர்த்த மரம்
கிளை வைத்து இலை அடர்ந்து
நிழலில் இருமனமும்
நிம்மதியாய் கால் நீட்டி
அமர எண்ணுகையில்
நிலத்தைப் பிளந்தது
யுகப் பிரிகோடு,
வழியின்றி நடக்கத் தொடங்கினோம்
வடக்காய் நானும்
தெற்காய் நீயும்

அந்த மரம் இன்னும்
அப்படியே இருக்கிறது..


Monday, 18 March 2019

கரங்களை நீட்டும் கனவு

இலை உதிர்ந்தாலென்ன நண்பா
பார்த்துக் கொண்டிருக்க
பருவம் மாறும் துளிர்க்கும்
கிளை உடைந்தாலும்,
இருக்கட்டும்,
இன்னொரு கிளையுண்டே,
போதும்,
மரமே பாறி வீழ்கிறபோதுதான்
உரஞ்சிதறிப் போகிறது
ஆயினும்
இப்போதும் கூட எழச்சொல்லி
கரங்களை நீட்டுகிறதென்
கனவு..


அவதானம்..

தோற்ற தன் நண்பனுக்கு
தோள் கொடுத்து அவன் மனசை
ஆற்றுப்படுத்துமோர் ஆறுதலைச் சொல்லாமல்
விழுந்தான் எனுங் கணத்தில்
விலத்தி மிகத் தந்திரமாய்
அத்துணை வேகமாய் கழன்ற அவன்
உமை நோக்கி
ஓடி வருகின்றான் ஒட்ட,
அவதானம்..


அப்படியே தான் இருக்கிறது..

வாழ முடிந்த வாழ்வையும்
இன்புறக் கிடைத்த இளமையையும்
எதன் பொருட்டு துறந்தாயோ

வெடித்துப் பறக்கும்
பருத்திப் பஞ்சின் கனம் தான்
உயிரென்பதுவாய்
இரெண்டு கைகளாலும்
அப்படியே வழித்தெடுத்து
எதற்காக உன்னையே நீ
தாரை வார்த்தாயோ

ஆண்டுகள் பல ஓடிப்போயிருப்பினும்
அதற்கான காரணங்கள்
இன்னும் அப்படியே தான் இருக்கின்றன
நண்ப..


விடுதலைக் கனவு..

எந்தைகள் முயன்றதை
நாங்களும்
நாங்கள் முயன்றதை
மகன்(ள்)களும்
மகன்(ள்)கள் முயன்றதை
பேரர்களுமென
எத்துணை இழப்பினும்
நனவாகுமெனும்
நம்பிக்கையை மட்டும் இழப்பதில்லை
விடுதலைக் கனவு..


Tuesday, 5 March 2019

மறைவதெல்லாம் காண்பமன்றோ..

நாட்கள் ஓடி நரைத்தாலும்
இன்னும் கமழ்கிறது
நாசியில் காட்டின் வாசனை

எறிகணைக்கு பாதி முறிந்தாலும்
இன்னும் நிமிர்வாய் நிற்கிறது
மனசில் ஒற்றைப் பனை

வற்றிப் போனாலும்
இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது
நினைவில் வழுக்கை ஆறு

மெளனித்துப் போனாலும்
இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது
காதுகளில் விடுதலைக் குரல்..


Saturday, 2 March 2019

சமதரை..

உலகைக் காணும் உயரத்துக்கோ
உலகு காணும் உயரத்துக்கோ
எப்படியேனும் செல்ல வேண்டியது
உண்மைதான்,
மலை உச்சி எனினும் நிற்பதற்கு
சமதரை வேண்டுமல்லவா..?
அங்கிருந்து நீ செப்பனிடு
இங்கிருந்து நான் செப்பனிடுகிறேன்
வரைபடத்தில் கூட
தேசம் எல்லைகளில் நடுங்கக் கூடாது

எந்தப் புயலும், வெள்ளமும் இனிமேல்
எதனையும் பிரட்ட முடியாத படிக்கு
அத்தனை தெளிவாய், ஆழமாய்க் கீறு
உயர ஏறி நிற்பதென்பது
நீயும், நானும் தனியாய் நுனியில்
அடையாளத்துக்காய் நிற்பது அல்ல
அதன் பின்னரும், பின்னரும் கூட
இனமாய் சேர்ந்து ஊழிவரைக்கும்..,

உலகைப்பிரட்ட உலகின் வெளியே
துண்டு நிலமும், நெம்பும் கேட்டதன்
அர்த்தம் உணர்வாய், ஆதலால்
வேண்டுமோர் சமதரை
மீண்டும் எழுவோம்..


Saturday, 2 February 2019

எழுத்தெனப்படுவது யாதெனில்..

சாளரத்தின் வெளியே
பரந்து விரியும்
பச்சைமரகதப் போர்வையையும்
அதனை ஆரத்தழுவும் தொடுவானையும்
இமைகளை அகல விரித்து
அவனது கண்கள்  பார்க்கிறது,
பறவைகள்
வெளியைக் கடக்கும் வேளை
இமைக்க மறக்கிறான்,
ஒன்றிக் கரைந்தவனாய்
உடல்மொழி மாற
எதையோ எழுதுகிறான்,

ஒவ்வொரு வரியிலும்
காட்சியின் நிறம் ஊறுகிறது
கறுப்பு வெள்ளையில்
வண்ணங்கள் எழுகிற மாயாஜாலம் எழுத்தில் மட்டுமே நிகழும் போல!

அறையில் மெல்லிதாய் மலைப்புல்லின் வாசம்
நாடியை நிமிர்த்தி
மூச்சை ஆழ உள்ளிழுக்கிறான்
எழுத்தில் உயிர்த்த காட்சியிலிருந்து
வாசனை கசிகிறது

மலையில் ஓடும்
குதிரைகளின் குளம்பொலி
நெஞ்சுள் கேட்கத் தொடங்கிய வேளை
எம்மைச் சுற்றி உயிர்பெற்றெழுந்தன
எழுதிய காட்சிகள்

அதிலிருந்து வழியும் அருவியில்
நீராடிச் சிலிர்க்கிறோம்,
நானும், மகனும்
இன்னும் சில குருவிகளும்..

Tuesday, 29 January 2019

இவன் இப்படித் தான்..

அன்பெனும் காற்று
அடித்தால் அந்நொடியே
என்புருகி நெகிழ்வேன்
எனை மறப்பேன், உமக்காக
எந்நிலைக்கும் இறங்கி வந்து
எனைக் கொடுப்பேன், என்வரையில்
அன்பெனப்படுவது மரியாதை
அதற்கேதும்
ஊசி முனையளவேனும் உறுத்தினால்
அவ்வளவே,
அடுத்ததொன்றில்லை
அகன்று விரைவாக
எடுத்தெறிந்து போவதன்றி
ஏதும் வழி அறியேன்

இவன் என்றைக்கும் இப்படித் தான்
இயலுமெனில் வரலாம்
இல்லையெனில் அதோ படலை..