Saturday 2 February 2019

எழுத்தெனப்படுவது யாதெனில்..

சாளரத்தின் வெளியே
பரந்து விரியும்
பச்சைமரகதப் போர்வையையும்
அதனை ஆரத்தழுவும் தொடுவானையும்
இமைகளை அகல விரித்து
அவனது கண்கள்  பார்க்கிறது,
பறவைகள்
வெளியைக் கடக்கும் வேளை
இமைக்க மறக்கிறான்,
ஒன்றிக் கரைந்தவனாய்
உடல்மொழி மாற
எதையோ எழுதுகிறான்,

ஒவ்வொரு வரியிலும்
காட்சியின் நிறம் ஊறுகிறது
கறுப்பு வெள்ளையில்
வண்ணங்கள் எழுகிற மாயாஜாலம் எழுத்தில் மட்டுமே நிகழும் போல!

அறையில் மெல்லிதாய் மலைப்புல்லின் வாசம்
நாடியை நிமிர்த்தி
மூச்சை ஆழ உள்ளிழுக்கிறான்
எழுத்தில் உயிர்த்த காட்சியிலிருந்து
வாசனை கசிகிறது

மலையில் ஓடும்
குதிரைகளின் குளம்பொலி
நெஞ்சுள் கேட்கத் தொடங்கிய வேளை
எம்மைச் சுற்றி உயிர்பெற்றெழுந்தன
எழுதிய காட்சிகள்

அதிலிருந்து வழியும் அருவியில்
நீராடிச் சிலிர்க்கிறோம்,
நானும், மகனும்
இன்னும் சில குருவிகளும்..

No comments:

Post a Comment