Tuesday 15 May 2012

கற்றாழை இதயம்..

இலை துளிர்த்தும் அது உதிர்ந்தும்
பனி படர்ந்தும் அது கரைந்தும்
பூ மலர்ந்தும் அது விழுந்தும்
பருவங்கள் ஆண்டுகளாய்ப் பல ஓடி
என்றோ ஓர் நாளில்
நாம் சந்திக்கின்ற போது
உன்னுடைய பழையவனாய்
நான் இல்லாமற் கூடப் போகலாம்

உன் நினைவுகளின் ஈரப்பதன்
குறையாமல் இருப்பதற்கு
என் நெஞ்சின் ஈரத்தை
ஆண்டுகளாய் இறைத்து முடித்து விட்டேன்

உன் நினைவுகளுக்காக மட்டுமே
செலவழிக்கப்பட்ட என் மூளைச்செல்கள்
புதையுண்ட ராஜதானியில் இருந்து
எடுக்கப்பட்ட கல்லைப் போல
ஆயிரம் கதைகளைச் சுமந்தபடி
வெடித்துப் போய்க்கிடக்கிறது

செல்களில் உறைந்துள்ள
நினைவுகளைப் பிரித்தெடுக்கும்
தொழில் நுட்பத்தை
நீ வரும் அந்த நாளில்
யாரேனும் கண்டுபிடித்திருந்தால்
உன் பற்றிய
என் நினைவின் வார்த்தைகளை
உயிர் ததும்பும் ஓசைக் கவிதையாக
ஒரு வேளை
உன்னால் படிக்க முடியலாம்

கிணற்றடி வாழையின் பசுமையாய்
உனிலன்று படர்ந்திருந்த நான்
இன்று
ஆற்றோட்டம் நின்று போன நிலமாய்
வெடித்துப் பிளந்து போயிருக்கிறேன்
ஆயினும்
நீ என்னைக் காணப்போகும் அந்த நாளில்
என் கற்றாழை இதயம்
மனத்தரிசில் தன்னைப் பிழிந்து
ஆவி உயிர்ப்பை அகத்துறிஞ்சி
நெகிழ்ந்து குழைந்துருகி நீராகி
காதலைத் துமிக்குமடி
கண்ணில்..

No comments:

Post a Comment