Tuesday 15 May 2012

உனக்கான அருகதை..

காட்டாறு
எங்கள் வேர்கள் பற்றி உள்ள
கரையை அரிக்கத் தொடங்கிய போது
விழுதுகளை இறக்கி
விழாமல் நின்று கொண்டு
வேர் வலைகளை விரித்து
மண்ணை இறுகப் பற்றினோம்
அப்போதில்
பக்கவேராகக் கூட நீ
பங்களிப்புச் செய்திருக்கவில்லை
வேரோட்டம் பற்றி மட்டுமே
விமர்சித்துக் கொண்டிருந்தாய்

காட்டாற்றின் பலவந்தம்
கேட்பாரற்று உள் நுளைந்த போது
வேர்களால் கற்களைக் குடைந்து
வேகத் தடைகளைப் போட்டோம்
உயிர் கொடுத்து
பாதையைக் கூட அடைத்தோம்
அப்பொழுதில் நீ
கழிவறையில் பொழுது போக்காகப் படித்த
காலாவதியான கோட்பாடுகளுக்குள்
வேகத்தடை முறைமை வரவில்லையென
காட்டாற்றின் அருகில் நின்று
கத்திக் கொண்டிருந்தாய்

காட்டாறு மட்டுமே எனில்
கையாண்டிருப்போம் நாம்
எமக்கான நிலப்பரப்பை
எமதாக்கி வைத்திருப்போம்
கண்டத்தகடு பிளந்து
கடல் புகுந்த போது தான்
ஊட்டம் குறைந்து உடைந்து போனோம்

ஒவ்வொரு வேர் வேராய்
உயிரறுந்து போம் போதும்
அவ்வளவு ஓலங்கள் அழும் போதும்
காட்டாற்றை நோக்கி
ஓர் கல் கூட எறியாத நீ
எப்படிப் போராடுவதென்று
எமக்குச் சொல்லித் தருகிறாய்

இப்போதில்
நாம் சிதைக்கப்பட்ட காட்சியை
மிக ரசித்து
மாலைத் தேனீராய் சுவைத்துக் குடிக்கிறாய்
குடி

சிதைந்த காயத்தால் இன்னும்
சீழ் ஊற்றி வரும் நிலையில்
அதைச் சொல்லிச் சொல்லி
ஆனந்தக் கூத்தாடுகிறாய்
ஆடு

கந்தக வாசனையே
கண்டிரா உன் மூக்கால்
கட்டமைப்பின் பிழை என்று
கத்தித் திரிகிறாய்
கத்து

ஒன்றை மட்டும் புரிந்து கொள்

விருட்ச இருப்பின் விதைகள்
மண்ணில் மட்டுமல்ல
மனசிலும் முளை விட்டிருக்கிறது
மண்ணில் விருட்சம் மரித்தது போலிருந்தாலும்
மனசில் விருட்சம் மரணிப்பதே இல்லை
மனசின் அகக் காட்சி தான்
மண்ணின் யுகக் காட்சி
அது
தேவை தீரும் வரை
திரும்பத் திரும்ப எழும்..

2 comments:

  1. விதைகள்
    மண்ணில் மட்டுமல்ல
    மனசிலும் முளை விட்டிருக்கிறது

    ReplyDelete