Tuesday 15 May 2012

பறப்பின் தாகம்..

கட்டளைகள் எதுவுமே காதிற்
படாமலுக்கு
வெட்டவெளி கிழித்து விண் குளித்து
வீறாக
பொட்டல் வெளி கடல் மலைகள்
பொருட்டாகத் தோன்றாமல்
திட்டமிட்ட இலக்கின்
திசை நோக்கிப் பறக்கின்ற
களைப்பறியாப் பறவை ஒன்றின்
காத்திரச் சிறகாக
இளைத்து நான் சோர்ந்து
இருந்திடமுன் எனையாக்கு

ஆவியள்ளும் கண் சிமிட்டில்
அசைத்துருக்கும் பாடலதில்
பாவி என் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்ற
பாசாங்கறியாத பால் வாயின் சிரிப்பொலியில்
பட்டுண்டு என் நெஞ்சம் பலவீனமாகுமுன்னர்
பாசம் எனும் வேர் படராத பாதை வழி
கட்டுப்பாடிழக்காமல் காலை நடக்க விடு

செம்பால் வழிந்தோடிச் சிவந்த
எம் பயணத்தை
வம்படித்துப் பேசுகின்ற வாய்களுக்குப்
பதில் சொல்லி
என் பலத்தைச் சிறிதேனும் இழந்து விட
வைக்காதே
இன்னும் நெடும்பயணம் இருக்கிறது
அதனாலென்
கண் வாய் காது பொத்திக் காப்பாய்
என் சக்தியினை

நீண்டு செலும் நள்ளிரவின்
நெடுவான வெளியொன்றில்
தோன்றவுள்ள விடிவெள்ளி தொலைவிலில்லை
அதை நோக்கி
அடித்து நான் பறக்கும் அற்புதத் தினம்
வரையில்
துடிக்கவை என் நெஞ்சை துவண்டு விட
ஒப்பாதே

என் பறப்பின் தாகம் எதுவென்று
நீ அறிவாய்
மண் தாகமும் அது தான் மனதிருத்து
விடுதலையே..

No comments:

Post a Comment