Sunday, 2 March 2014

கண்ணம்மா..

எந்தை நிலம் நீயெனக்கு
ஏங்கும் மனம் நானுனக்கு
வந்த வழி நீயெனக்கு
வரும் விடியல் நானுனக்கு
எந்தநிலை தோன்றிடினும்
என்னுளெழும் வீரியமே
சொந்த மண்ணின் வாழ்கனவே
சுதந்திரமே கண்ணம்மா

கண்ணின்மணி நீயெனக்கு
காட்சியடி நானுனக்கு
ஜென்மவரம் நீயெனக்கு
ஜீவிதமாய் நானுனக்கு
மண்ணின் மணம் போல எந்தன்
மார்புளெழும் வாசனையே
எண்ணங்களின் ஊற்றுயிரே
என்னிருப்பே கண்ணம்மா

விந்தினணு நீயெனக்கு
விளையும் கரு நானுனக்கு
சந்தமொழி நீயெனக்கு
சமர்ப்பரணி நானுனக்கு
முந்தையொரு நாளிலெந்தன்
முதுசமென வாழ்ந்தவளே
விந்தையொன்று ஆகிடுமா?
விடுதலையே கண்ணம்மா..

Wednesday, 26 February 2014

பறந்திடு போ..

உன்னைப் புரிந்தோர்க்கு
உனை விளக்கத் தேவையில்லை
உனையறியா மனங்களுக்கோ
உனை விளக்கிப் பயனுமில்லை

சின்ன வாழ்க்கையடா
சீக்கிரம் முடிந்து விடும்
வண்ணங்கள் கனவுகளில்
வற்றி, வெளுப்பதற்குள்
என்ன மனம் சொல்கிறதோ
ஏறி நட, அப்பொழுதில்

மனப் பறவைக் குஞ்சுக்கு
மயிர் சிலிர்க்கும், இறகு வைக்கும்
இனம் புரியா இதமொன்று
எங்கிருந்தோ உனைத் தழுவ
சிறகடிக்கும், மென்காற்று
சிலிர்ப்போடு உனைத் தழுவும்
பறவைக்கு இனியேன் சொல்
மனப்பாரம்? பாதை அதோ
பற, திரும்பியினிப் பார்க்காதே
பறந்திடு போ..

Wednesday, 12 February 2014

நடைப்பிணம்..

நீதியே பேசிப் பேசி
நீதிக்காய் வாழ்ந்து வாழ்ந்து
ஏதுமே அற்று மற்றோர்
இகழுதற்குரியனாகி
வீதிக்கு வந்து முற்றி
விசரனும் ஆகி, கேட்க
நாதியே அற்று நாறி
நடைப்பிணமாகி மாண்டேன்

இயங்குதல் செத்து வெற்றாய்
இருப்பதும், மூச்சு நின்று
இயங்குதலற்று மூளை
இறப்பதும் ஒன்று தானே

அகதியாய் ஓடியோடி
அலைவுற்று நொந்து வாழ்வை
சகதியிற் கீழாய் ஆக்கிச்
சரிந்த பின் திரும்பிப் பார்த்தால்
எதுவுமே இல்லை, பக்கம்
எவருமே இல்லை, அன்றே
அவர்களோடொன்றாய் நானும்
அடியுண்டு போயிருந்தால்
இத்தனை கீழ்மையின்றி
இன்னும் நான் வாழ்ந்திருப்பேன்..

Friday, 17 January 2014

கைகளை இழந்த கணையாளி..

எல்லாமே புதையுண்டு போயிற்று
இப்போதெல்லாம் நீ
நினைவில் எழுவதில்லை
அகழ்ந்தெடுக்கும் சாத்தியத்தையும்
அடித்துச் சென்றுவிட்டது
காலக் கடல்கோள்
சிதிலங்களைக் கூட்டியள்ளி
துடைத்தெடுத்தாலும் கூட
அது இனித் தொல்பொருள் தான்
வட்டப்பாதையில்
என்றேனும் ஒருநாள்
எட்டிப்பார்க்க மட்டும் இனிது

மற்றபடி இன்றைக்கு
எழுதுகிறதா என
புதுப்பேனாவைக் கிறுக்கிப்பார்த்த போது
நினையாப் பிரகாரமாய்
உன் பெயர் தோன்றியிருப்பது
குறட்டை போல்
நானறியாமல் நிகழ்ந்த ஒன்று
திக்குவாய் மூச்சின்
திணறல் தான் குறட்டையெனில்
ஒப்புவமைப்படி
மூச்சிலின்னும் நீயிருப்பதாய்
முடிச்சுப் போட்டால்
நானல்ல அதற்குப் பாத்திரவாளி

கூர் முள்ளில் வாழைக்குருத்தாய்,
அடிபெயர்ந்து வீழ்ந்த பெருமரத்தின்
நடுங்கும் இளந்தளிராய்
முடங்கிப் போயிருக்குமென் வாழ்வு
தோள் கூடத்திருப்பவியலாதோர்
ஒற்றையடிப் பாதை.

கால்களின் கீழே காலநீரோட்டம்
பாதங்களைப் பதிக்கவிடாமல்
பலவந்தமாய் இழுத்துச் செல்கிறது
ஓடி இழுபட்டு
எதுவெதுவோ வாழ்விலாகி
இப்பொழுதில்
கோளக் கடிகாரத்தின்
வட துருவத்தில் நீ
தென் துருவத்தில் நான்
இதற்குள்
அரைவாசி ஓடிற்று ஆயுள்

போதும்
பருவகாலம் மாறுமென்றெல்லாம்
இனிப் பாடமெடுக்காதே
இலையுதிர்ந்த இளம் மரத்துக்குண்டே தவிர
பட்ட மரத்துக்கேது சொல்
வசந்த காலம்?
கைகளை இழந்த பின்னால்
எதற்குத்தான் கணையாளி?

Tuesday, 17 December 2013

நினைவிலெழல்..

இத்தனை ஆண்டாய்
நினைவில் வராமலும்
இருக்கிறாய் தானா
எதுவும் தெரியாமலும்
எங்கோ மனத்தின்
குகையில் இருந்த நீ
எதிரே தாண்டும் குழந்தையின்
கண்களில்
எந்தக் கபடமும் இல்லாச் சிரிப்பில்
மின்னல் போல தோன்றி மறையலாம்

அதனின் நீட்சி
உதட்டில் மெல்லிய சிரிப்பாய்,
வயிற்றை உப்பி
ஆழவிட்டிடும் மூச்சாய் அமையலாம்
சிலர்க்கு
கண்களில் லேசாய் ஈரம் கசியலாம்
நொடிகள் வானில்
நிலைக்குத்தியும் கூட
நிற்கலாம் விழிகள்
முடிந்தால்
சமூக இணையத் தளங்களில்
இருப்பை
தட்டிப் பார்க்கவும் செய்யலாம்
கண்டால்
எங்கே இப்ப? சுகமா?, கேட்க
தயங்கி விரல்கள்
தளர்ந்து பின்வாங்கலாம்
பொம்மை கேட்டுக் குழந்தை அழைக்க
அந்த வேளையும் மறையலாம்
ஆனால்

யாருமே இன்றி
ஆழ்ந்த வெறுமையாய்
அகன்று கிடக்கும் வெளியிடை
சட்டென
எங்கோ இருந்து பறந்து சென்றிடும்
ஒற்றைப் பறவை, சூன்ய வெளியை
உயிர்ப்புடைக் கவியாய் மாற்றுதல் போல

எந்தக் கண்டத் தகட்டின் மூலையில்
இருப்பினும் மண்ணை
தழுவிப் புணர முன்விளையாட்டை
மழை செய்திடும் போது
எழுந்திடும் கலவி வாசம் ஊரின்
மண் மணந்தன்னை
உருகும் படியாய் நாசியில்
மீண்டும் ஊட்டுதல் போல

எங்கே இருக்கிறாய் தெரியாதிருப்பினும்
எந்தத் தொடர்புமே இல்லாதிருப்பினும்
இத்தனை நாட்களாய் நினையாதிருப்பினும்
ஏதோ கணத்தில்
உந்தன் நினைவு எங்கோ யார்க்கோ
எழலாம், நீயும்
உயிரின் மனசால் நொடிகளெனினும்
நினைக்கப்படலாம்
ஆதலால்
ஒருவரிலேனும் ஒருகணம் தன்னும்
உருகும் நினைவாய்ப் பழகி
விடைபெறு
எதிர்வரும் சாவெனல்
ஓர் வெறுங்கனவே..

Sunday, 1 December 2013

முகிலாய் நினைவும்..

சாளரத்தால் அறைக்குள் குதித்த சூரியன்
பல்லி போல
சுவரில் ஊர்ந்து செல்கிறான்

மாலைவானில் பார்த்த மேகங்களை
காலைவானில் காணக்கிடைக்கவில்லை
நேற்றுவரை என்னோடிருந்தவர்களை
அது நினைவுறுத்துகிறது

இன்று புதிதாய் எத்தனை மேகங்கள்!
எவையும் என்னை அறியா
கேள்வியுறல் அறிதலாகா
இன்னும் சில நாளி இருக்க முடிந்தால்
ஒரு சிரிப்பு, சில வார்த்தை
பயணத்தில் வேகமாய்க் கடக்கும்
நிலக்காட்சிபோல் துளியெனினும்
விழிக்குள் இவற்றின் ஞாபகவிம்பம்
விழுந்து விடலாம்

இன்றிருளும் வரைதான்
இது கூட,
அண்ணாந்த விழிகளும்
அசையும் முகில்களும்
அப்படியே நாளை
அவை வேறு

வாழும் காலத்தில் வாழ்ந்தவர்கள்
வாழும் வரைதான் நினைவு

ஆயின்
வரலாற்றினூடுணர்தலென்றால்..
பிணத்தைப் புணர்தல்
அல்லது
கோமா உடலுடன் முன்விளையாட்டு

இதனாற் தான்
நாலுபேரின்று நையாண்டி செய்யினும்
அவர்களோடொன்றாய்
களத்தில் கேட்ட கானங்களை
வெறிச்சோடிப் போயிருக்கும்
இற்றை வேளையில்
கேட்க நேருகின்ற போது

எச்சில் விழுங்க முடியாமல்
தொண்டை இறுகியும்
கண்ணை இமைக்க முடியாமல்
குளமாய் பெருகியும்
நெஞ்சுக்குள் ஓடும் நரம்புகளெல்லாம்
அறுந்த பல்லிவாலாய்
ஆகி விடுகிறது..

Saturday, 26 October 2013

இன்றும் கூட இப்படியாய்..

தொடுவானத் தொலைவெனினும்
தொட்டிடலாம் என்றெண்ணி
காத்திருந்தும் இன்றுவரை
கையெட்டாக் கலக்கத்தில்
கடலில் மூழ்குகின்ற 
கடைசிக் கணச் சூரியனாய்
கண்கள்

விடைபெறுமந்தக் கண 
வேளையிலும் எற்றியெற்றி
அடிக்கின்ற அலைகளாய்
அவள் நினைவு, மூச்சடைத்து

வெடித்த நெஞ்சிருந்து
விசிறுண்ட குருதியின்
படிவாய் ஆங்காங்கே
பரவி முகிற் தசைகள்
வாழ்ந்திருந்த காதலின்
வழித் தடமாயும் தான்,

நேத்திரத்துள் நிழலாய்
நினைவினுரு கரைகையிலே
போர்த்துறங்கிப் போயிற்று அந்தி
சோர்த்த படி
வெறித்த என் மனம் போல்
வீழ்கிறது இன்றிரவு..