புதன், 28 ஜனவரி, 2026

இருளின் தையற்காரனும் எரியும் நரம்பும்..

வதைப்பவன் கைகளில்

இருள் ஒரு கருவியாகத் திரள்கிறது

ஒவ்வொரு அடியிலும் அவன்

தனது அகத்தின் சாளரங்களை

நிலக்கரி பூசி அடைக்கிறான்.

-

அவன் ஆன்மா 

ஈரமில்லாத ஒரு பாழ்ங்கிணறு

வீழ்ந்த கற்களின் ஒலியைக்கூட

வெளியே விடாத கருங்குழி

அவன் குருதியில் இப்போது

நிழல்கள் உறைகின்றன

அவன் தொடும் இடமெல்லாம்

காலம் தன் நிறத்தை இழக்கிறது.

-

வதைப்பவன் என்பவன்

தனது விதியால் கைவிடப்பட்ட

ஒரு தையற்காரன் 

பிறர் வலிகளால் அவன் தைப்பது

தனக்கான சவக்கோடியை மட்டுமே

-

ஆனால், வதைபடுபவன் 

அவன் உடலின் ஒவ்வொரு திறப்பும்

இப்போது ஒரு சுடரின் வாசல்

தசைகளைக் கிழிக்கும்போது

வெளியேறுவது குருதியல்ல

காலங்காலமாகத் தேங்கியிருந்த

ஆழ்மன இசை.

-

நரம்புகள் அறுபடும் கணத்தில்

அவை நரம்புகளாக இருப்பதில்லை

யாழின் தந்திகளென மீட்கப்படுகின்றன

வலியில் துடிக்கும்போது 

அவன் ஆன்மா 

தன் கூட்டைத் துறந்து

வானத்தின் அதீத நீலத்தைத் தொடுகிறது.

அங்கே சொற்கள் இல்லை

அங்கே வதைப்பவன் இல்லை.

-

தூய்மையான ஒளியால் நெய்யப்பட்ட

ஒரு பறவையின் சிறகசைப்பாய்

வதைபடுபவனின் உள்ளொளி

தன் சிறைநீங்கி விளிக்கிறது.

-

இருள் என்பது வதைப்பவனின் முகவரி

ஒளி என்பது வதைபடுபவன்

கண்டடைந்த ஒரு புதிய திசை..


செவ்வாய், 27 ஜனவரி, 2026

மீதமுள்ள பொருட்கள்..


மேசையின் மேல் ஒரு உடைந்த திசைமானி,

அதன் முள்

எந்தத் திசையையும் காட்டாமல்

தன்னையே சுற்றிக்கொள்கிறது.

-

சுவரில் தொங்கும் வரைபடத்தில்

கடல்கள் காய்ந்து கறை படிந்திருக்கின்றன,

நாடுகள்

பெயர்களற்ற வெறும் கோடுகளாகச் சுருங்கிவிட்டன.

-

இழப்பதைக் கற்றுக்கொள்வது

ஒரு கலைதான் என நாம் அறிவோம்

முதலில் சாவிகளைத் தொலைத்தோம்

பிறகு அந்தப் பெயர்களை,

இப்போது

நாமாகவே உருவாக்கிய

அர்த்தத்தின் கடைசி இழை அறுந்து விழுகிறது.

-

துருவேறிய ஒரு சாவி

எந்தப் பூட்டையும் திறக்கப்போவதில்லை 

ஆயினும் அதனை நாம்

கவனமாக மெருகேற்றுகிறோம்,

-

தூசு படிந்த அலமாரியில்

பயன்படுத்தப்படாத கோப்பைகள்

ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் சத்தம்

வெறுமையின் துல்லியமான இசை.

-

வெளியே,

பறவை ஒன்று

அடையாளம் தெரியாத ஒரு மரத்தில் அமர்ந்து

தன்னுடைய பழைய பாடலை

மறந்துபோன தொனியில் இசைக்கிறது

அதன் அலகுகளில்

ஈரம் எதுவுமில்லை 

வெறும் உலர்ந்த காற்றை அது

தன் சுவாசமாக மாற்றிக்கொள்கிறது.

-

இந்தக் குடிமையின் சிதைவு

ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை

ஒவ்வொரு கல்லாக நகர்ந்து

இறுதியில்

எதுவும் தாங்காத ஒரு அத்திவாரமாய்

வெற்றுத் தரை மட்டும் எஞ்சியுள்ளது.

-

முற்றத்தில் கிடக்கின்றன

சிதைந்த பொம்மைகளும்

திறக்கப்படாத கடிதங்களும்,

அவற்றின் மேல் பெய்யும் மழை

மண்ணை நனைக்கவில்லை,

மாறாக,

இருக்கின்ற கொஞ்ச ஈரத்தையும்

உறிஞ்சி எடுத்துச் செல்கிறது.

-

நாம் எதையோ தேடுகிறோம்

ஒருவேளை,

தொலைந்துபோதொரு

சிறுதுளிப் பொருளை அல்ல,

பொருள் எதுவுமே இல்லை என்கிற உண்மையை

எளிதாக ஒப்புக்கொள்ளும்

அந்த ஒரு கணத்தை..


வியாழன், 22 ஜனவரி, 2026

உதிரத்தின் திணை விழிப்பு..

எங்கிருந்தோ எழும் பேரோலம்

உன் செவிப்பறையைக் கிழிக்கையில் 

உன் உண்ணாக்கு அதிர்ந்து 

முள்ளந்தண்டு சில்லிடுகிறதா 

ஆயின் 

அயல் நிலத்தில் பெயரற்று வீழ்ந்தவன்

உன் குருதி வழி உறவு


எங்கோ ஓர் எளியவனின்

பசிநரம்பு தெறிக்கையில் 

உன் வயிற்றுச் சுவர்கள்

உள்நோக்கிச் சுருங்கிப் புலம்புகிறதா 

வா.. 

என் கைகளைப் பிடித்துக்கொள்

நீயும் என் உடன் பிறப்பு


விழிப்பு என்பது

தூக்கம் கலைந்த விழிகளின் வரவு அல்ல

அது 

அநீதி எரியும் திசையெல்லாம்

தன் சதையைப் பிய்த்து

நெருப்பாய் வீசும் 

ஒரு ‘திணைத் துளக்கம்’


பனந்தோப்புக் காற்றினூடே

பாயும் தோட்டாக்களின் ஈனச் சிரிப்பு

முள்வேலிக் காடுகளில்

தொங்கி நிற்கும் 

எம் மக்களின் கிழிந்த கனவுகள் 

இவை உன்னைத் தூங்க விடாமல்

உள்நின்று உலுக்குமெனில் 

உன் அரசியல் என்பது 

வெறும் சொல்லல்ல

அது சூல் கொண்ட நிலத்தின்

பேரெழுச்சி


நூறு நதிகள்

வெவ்வேறு திசைகளில் ஓடினாலும்

அநீதியின் உவர் நிலத்தில்

அவை சங்கமிக்கும் பெருங்கடலே 

நம் தோழமை..

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

நிலமெனும் உயிர்மூச்சு..

ஏதிலாளனே..!

நிலைகொள்ளாச் சொற்களுக்கிடையே

கடந்து செல்வோயே 

இதனை எழுதுக 


எம் உடலென்பது 

இம் மண்ணின் நுண்துகள்

எம் உயிர்ப்பென்பது 

இக் கடற்காற்றின் சீற்றம் 


யார் நல்கியது இவ்வுரிமை 

யாரும் ஈந்ததல்ல இது

கருவறைக் குருதியோடு கலந்துயிர்த்து 

தொப்பூள் கொடியால் 

இந்நிலத்துள் வேரூன்றி

பிறப்பொடு வந்த பெரும்பொருள்


வேரூன்றிய பனையின் செம்மாப்பில்

கருகிய மடல் சுமந்த 

தீயெனக் கொதிக்கிறது 

எம் முன்னோர் புதைத்த 

ஈமப் பெருங்கற்கள்

இந்நிலத்தின் உரிமையைப் 

பேசாப் பெருமொழியால்

எக்காலத்தும் பறைசாற்றிக் கொண்டிருக்கும்


அமைதி என்பது 

எம் நாவறுந்த நிலையும் அன்று 

அஃதெம் 

புதைக்கப்பட்ட சாம்பலினின்று

மீளத் துளிர்க்கும் ஆதி விதையின்

ஆழத்து அடக்கம்


எழுதுக..! 

நாங்கள் நிலமற்ற நிழல்கள் அல்லர்

சிதைக்கப்பட்ட நிலத்தின் 

மாறாச் சான்றுகள் 

எம் குருதி தோய்ந்த இந்நிலவரைபடம் 

கடலலைகள் தீண்டத் தீண்ட

கூர்மைபெறும் பெரும்வாள்


எங்கள் விடுதலை என்பது

வேறெங்கும் உளதன்று 

அதுவே எம்மூச்சின் முதலசைவு 

எம் வாழ்வின் 

முடிவிலாத் தொடர்ச்சி.. 



வியாழன், 8 ஜனவரி, 2026

ஏலோர் எம்பாவாய்..


காரிருள் போழ்ந்து கதிரவன் வந்துதித்தான்
போர்முரசம் கொட்டப் புவியெல்லாம் கேட்குது காண்
பார்முழுதும் ஆண்ட பழங்குடிநாம், இன்றோ
வேரிழந்த கொம்பாய் வெம்பியே நிற்கின்றோம்
ஊரறிய வாழ்ந்த உயர்வை நாம் மீட்டெடுக்க
பேரறிவும் வீறாப்பும் பேணித் துயிலெழாய்
வார்செறி கூந்தல் வாரி முடித்து நீ
ஏருடைய தேசம் எய்திடாய்  
எம்பாவாய்…

ஆழி சூழ் வையகத்தில் ஆளுரிமை அற்றோமாய்
கூலிக்கும் கீழாய்க் குன்றிப்போய் நிற்கின்றோம் 
வாழி எம் வையகம் வாராய் எம் விடுதலை 
ஊழித் தீ போலேநீ உற்று எழுந்து வா 
தாழ்விலா எம்இனத்தின் தாகம் தணித்திட
யாழின் இசைபோல இன்பம் பொழிந்திட
கோழைமை நீக்கி எமைக் காக்க வல்லதோர்
சூழல் அமைத்திடத் தோன்றாய் நீ  
எம்பாவாய்…

மானம் பெரிதென்று வாழ்ந்த மறக்குடியீர்
தானம் இழந்ததோர் தாயில்லாக் கன்றுபோல்
ஈனப் பிறவியாய் இங்கிருக்கப் போமோ நாம் ? 
வானம் பிளக்கவே வன்முரசம் கொட்டாதோ
தேனத் தமிழ்ப்பண் திசையெங்கும் கேட்காதோ
ஊனம் தவிர்த்தே உயர்ந்திட வாரீரோ
ஞானத் தலைவன் நல்வழி காட்டவே
யானை பல்கொண்டெழும் ஏலோர்  
எம்பாவாய்..

பூங்குழல் மங்கையீர் பொழுது புலர்ந்ததுகாண்
ஈங்கு நம் இல்லம் இடிபட்டுக் கிடக்கையிலே
தேங்கிய கண்ணீரில் திக்கற்று நிற்போமோ
ஓங்கிய குன்றில் ஒருகொடி ஏறாதோ
தாங்கிய தாயெம் தமிழ்நிலம் மீளாதோ
ஏங்கிய நெஞ்சம் இனிது இளைப்பாற
பாங்குடை நன்னாடு படைத்திட வாரீரோ 
தாங்கரும் துயர் தீர்க்கத் தாராய்  
எம்பாவாய்

புள்ளினம் ஆர்த்தன பொழுது புலர்ந்தது காண் 
அள்ளல் படுகுழியில் ஆழ்ந்து கிடக்கையிலே
விள்ளத் தெரியா விழுமங்கள் போனதென்ன
கள்ளர் கவர்ந்த எம் காணி நிலம் மீட்க
வெள்ளமெனத் திரண்டு வீறுடன் வாரீரோ
பள்ளம் மேடெலாம் பார்த்துக் களைந்தெறிய
உள்ளம் ஒருங்கே உறுதிகொள் வாரீரோ
எல்லை வகுப்போம்நாம் ஏலோர் 
எம்பாவாய்….