நான் என் தோலை உரிக்க முடியாது
வரலாற்றை மறக்க முடியாது
பிறப்பை மறுக்க முடியாது
நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
ஆனால் நான் சாம்பலாக மாறவில்லை
விடுதலையின் தீபமாக
எரிந்து கொண்டிருக்கிறேன்
என் உடலில் தாயகத்தின் கனவு துடிக்கிறது
என் நெஞ்சில் ஈழத்தின் மண் வாசம்
என் கண்களில் விடுதலையின் நீலக் கனவு
நான் மூண்டபின்
வான் நோக்கி எழும்
கந்தகப் புகையின் நிறத்தில்
என் அடையாளம்
நான் சாகும் நேரத்தைத்
நானே தேர்ந்தெடுத்தேன்
அது எனது பலவீனம் அல்ல
அன்பு,
எல்லோரும் சுதந்திரமாக
வாழவேண்டுமென எண்ணும்
கனிவு ததும்பும்
எல்லையற்ற அன்பு
கருப்பெனும் நெருப்பில்
கனவு நிறைகையில்
விடுதலைக்கான விதையானேன்
ஒரு நாள்
நிலம் பிளந்து
முளைக்கலாமென் கனவு
அதுவரையில்
நீரூற்றி நினைதல்
நின் கடன்..
No comments:
Post a Comment