Saturday, 12 July 2025

முகிலெனக் கலையும்..

அன்பாகப் பேசிக் கொண்டிருந்த

அந்த உதடுகள்

திடீரென்று கல்லாகிவிட்டன

உறைந்த குளிர்காற்றைப் போல

மௌனம் எங்களுக்கிடையே வந்து அமர்ந்தது

-

நான் ஏனென்று கேட்கவில்லை

அவளும் தான்,

தூரமான, வெறுமையான, அழகான

மௌனம் எம்மிடையே

விண்மீனைப் போல ஒளிர்ந்தது

-

பழகிய இத்தனை ஆண்டுகளும்

மழையைப் போல

என் முகத்தில் வீழ்ந்தன,

ஒவ்வொரு துளியிலும்

காத்திருப்பின் கனமும்

நினைவுகளும்,

இப்போது அவை அனைத்தும்

மேகம் போல கலைந்து செல்கின்றன

அன்பு இவ்வளவு குறுகியதா

மறதி இவ்வளவு நீளமானதா..

-

காதல் என்பது பறவையைப் போன்றது

வந்தபோது தெரியவில்லை

போகிறபோது தெரிகிறது

-

அவளுடைய மௌனம் என்னைச் சுற்றி

பரந்த கடலைப் போல விரிந்தது

அலைகள் இல்லாத கடல்,

வானத்தில் மறைந்த விண்மீன் போல

தூரத்தில் இருப்பதாய்த் தோன்றுகிறது

இன்னும் ஒளிவீசுவதாய் தெரிகிறது

ஆனால் அது எங்குமில்லை

-

இரவின் காற்று எங்கள் வீட்டைச் சுற்றி

தனிமையின் பாடல்களைப் பாடுகிறது

நாம் இல்லாத இடங்களில்

இருந்த அடையாளம்

மௌனம் பேசும் இடமெல்லாம்

நாம் பேசிய வார்த்தைகளின்

எதிரொலி,

-

காதல் மேகம் போன்றது

வரும்போது பூமியை நனைக்கிறது

போகும்போது

வானத்தை வெறுமையாக்குகிறது..

-திரு

No comments:

Post a Comment