பறவையின் இறகுகள்
புவியின் கனவுகளைச் சுமக்கின்றன
அது பறக்கும்போது
வான வெளிகள் அதன் உடலாகின்றன
அமரும்போது
மரங்கள் அதன் குரலில் பேசத் தொடங்குகின்றன
மறையும்போது
ஞாபகங்கள் அதன் இறகுகளைப் பூண்டு
காற்றில் மிதக்கின்றன.
-
ஒரு பறவைக்குள் உறங்குகிறது கடல்
ஒரு பறவையின் கண்களில்
ஒளிர்கின்றன நட்சத்திரங்கள்
ஒரு பறவையின் இதயத்தில் துடிக்கிறது காலம்.
-
நான் பறவை அல்ல
நான் அதன் பறத்தலின் சாட்சி
நான் வானம் அல்ல
நான் நீலத்தின் பேரழுகை
நான் மரம் அல்ல
நான் காலத்தின் தசைநார்கள்
நான் நினைவு அல்ல
நான் மறதியின் கருப்பறை
நானென்பது இவையெல்லாம் பிறந்த
பிரசவ வலியின் எதிரொலி
பிரபஞ்சத்தின் பெருமூச்சில் கரைந்த துளிகள்..