துப்பாக்கி முனையின் கூரிய
கத்திகளால் கிழிக்கப்பட்ட நெஞ்சில்
விழுப்புண்களை ஏந்தி நிற்கும் என்
தேசத்தின் வரைபடம் சுமக்கிறேன்
ஒவ்வொரு காயமும்
என் தேசத்தின் பெயரைச் சொல்கிறது
-
எங்கள் இரத்தம் ஒரே நிறம்
எங்கள் மரணங்கள் ஒரே மொழி
நானும் என் தோழர்களும்
உறங்கும் கனவு ஒன்றே,
நில அபகரிப்பின்
எல்லைகளைக் கடந்த நாங்கள்
மண்ணுக்குப் பதிலாக
பெயர்களை மட்டுமே சுமக்கிறோம்
-
வேர்கள் பறிக்கப்பட்ட மரங்களாய்
தூரத்து நிலத்தில் அலைகிறோம்
ஆனால் துப்பாக்கிகளுக்கிடையே
பூத்த காயங்களில் இருந்து
ஒரு புதிய பாடல் முளைக்கிறது
-
என் தோழர்கள்
சிகரங்களைக் காட்டிலும் உயரமானவர்கள்
இப்போது புல்வெளிகளின் கீழ் கிடக்கிறார்கள்
ஆழ்ந்த மௌனத்தில் உறைந்த அவர்தம் குரல்கள்
காலத்தின் செவிப்பறையில் இன்னும் அதிர்கின்றன
-
இரவில் அவர்கள் நினைவுகளாக வருகிறார்கள்
பகலில் அவர்கள்
உறுதிமொழிகளாக நடக்கிறார்கள்
விடுதலையின் அகராதியில்
அவர்களது பெயர்கள்
வினைச்சொற்களாக உள்ளன
-
இங்கு நான் புலம்பெயர்ந்த நிழல்,
ஒரு மொழியில் இருந்து
மற்றொரு மொழிக்கு அகதியாய் அலைகிறேன்
தேசம் என்பது என் தோள்களிற் சுமக்கும்
நினைவுகளின் கூட்டுத்தொகை
எம் மாவீரர்களின் கண்களில் தெரிந்த எதிர்காலம்
-
நாங்கள் நிழல்களை விட அதிகமானவர்கள்
காயங்களை விட ஆழமானவர்கள்
மரணத்தை விட நிரந்தரமானவர்கள்
ஒரு குண்டின் வழியாக நுழைந்து
வரலாற்றின் வாசல் வழியாக வெளியேறினோம்
-
பகலின் வெளிச்சம்
எங்கள் இருளை அம்பலப்படுத்தவில்லை
குண்டுகளின் சத்தம்
எங்கள் மௌனத்தை அழிக்கவில்லை
இரத்தத்தின் கணிதம்
வெறும் எண்களுக்கு அப்பாற்பட்டது
ஒவ்வொரு துளியும் ஒரு புதிய நாளின் பிறப்பு
-
மரணம் நாங்கள் கடந்த ஒரு வாசல்
விடுதலை நாங்கள் கண்ட ஒரு கனவு
இடைப்பட்ட வெளியில்
நாங்கள் தத்துவங்களாக நிற்கிறோம்
-
காலம் என்ற அமைதியான சாட்சி முன்
நின்று கேட்கிறேன்
இந்த விழுப்புண்களுக்கு என்ன அர்த்தம் ?
என் தோழர்களின் மறைவுக்கு என்ன நியாயம் ?
அவர்களின் இல்லாமை
என்னை நிரப்பும் இந்த இருட்டுக்கு
என்ன பெயர் ?
-
மண்ணின் வாசனையில்
அவர்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளனர்
காற்றின் இசையில்
அவர்கள் இன்னும் பேசுகிறார்கள்
விதைகளாய் புதைந்தவர்கள்
வரலாற்றின் விடிவெள்ளியாய் மீள்கிறார்கள்
இதுவே விடுதலைப் போரின் தத்துவம்
-
தோழா..
உயிரைத் தவிர இனத்தின் விடுதலைக்கு
அள்ளிக் கொடுப்பதற்கு
இனி எதுவுமே உன்னிடமில்லை
என்றான பின்னும்
அதே சமூகமே உன்னைக் கண்டுகொள்ளாமல்
கடந்து செல்லலையும் சேர்த்து
தாங்கிக் கொள்வதன் பெயர் தான்
தியாகம்..