Monday, 28 April 2025

இல்லியல்..

பிரிவிடைத் துயர்வரா பிணைந்த நெஞ்சம்

அணுவினுள் அடங்கா அனைத்துமாய்ப் பரவி

இல்லையாம் உடலினுள் இருப்பதாம் உணர்வு 

மூக்கினுள் நுழைதந்து முழுநிலா ஆகி

நின்னுயிர்ப் பாவி நிறைந்திடும் என்னுள் 

-

கைத்தலம் பிரிந்தும் கனவினில் தொட்டு

விரல்நுனித் தடத்தில் விரிந்திடும் வெம்மை

இசையிலா அறையினும் இதயத்தின் ஓசை

நின்குரல் தேடி நெளிந்திடும் காதில்

மின்னல்போற் தோன்றி மறையினும் நின்முகம்

கண்ணிமை நொடியில் கனற்றிடும் மனத்தில்

-

சுளையிலா நாவினும் சுவைத்திடும் இன்பம்

இதழ்ப்பரப் பெங்கும் ஈரத்தின் சுவடுகள்

இவ்வுயிர்க் கலப்பே எழுந்திடும் அமைதி

இடையிலா அறிவின் இயல்பின் உரையாடல்

தொலைவிலா அகலம் துலங்கிடும் நின்னொளி

முயங்கலில் சேர்ந்தும் முயங்கலில் பிரிந்தும்

இல்லியல் மீதே எழுகிற துளிர்ப்பு

-

உண்மையுற் றுணர்தல் ஒன்றிய மங்கலம்

உருபொடு சேர்ந்தும் உருவின்றி நின்றும்

இருமையும் கடந்த இயலுணர் அகத்தே

கொம்பினிற் தளிர்போல் குழைந்திடும் உணர்வின்

மென்மையின் தண்டாய் மிளிர்கின்ற பிணைப்பில்

பால்பெயர் கடந்த பாங்கது நிற்க,

உயிரது கரைய உணர்ச்சியில் வாழ்தல்

இவணிது கண்டேன் இதயமார் துணையே..

Wednesday, 16 April 2025

விழுப்புண்ணில் தேச வரைபடம்..

துப்பாக்கி முனையின் கூரிய

கத்திகளால் கிழிக்கப்பட்ட நெஞ்சில்

விழுப்புண்களை ஏந்தி நிற்கும் என்

தேசத்தின் வரைபடம் சுமக்கிறேன்

ஒவ்வொரு காயமும்

என் தேசத்தின் பெயரைச் சொல்கிறது

-

எங்கள் இரத்தம் ஒரே நிறம்

எங்கள் மரணங்கள் ஒரே மொழி

நானும் என் தோழர்களும்

உறங்கும் கனவு ஒன்றே,

நில அபகரிப்பின்

எல்லைகளைக் கடந்த நாங்கள்

மண்ணுக்குப் பதிலாக

பெயர்களை மட்டுமே சுமக்கிறோம்

-

வேர்கள் பறிக்கப்பட்ட மரங்களாய்

தூரத்து நிலத்தில் அலைகிறோம்

ஆனால் துப்பாக்கிகளுக்கிடையே

பூத்த காயங்களில் இருந்து

ஒரு புதிய பாடல் முளைக்கிறது

-

என் தோழர்கள்

சிகரங்களைக் காட்டிலும் உயரமானவர்கள்

இப்போது புல்வெளிகளின் கீழ் கிடக்கிறார்கள்

ஆழ்ந்த மௌனத்தில் உறைந்த அவர்தம் குரல்கள்

காலத்தின் செவிப்பறையில் இன்னும் அதிர்கின்றன

-

இரவில் அவர்கள் நினைவுகளாக வருகிறார்கள்

பகலில் அவர்கள்

உறுதிமொழிகளாக நடக்கிறார்கள்

விடுதலையின் அகராதியில்

அவர்களது பெயர்கள்

வினைச்சொற்களாக உள்ளன

-

இங்கு நான் புலம்பெயர்ந்த நிழல்,

ஒரு மொழியில் இருந்து

மற்றொரு மொழிக்கு அகதியாய் அலைகிறேன்

தேசம் என்பது என் தோள்களிற் சுமக்கும்

நினைவுகளின் கூட்டுத்தொகை

எம் மாவீரர்களின் கண்களில் தெரிந்த எதிர்காலம்

-

நாங்கள் நிழல்களை விட அதிகமானவர்கள்

காயங்களை விட ஆழமானவர்கள்

மரணத்தை விட நிரந்தரமானவர்கள்

ஒரு குண்டின் வழியாக நுழைந்து

வரலாற்றின் வாசல் வழியாக வெளியேறினோம்

-

பகலின் வெளிச்சம்

எங்கள் இருளை அம்பலப்படுத்தவில்லை

குண்டுகளின் சத்தம்

எங்கள் மௌனத்தை அழிக்கவில்லை

இரத்தத்தின் கணிதம்

வெறும் எண்களுக்கு அப்பாற்பட்டது

ஒவ்வொரு துளியும் ஒரு புதிய நாளின் பிறப்பு

-

மரணம் நாங்கள் கடந்த ஒரு வாசல்

விடுதலை நாங்கள் கண்ட ஒரு கனவு

இடைப்பட்ட வெளியில்

நாங்கள் தத்துவங்களாக நிற்கிறோம்

-

காலம் என்ற அமைதியான சாட்சி முன்

நின்று கேட்கிறேன்

இந்த விழுப்புண்களுக்கு என்ன அர்த்தம் ?

என் தோழர்களின் மறைவுக்கு என்ன நியாயம் ?

அவர்களின் இல்லாமை

என்னை நிரப்பும் இந்த இருட்டுக்கு

என்ன பெயர் ?

-

மண்ணின் வாசனையில்

அவர்கள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளனர்

காற்றின் இசையில்

அவர்கள் இன்னும் பேசுகிறார்கள்

விதைகளாய் புதைந்தவர்கள்

வரலாற்றின் விடிவெள்ளியாய் மீள்கிறார்கள்

இதுவே விடுதலைப் போரின் தத்துவம்

-

தோழா..

உயிரைத் தவிர இனத்தின் விடுதலைக்கு

அள்ளிக் கொடுப்பதற்கு

இனி எதுவுமே உன்னிடமில்லை

என்றான பின்னும்

அதே சமூகமே உன்னைக் கண்டுகொள்ளாமல்

கடந்து செல்லலையும் சேர்த்து

தாங்கிக் கொள்வதன் பெயர் தான்

தியாகம்..

Saturday, 5 April 2025

திரும்பக் கூடும்..

வதைகளின் நினைவுகள் எனது தோலில்

அவர்களின் கோரமுகத்தை வரைந்துள்ளன

ஒவ்வொரு வடுவும் ஒரு கதை சொல்கிறது

நான் மரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக

கண்டங்களைக் கடந்தேன்

தேசங்களைத் தாண்டினேன்

-

உடைந்த என் உடல்

இந்த பனிப்பாறைகளில் தவழ்கிறது

ஆனால் என் கனவுகள்

என் மண்ணின் வெப்பத்தில் விளைகின்றன

அங்கே பனை மரங்கள்

என் வருகைக்காக காத்திருக்கின்றன

அங்கே என் காதலியின் கண்கள்

வீதிகளை நோக்குகின்றன

-

என் கைகளில் என்ன எஞ்சியுள்ளது

ஒன்றாய் நடந்த தோழர்கள் படங்கள்

மற்றும் நாங்கள் சேர்ந்து பாடிய

விடுதலையின் பாடல்கள் அவ்வளவுதான்

-

நினைவுகளின் சிறகுகளில் கனவுகளின் பாதைவழி

இரவில் நான் என் தாயகத்திற்கு திரும்புகிறேன்

அங்கே பூக்கும் பூவரசு மரங்களின் மணம்

இங்கே பனிக்காற்றின் குளிரை துடைக்கிறது

-

இந்த பனிபொழியும் தேசத்தில்

என் உடல் உறையலாம்

ஆனால் என் வார்த்தைகள்

என்றென்றும் என் மண்ணின் வெப்பத்தில்

உயிர்பெறும்

நான் இறந்தாலும்

அடுத்த தலைமுறைக்கு விடுதலையின் விதைகளாக

என் கவிதைகள் வாழும்

-

நாளை என் நாடு விடுதலை பெறுமா

கிழக்கிலிருந்து கதிரவன் உதிக்குமா

நான் அதைப் பார்க்காமல் போனாலும்

என் வார்த்தைகள் அந்த காலையை வரவேற்கும்

-

என் காதலியின் கைகள் என்னை தேடுகின்றன

எங்கள் இடையிலுள்ள பெருங்கடலிலும்

எல்லைகளிலும், தடுப்புச் சுவர்களிலும்

காதல் என்ற அந்த அற்புதமான பறவை பறக்கிறது

-

உயிரோடோ அல்லது வார்த்தைகளிலோ

என்றோ ஒருநாள்

நான் திரும்பி வருவேன்

அதுவரை

இந்த பனிப்பெருக்கிற்கிடையில்

என் தாயகத்தின் வெப்பத்தை

நான் மனதில் சுமக்கிறேன்..