பனிபடர்ந்த அந்நிய நிலக்கூரையின்கீழ்
உறக்கம் தொலைத்த தோழனொருவன்
பறிக்கப்பட்ட நம் நாட்காட்டியின்
கிழிந்த தாள்களை
அன்றாடம் அனுப்புகிறான்,
அவை வெறும் நிழற்படங்கள் அல்ல
களத்தில் வீழ்ந்த பெருவீரர்களின்
உறைந்துபோன மூச்சுக்காற்று.
அவர்களின் சுருண்ட முடிக்குள்
நமது ஊர்க் காற்றாடியின் சுழற்சி
இன்னும் நிற்கவில்லை,
விரிந்த மார்புகளில்
எதிர்காலக் குழந்தைகளின் தொட்டிற் கயிறுகள்
அறுபட்டுத் தொங்குகின்றன.
சிமிட்டாத அந்த அழகிய இமைகளுக்குள்
சுடப்படாத செங்கற்களைக் கொண்ட
கட்டப்படாத வீடுகளின் ஈரம்
காயாமல் கிடக்கின்றது,
பல்லாயிரம் இளம்பூக்களைப் பிழிந்து
நிலத்திற்கு உதிரம் ஊட்டியும்
இன்னும் சிவக்கவில்லையே
நம் வைகறை?
தமது வேர்களை மறந்துவிட்டு
நினைவுகளைத் தின்று செரித்த
பொருளற்ற வெற்றுடல்களின்
ஊர்வலத்தைப் பார்க்கையில்
வெறுப்பின் கூரிய நகங்கள்
என் விலா எலும்புகளைக் கீறுகின்றன.
அறம் என்பது
எரியும் காட்டின் மீது பறந்து செல்லும்
செவிடான பறவையின் சிறகசைப்புத் தானா ?
மீண்டும்
அந்த ஒளிரும் முகங்களை
உற்று நோக்குகிறேன்,
அவர்களின் கருமணிகளின் ஆழத்தில்
பழங்காலக் கிணறொன்றின்
குளிர்ந்த அமைதி குடிகொண்டிருக்கிறது,
அந்த இருளில் இருந்து வழியும்
ஒளியின் மெல்லிய நூலிழையைப்
பற்றிக்கொள்கிறேன்,
அந்தப் பார்வையின் துவாரத்தினூடாக
ஒரு பாதை திறக்கிறது
அது, சாவு என்ற சொல்லே இல்லாத
நிலத்திற்குச் செல்லும்
இரகசியப் பாதை..