நீதி தேடும் ஆன்மாக்களின்
அழுத்தம் மண்ணைப் பிளக்கிறது
ஒவ்வொரு மண்வெட்டியும்
நினைவின் அடுக்குகளை உரிக்கிறது
இந்தச் சிவந்த மண்ணில்
காலம் உறைந்து நின்றுவிட்டது
குழியிலும்
தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு
அருகிலேயே இருக்கிறார்கள்
-
நொருங்கிய ஒவ்வொரு விலா எலும்பும்
ஒரு கதையைச் சொல்கிறது,
உடைந்த ஒவ்வொரு மண்டை ஓடும்
கடைசி அலறலை நினைவுபடுத்துகிறது
-
வதையின் வலி தாங்க முடியாத
குழந்தைகளின் சிறிய கைகள்
இன்னும் தங்கள்
தாயின் கையை நோக்கி நீண்டிருக்கின்றன
-
செம்மணி என்ற பெயர்
இன்று வேறொரு அர்த்தம் பெறுகிறது
இரத்தத்தால் சிவந்த மண்,
கண்ணீரால் நனைந்த மண்,
நீதியற்ற மரணங்களின் சாட்சியாக
நிற்கும் மண்
-
ஒவ்வொரு அகழ்வும்
உலகின் மனசாட்சியை கேள்வி கேட்கிறது
எவ்வளவு காலம் நாம் கண்மூடித்தனமாக
இருந்திருக்கிறோம்?
எவ்வளவு குரல்கள்
நம் காதுகளை எட்டாமல்
இந்த மண்ணில் புதைந்துவிட்டன ?
-
தமிழீழ மண்ணின்
ஒவ்வொரு துகளிலும்
இப்படியான கதைகள் மறைந்திருக்கலாம்
காணாமல் போனவர்களின் கனவுகள்
நிறைவேறாத ஆசைகள்
சொல்லப்படாத காதல் கடிதங்கள்
-
இந்தக் கல்லறை
உலகின் கவனத்தைக் கோருகிறது
செம்மணி வழியாக வரலாறு பேசுகிறது
எப்படிக் கொடூரமான மனிதர்களெல்லாம்
இந்த மண்ணில் வாழ்கிறார்களென்பதை
தங்களின் எலும்புகளின் வழியாக
குழந்தைகள் சொல்கிறார்கள்
-
இந்த எலும்புகளைப் பார்த்த பின்னாவது
நீங்கள் திரும்பிப் பார்ப்பீர்களா..?
இதுவெல்லாம் நடக்கும் போது
நீங்கள் எங்கே இருந்தீர்களென
என்றோ ஒருநாள்
குழந்தைகள் உங்களை கேட்க மாட்டார்கள்
என்று நம்புகிறீர்களா..?
-
நாம் அனைவரும் பொறுப்பாளிகள்
மௌனம் காத்தவர்களும்,
கண்மூடித்தனமாக இருந்தவர்களும்,
உண்மையை
மறந்தது போல் இருப்பவர்களும்,
-
இந்த மண் நம்மை விட்டுப் போகாது
இந்த எலும்புகள் நம்மை மன்னிக்காது
எதுவும் அறியாத இந்தக் குழந்தைகள்
நம் மனசாட்சியை விட்டு
ஒருபோதும் வெளியேறமாட்டார்கள்
-
என்னால் முடியவில்லை
உங்களால் முடிகிறதா உறங்க.. ?
No comments:
Post a Comment