Sunday, 24 September 2023

திலீபம்..

சொட்டுச் சொட்டாய் சொட்டி 

காய்கிறது உயிர்ச் சொட்டு 

உறுதியோ 

சொட்டும் வற்றவில்லை 

கற்றாளை கடைசியாய் 

கைபிடித்து வைத்திருக்கும் 

நீர்ச் சொட்டை 

வேருக்கு விடுதல் போல

செயல் குறைந்து செல்லும் 

செல்கள் ஒவ்வொன்றும் 

இறுதிச் சொட்டை 

சோர்ந்த கலங்களின் வாயில் 

சொட்டுகிறது 

உடற் தினவு குறைந்தாலும் 

உயிர்த் தினவு குறையவில்லை 

காற்றைக் கிழித்து வரும்

சன்னம் 

சதையில் கொழுவும் போழ்து 

குளிருமாம், அவர்

வாதையை உணரத் தலைப்படுமுன்

வரலாறு அவரை 

மாவீரரென எழுதிவிடும் 

இஃது அஃதல்ல 

ஒவ்வொரு கலங்கலமாய் கருகிவிழ

விடுதலைக்காய் 

ஐம்பொறியின் உயிர்த் தொடர்பை

உடலினின்று பிரித்தெடுத்து 

தேச விடிவென்ற திசையில் 

மனங் குவித்து 

திண்மைமிகு மனசின் 

தீரத்தால் உடல்வலியை 

கணங்கணமும் தாங்கி 

எரிந்திடுதல்

காந்திமுக அரசியலில் 

சாந்தியிலை தமிழின

சங்காரமே உண்டென 

சத்திய வேள்வியில் 

தன்னை எரித்தான்  

கை, கால்கள் சோர்கையிலும்

மெய் நோக்கம் சோரவில்லை 

குரலுடைந்து போகையிலும்

மனதுடைந்து போகவில்லை 

உடல் சோர்ந்து விழுகையிலும்

உயிர்க் கனவு சோரவில்லை

நினைவறுந்து போனாலும் 

நிலையறுந்து போகவில்லை 

வயிற்றில் இட்ட தீ

வளரும், தமிழ்த் தாகம்

தீரும் வரை அந்தத்

தீயெரியும், அதனொளியில் 

வழிநடப்போர் நடக்க

வழி புலரும் 

மலரும்.. 

No comments:

Post a Comment