Tuesday, 28 July 2020

விடியலுக்கான விதி..

இருள் விலகும் காலமதில் விலகும்
மிகையொலியில்
பூ அவிழும் பொழுதிலது அவிழும்
வானிருண்டு
மழைபொழியும் நேரமதிற் பொழியும்
உயிர்க் கொடையால்
மண்விடியும் பொழுதிலது விடியும்

தேசப் பிறப்பு என்றோ
தீர்மானிக்கப்பட்ட ஒன்று
ஆசீவகம் சொல்லும்
அழிக்கேலா நியதியது

உயிர் வார்த்த கனவு நிலம்
உருத்தோன்றும் வேளைவரத்
தோன்றும், இதன் பூப்பை
எதிரியே அறியாமல்
எம் பொருட்டு வடிவமைப்பான்
உதிரத்தை ஊற்றி
உயிர் கொடுத்த கனாவுக்கு
விதியென்னும் நியதி
வேண்டியதை வழங்கிடல் தான்
விதியாய் ஆகட்டும் என்பதென்
வேண்டுதல்
எந்தனின் ஆயுட் காலத்துள்
அந்த வரம் வருமோ அறியேன்
அதால்

விதியே அவ் விதிதன்னை
என்று நீ விதித்துள்ளாய்..?

Sunday, 12 July 2020

இவன் சாகான்..

பட்டியலுள் அகப்பட்டு
பரிதாபமாக்கப்படும்
முட்டாளாய் இருக்க அவன் விரும்பவில்லை
அவன் படைப்பு
அண்ணாந்து பார்த்துச் சும்மா
அலங்கரிக்கப் பட்டதல்ல
மண்ணில் புரண்டெழுந்து
மார்கொடுத்து முடிந்தவரை
தன்னைக் கொடுத்து
தான் எரித்து வனைந்ததடா

உண்மையும் உயிர்ச் செறிவும்
ஒருங்குவரும் ஓசைகளும்
என்ன,அதை எப்படிப் படிப்பதென்றே
இன்னும் அறியார் இந்த
இடிமாட்டு விமர்சகர்கள்

பாசாங்கறியாத
பட்டவனின் பாட்டுக்கு
படிமந்தெரியாது
பட்டதொன்றே தெரியுமடா
வீசுங்காலம் அவன்
வேண்டியதை விடுதலையின்
பேசுபொருளாக்கும் அன்றும்
விண்ணாண விமர்சனங்கள்
தூசாய்க் கூட எங்கும்
தொங்காது அறிந்திடுக..


Wednesday, 8 July 2020

பரமசுகம்..

பூத்து நாளாகியும்
பொலிவொழுகும் முகத்தோடு
முட்டைக் கண் சுழன்றழைக்கும்
முன்னிரவுக் கனா

வனத்தியவள் கையில் வாளோடு
முட்டு ஆனால் பட்டுதென்றால்
வெட்டென்றாள்

கொட்டும் பெருமழைநான்
நீயோ குடையின்றி
சொட்டும் நனையாமல் செல்லோணும்
மீறியொரு
எட்டு நான் வைத்தாலும்
இரேன் கனவிலென்றாள்

பட்டுத் தெளிந்தவன் நான் பெளவியமே
அறிவாயா..
படாமல் முட்டுகின்ற பதமும்
பரம சுகம்..