Friday 23 September 2016

மடி குளிரும்..

எமக்கான கொடியை இன்னும்
ஏற்றுகிறேன், பக்கத்தில்
இணைந்து நிற்கத்தான் நீங்களிலை
அசைந்தெழுந்து
ஏறுகின்ற செம்பாடல்
பாடுகின்றேன், ஒன்றாக
இசைந்து பாடத்தான் எவருமிலை
தலை நிமிர்த்தி
அகவணக்கம் செய்துருகி
எண்ணுகிறேன், நிரையாக
அடுத்தடுத்து நிற்கத்தான்
ஆட்களிலை, இது போல

தனித்துப்போய் கண்டத்
தகடுகளின் கோடிகளில்
தங்களுக்குள் கொடியேற்றி
தங்களுக்குள் பாட்டிசைத்து
தமக்கான தேசத்தை
தம் அறையுள் வடிவமைத்து
தாகத்தோடின்னும்
தவமிருப்போர் ஆயிரம் பேர்

பொறுமையாய் இருந்தாலும்
பூசலாராய் இருக்கின்றோம்
மனசின் அகக் காட்சி
மலர்ந்து விடிந்தொரு நாள்
மண்ணின் யுகக் காட்சியாகும்
மடி குளிரும்.. 

No comments:

Post a Comment