Friday 2 September 2016

இதமான இரகசியங்கள்..

இளமழையில் துளிர்த்து
அழகுப் பசுமையாய் காற்றிலாடி
காயும், பூவுமாய் கண் நிறைந்து
பின்னோர் நாள்
பழுத்து காம்புடைந்து
சொல்லாத நினைவுடன்
மண் வீழும் இலையாய்

நீல வான் திரையில்
வெள்ளை ஓவியமாய் மிதந்து
கணமெனினும் வாழ்ந்து
பேசாத கதைகளுடன்
கலைந்து சென்றுவிடும்
முகிலாய்

கடலோடு கடலாகக் கிடந்து
காற்றணைக்க மெய்சிலிர்தெழுந்து
மூச்சிரைக்க
கரை நீவித் தழுவி அந்தக்
கதையெதுவுங்  காட்டாமல்
பின் வாங்கிச் சென்றுவிடும்
பேரலையாய்

வெளியில் சொல்லாமல்
விடைபெற்றுச் செல்கின்ற
எத்தனை கதைகளுண்டு எம்முள்?
கொடுப்புள் சிரிப்பாயும்
கண்ணோரம் கசியும்
கனநினைவுத் துமிப்பாயும்
மிண்டித் தொண்டைக்குள்
விழுங்குமுமிழ் நீராயும்
இதமான,கனமான
எத்தனை இரகசியங்கள்
எங்குமே தெரிதலின்றி
எம்மோடே முடிகிறது..

1 comment:

  1. அருமையான பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete