Thursday 18 June 2020

அழகென்பது...

பூக்களும், தேனீக்களும், வெம்மையுமாய்
பூரித்துப் போய்க் கிடக்கிறது
வசந்த காலம்

இன்னும் சில போழ்தில்
இளங்காற்றுக் குளிர்காவ
அழகாகிச் சிவந்து
வாழ்ந்திருந்த கிளை விட்டு வழுக்கி
பொன்னிலைகள் பூமியெங்கும் புரளும்
அதை ரசிக்க
நிர்வாணமாய் மரங்கொள்ளும் நிலை
தனி அழகு

நாளுருள
பூவாகிப் பனி பொழியும்
எந்தக் கறையுமற்ற வெண்விரிப்பாய்
பாலாறாய், மலை ஒளிரும்
பனிக்கால அழகே
பாரழகு

குளிர் கரைய
மென்வெம்மை அதைக் குலவி
இதமான கணப்பாய் மெல்ல நகும்
இளவேனில்,
எங்கு பார்த்தாலும்
இதழவிழும் மொட்டுக்கள்
புத்துணர்ச்சி நிறைந்த புதுக்காற்று
தம்பளப்பூச்சிகளும்
தவழ்ந்தோடும் குருளைகளும்
அப்பப்பா..,
இளவேனில் அழகோ என்றைக்கும் மறக்காத
பதின்மத்தில் முதற்பார்த்த பருவத்தின்
மாரழகு.

என் இனிய பிரியமே

பாலுக்கு முட்டும்
குழந்தையின் முகமாய்
பருவங்கள் எப்போதுமே
அழகானவை தான்

ஆதலால் புரிந்துகொள்
அழகென்பது பருவத்தில் மட்டுமில்லை
மனத்திலும்..


1 comment: