Saturday 2 July 2016

விடுதலைப் போராட்டம் நெடிது..

நண்பா!,
நீ எத்தனை நெருப்பாற்றை
நீந்திக் கடந்தாய் என்பது பற்றி
எவரும் கேட்கப் போவதில்லை
இறுதியில் நீ வென்றாயா
என்பது மட்டும் தான்
விவாதிக்கப்படும்

தோல்விக்கான காரணங்களை மட்டுமே
தோண்டிக் கொண்டிருப்பவர்கள்
எப்போதுமே தோள் கொடுத்தவர்களாக
இருக்க மாட்டார்கள்

விடுதலைப் போராட்டத்தின் வெற்றியென்பது
காலையில் சாளரத்தை திறந்தவுடன்
கை நீட்டும் சூரியக் கதிரல்ல
மாறாக
என் நண்பனொருவன் தன் பழத்தோட்டத்தில்
முப்பது ஆண்டுக்குப் பின் பயன் தருமென
தன் மகனுக்காக நாட்டத் துவங்கியிருக்கும்
செம்மரங்களைப் போன்றது

நூற்றாண்டு நின்று நிழல் தரப்போகும்
விதைகளை ஊன்றிய கரங்கள்
ஒருபோதுமே அவற்றை
தமக்கென்றெண்ணித் தாட்டதில்லை
நமக்கென்று சொல்லியே நட்டார்கள்
உரிய காலம்வர அது
உயர்ந்து வளரும்
அதுவரை
அப்படிமிப்படியுமாய் பேச்சுக்கள்
அடிபட்டுக் கொண்டிருக்கட்டும்.. 

1 comment:

  1. அருமையான வரிகள்

    கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
    http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

    ReplyDelete