Saturday 5 March 2016

ஊற்றைப் போல் நுரைக்கட்டும் உறவு..

தோட்டமும் எங்கும்
தொங்குகின்ற பழக்குலையும்
பாட்டும், செவிக்கரையை
பதமாகக் கவ்வுகின்ற
காற்றும், காதலுமாய்
கண்ணை விட அழகாக
நேற்றென் வளவுந்தான்
நிறைவொழுக இருந்ததடி

கரும் நச்சுப் புகையெழுந்து
காலத்தின் உள் நுளைய
அருந்தவ வாழ்வெறிந்து
ஆலவிடங் கழுத்தணிந்து
எரிகின்ற வயல்தாண்டி
ஏறிவந்து பார்க்கையிலே
தெரிந்தவரும் எவருமில்லை
திக்கிடமும் தெரியவில்லை

வளவும் தரிசாகி வறள
வான் பார்த்து
அழவும் முடியாமல்
அடுத்த நிலை புரியாமல்
இழவு வீட்டின்
இடியுண்ட முகந்தாங்கி
எழவே இயலாமல்
இருண்டிருந்த நிலம் மீதில்
உலகாய் ஓர் துளி
உருண்டதடி, என்ன இது

கண்ணீரா, நீரா
கனவா, நிசந்தானா?
எண்ணிப் பார்க்கவும்
இதயத்தில் பலமில்லை
கண்ணீரில்லை ஏனெனில்
கரிக்கவில்லை, அண்ணாந்தேன்
விண்ணீர் தான் மெதுமெதுவாய்
விழுந்தணைக்கத் தொடங்கிற்று

என்னிலமும் கூட
இனிப் பச்சை நிறமாகும்!
உன்வரவே அதற்கு
உரமாகும் - என்னினிய
காற்றே எனையிறுக்கிக்
கட்டிக் கொள், என்றைக்கும்
ஊற்றைப் போல் நுரைக்கட்டும்
உறவு..

No comments:

Post a Comment