ஒவ்வொரு முறையும் விளாசி எரிந்த
காட்டுத் தீயின் பின்னும்
முளைக்கும் இளந்தளிராய்
இருந்தீர்
இயந்திரங்களாலேயே உடைக்க முடியாத
பாறைகளை பிளக்கும்
வேரின் வீரியமாய் மனத்திடம்
"எங்கும் செல்வோம், எதிலும் வெல்வோம்"
என்பதுவாய்
ஊறிக்கொண்டே இருந்தது
ஓர்மத்தினவு
நூற்றாண்டுகளாய் மோதி மோதியும்
முயல்வை இழக்காத அலைகளாய் இருந்தீர்
கடலும் கூட வற்றிவிடலாமென்பது
கற்பனையில் கூட இருந்திருக்கவில்லை
கடைசி வேட்டும் தீர்ந்து
மண்டி இருந்த கந்தகப் புகையும்
விலகிய போது
கண் முன்னே வீரயுகம்
கனவாய் முடிந்து போனது
எரிந்த காட்டுத் தீயில்
தீய்ந்தபடி வெளியில் வரும்
உயிரினத்தில் ஒன்றாய்
எஞ்சிய நாம் அலைந்து திரிகிறோம்
விண்ணில் மீனாக
நீங்கள்
மண்ணில் வீணாக
நாங்கள்..