கருக்கட்டிய மேகத்தின்
பன்னீர்க் குடம் உடைந்த போதில்
மழை வேண்டி அவர்கள்
யாகம் தொடங்கினர்
கனிந்த பழம்
காம்பிலிருந்து கழன்ற வேளையில்
எழுந்தமானமாயொருவன்
மரத்துக்கு கல்லை வீசினான்
அலைகள் வேகமாய்
கரையில் அடித்த போது
கடலில் நீந்திக் கொண்டிருந்தவன்
கையை ஓங்கி அடித்தான்
நூற்றாண்டுப் பெருமரத்தின் முதுவேர்கள்
பற்றியிருந்த மண்ணிலிருந்து
தம்மை விடுவித்த போதில்
அப்பால் வந்த ஒருவன்
கால்களைக் காற்றில் உதைத்தான்
இப்படித் தான்
தாமாய் நடப்பதை
தம்மால் நடப்பதாய்..