Sunday 1 April 2012

தப்படா இந்தப் பிறப்பு..

பிரிவுத் தீயின் வெறுப்புத் தழலில்
பிறக்கும் விரக்தித் தணற்ப் படுக்கை

உடலாய் ஆகி உயிரைக் கருக்கும்
உயிரின் உள்ளம் உருகி விழும்

மழலைப் பேச்சை மயக்கும் சிரிப்பை
மைல் பல தாண்டி வைத்து விட்டு

உழலும் வாழ்வில் ஓர்மம் சிதற
உறவின் பாசம் ஓங்கி அழும்

எப்படா வருவாய் என்றவள் கேட்ட
இமைப்பில் நெற்றிப் பொட்டுடைந்து

ஆக்ஞை திறந்து அன்பின் சுனையால்
ஆவி வழிந்து பறந்து சென்று

என்பை உருக்கும் படியாய் இறுக்கி
இயன்ற வரைக்கும் உயிர் அணைக்கும்

இங்கே உடலோ அந்தச் சுகத்தை
எண்ணிப் பிதற்றி மனம் பிறழ்ந்து

தற்கொலை செய்யவும் எண்ணும் ஆனால்
தளிரின் சிரிப்புத் தடுத்து விடும்

எப்படா அந்தச் சிரிப்பும் அணைப்பும்
எந்தனைச் சேரும் சொல் முருகா!

தப்படா இந்தப் பிறப்பு மேலும்
தவறடா இத்தகை வாழ்வு எங்களை

எப்படா சேர்ப்பாய் என்னுயிர் தன்னை
எப்படா மீட்பாய் வேலா..

No comments:

Post a Comment