Sunday 4 October 2015

உயிர்த்தெழல்..

குண்டு துளைத்துத் தலை பிளந்து
சிதறிக்கிடந்த
நண்பனின் மூளைபோல்
வாசலில் கொட்டிக் கிடக்கும்
இந்தப் பனிக்காலத்திலும் கூட
நினைவுகளை 
நான் பறிகொடுக்கப் போவதில்லை

கால மத்துக் கடைந்த 
மனப்பாலில் திரண்டு பிறப்பது
சித்தப்பிரமை தானென்பதை 
கொத்தாய்க் கொல்லப்பட்ட 
என் மக்களின் காய்ந்த குருதியாய்
பழுத்து இலைகள் வீழும் 
இந்தப் பருவத்திலும்
நான் நம்ப மாட்டேன் 

குளிர் காற்றைக் கிழித்தபடி
கூட்டமாய்த் திரும்புகிறது பறவைகள்
பேச்சறுந்து போகிறது நாள்
ஏழாண்டு கடந்து இன்றிரவும்
என்னருகில் எவருமில்லை
அடிக்கின்ற அனற்காய்ச்சலுக்கு
கழுத்தில் தொட்டுப் பார்க்க
கையொன்று..?, வழமை போல்
வலக்கை இடக்கையைப் பிடித்து
வைத்துப் பார்க்கிறது 
அதிகாலைப்புல் நுனியில்
ஆவியுயிர்த்த துளியை
படம் பிடித்த கண்மணி
இப்போது ஏனதனை  
இமையோரம் உருட்டி விடுகிறது..? 

எச்சில் தொண்டையால் இறங்கொணாது 
இடறுகின்ற வேளையில் தான்    
'உன்னுடைய பாரங்களை 
என்னில் இறக்கி வைத்து இளைப்பாறென'
எங்கிருந்தோ வந்தவோர் தேவதூதன் 
தாளில் எனையேந்தித் தாங்குகிறான்

இப்படித்தான் நிகழ்கிறது
உச்சம் தொடும் பெண்ணின் யோனியாய்
ஈரலிப்பாய், இதழிதழாய் 
கவிதையொன்று அவிழ்கிற போது
உலகு உயிர்த்தெழுகின்ற
அதிசயம்..