Sunday 19 June 2016

சாவும் கவிதையும்..

உணர்வில் மூழ்கி
உலகை மறந்து
அதுவே நானாய் ஆகி
கவிதை வனைவதைப் போல
சாவையும் வரைகிறேன்

இப்படித் தொடங்கும் கவிதை
எப்படித் தொடரும்
அடுத்த வரியெது? முடிவெது?
இடையிலே
எப்படிக் காட்சிகள் இணையும்?
அறிகிலேன்,

அப்படியேதான் சாவும்,
அழகாய், உணர்வாய்
அத்துணை அர்த்தமாய்
எண்ணியே பார்த்திரா
எத்தினை காட்சிகள்
இணைய, இணைய
இத்துணை தூரமும்
இயல்பாய் இணைந்து வந்தது

தவிரவும்
அர்த்தக் கவிதையும், சாவும் எப்பவும்
அத்துணை நீட்டினால்
அழகிலை, அறிக!

ஆனாலென் கவி
முடிக்கும் வரிகளில்
முழுதாயென் உயிர் சுடர்ந்து
துடிப்பதே என் முகம், முத்திரை
அஃதுவாய்
சாவு என்னுடை
படலையைச் சாத்தையில்
யாவும் நிகழணும்
யாசகம் வேறிலை.. 

மேகம் நினைவாய் மிதக்கிறது..

உண்மைதான் பிரியமே
இல்லாத போது தான்
இருந்ததை உணர்கிறேன்

காட்சி கலங்கிப் போனது
காலம் உருண்டு வீழ்ந்தது
நாசியிலிருந்து மட்டும் இன்னும்
நகரவே இல்லை
நம் சுகிப்பில் அன்றவிழ்ந்த
நன் மணம்

ஓக்மர இலையை ஒடித்து
ஊர்க்கிழுவையை முகர்வதும்
அடைத்த புட்டிப் பாலிலே
ஆட்டுப்பால் மொச்சையை
அனுபவிப்பதுமாக

இருப்பதிற் தேடித்தேடி
இழந்ததை முகர்கிறது
மூக்கு

வாழ்ந்தது பட்டம்
வாசனை அதன் நூல்
வழுக்கி அதைவிட மனமிலாதின்றும்
வலிக்கிறதென் கை
அண்ணாந்து பார்க்கவோ
அத்தனை அழகு

விண்கூவத் தொடங்கிற்று..